Thursday, July 15, 2010


விடுதலை வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், மக்களால், மக்களுக்காக,   மக்களைக் கொண்டு மாறிமாறி தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த கட்சிகளைச் சேர்ந்த அரசுகளாய் இருந்தாலும் அவை வருடம் தவறாமல் புதிய நலத் திட்டங்களை வெளியிட்டும் பல பழையத் திட்டங்களை விரிவுபடுத்தியும் வந்துள்ளன.

அந்த வகையில், 2009-10ஆம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை அறிக்கையின்படி வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள சமூகங்கள், நல வாரிய உறுப்பினர்களின் குடும் பங்கள், அரசு அலுவலர்கள் என்று எல்லாவகை மக்களுக் கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள், வேளாண் கடன் வட்டி ரத்து, பயிர்க்காப்பீட்டுத்திட்டம், புதிய கல்லூரிகள், மருத்துவ முகாம்கள், தொழிலாளர்களுக்குத் தங்கும் இடங்கள், ஊரக வளர்ச்சித் துறையில் பல புதிய திட்டங் கள், ஒரு இலட்சம் சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, நல வாரியங்கள், பல பொருட்களுக்கு வரிவிலக்கு, அதிக எண்ணிக்கையில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், மேலும், பலப்பல இலவசங்கள் என்று இன்றைய அரசின் திட்டங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். மற்ற மாநில அரசுகளை முந்திக்கொண்டு மாநில அரசுப் பணியாளர்களுக்கு ஆறாவது சம்பளக் கமிஷன் பரிந்துரையின்படி, மிகப்பெரிய சம்பள உயர்வு, ஓய்வூதியம் ஆகியவற்றைப் பண நெருக்கடியையும் பொருட்படுத்தாது அளிக்க தமிழக அரசு முன் வந்துள்ளது.

ஆயிரக்கணக்கான நிலமற்ற ஏழைகளுக்கு நிலமும், வேளாண் மக்களுக்கு பலவகை உதவிகளையும் அரசு அளித்து வருகிறது. ஆனால் சிறு விவசாயிகள், உழவர் சந்தைகளில் விளை பொருட்களை விற்று வந்த பணத்தையும், விவசாயக் கூலிகள் உழைத்துக் கிடைத்த பணத்தையும் உழவர் சந்தைகளுக்கு அருகில் உள்ள அரசு மதுக்கடைகள் மூலம் அரசுக்கே தாரை வார்த்து  விடுகின்றனர். விதை நெல்லைக்கூட விற்றுக் குடித்து விட்டு நடைப்பிணமாக வீட்டிற்குத் திரும்புவது வாடிக்கையாகி விட்டது.

தீவிரவாதத்தைக் காவல் துறை மூலம் அடக்கி வைத்திருப்பதாகவும், காவல்துறையின் நலன் காக்க மூன்றாவது போலீஸ் கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறுகிறது தமிழக அரசு. ஆனால் என்றும் இல்லாவண்ணம் அதிக அளவில் பல காவலர்கள் இரத்த அழுத்தம், கல்லீரல் பாதிப்பு, மன அழுத்தம் போன்றவற்றாலும், சிலர் எச்.ஐ.வி. நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வந்துள்ளன.இந்நிலைக்கு, அவர்களது  வேலையின் தன்மையால் பெரு மளவில் மாறிவிட்ட வாழ்க்கை முறையும், டாஸ்மாக் மூலம் அதிகரித்துவிட்ட - தீவிரவாதத்தை விட கொடூரமான - குடிப்பழக்கமுமே இந்நிலைக்குக் காரணம்.

மூத்த தமிழ்மொழி, கலை, பண்பாடு, கலாச் சாரம் ஆகியவற்றை அரசு கண்ணெனப் போற்றிக் காப்பதாக நிதிநிலை அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. ஆனால், பல இளை ஞர்கள் மற்றும் விடலைகள், டாஸ்மாக்  செலவிற்காக,  தமிழகத்தின் நகர வீதி களில், மொபைல், தாலிப் பறிப்புகள் மட்டு மின்றி, பல்வேறு சிறிய, பெரிய குற்றங் களில் ஈடுபட்டு வருகிறார்கள். இது       “சட்டம் ஒழுங்கு” என்கிற குறுகிய பார்வை யைத் தாண்டி, அரசின் தவறான கொள்கை யால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் “பண்பாட்டு, சமூகச் சீரழிவின் ஒரு சிறிய பகுதி” என் கருத வேண்டும்.

வேலையற்ற இளைஞர்களுக்கு அரசு அளிக்கும் உதவித் தொகை, கணிசமாக, அரசு மதுக்கடைகள் மூலம் மீண்டும் அரசிடம் வருவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

வரலாறு காணாத அளவில் நடுவண் அரசிடம் அதிக நிதி பெற்று “அனைவரு க்கும் கல்வி” “தேசிய இடை நிலைக் கல்வித் திட்டம்” எனப் பள்ளிக் கல்விக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள தமிழக அரசு பாராட்டுக்குறியது. ஆயினும், “21 வயது நிரம்பியவர் மட்டுமே மது வாங்கலாம்”  என்று சட்டம் ஏற்படுத்திவிட்டு, நடைமுறையில் சீருடை அணிந்த, அணியாத பள்ளிச் சிறுவர்கள்கூட டாஸ்மாக் கடைகளில் இரண்டறக் கலப்பதைக் கண்டும் காணாமல் இருப்பது முறையல்லவே!

குழந்தைத் தொழிலாளர்கள், முச்சந்தி தோறும் குழந்தைப் பிச்சைக்காரர்கள், ஆங்காங்கே தொடங்கப்படுகிற ஆதரவற்றோர் இல்லங்கள்ஆகியவை பெருகுவதற்கும் மாநில அரசு டாஸ்மாக் மூலம் எதிர்பார்க்கும் ரூ. 12,000 கோடிக்கும் மேற்பட்ட வருவாய்க்கும் உள்ள தொடர்பு -ஆராய்ச்சி செய்தால் இன்னும் உறுதிப்படலாம்.

நோய்களைஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற உதவும் முன்னோடித் திட்டமான “வருமுன் காப்போம் திட்டம்” மூலம் கடந்த வருடமும் இந்த வருடமுமாகச் சேர்த்து 13,500 முகாம்கள் நடத்தப்படுவதாக நிதி அமைச்சர் கூறுகிறார்.

ஆனால், முதல், இரண்டாவது மற்றும் தீவிரமான மூன்றாவது கட்டம் என்று பள்ளிச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இலட்சக் கணக்கானோர் குடிநோயில் சிக்கித் தவித்தாலும், மதுப்புழக்கத்தை மற்ற நோகளுக்கான முதன்மைக் காரணியாகப் பார்க்காமல், வருமுன் காக்காமல், வருமானமாகவே அரசு பார்ப்பது மிகவும் விசித்திரமாகவும் வேதனையாகவும் உள்ளது.

2005-06ஆம்ஆண்டில்,  ரூ. 1,487 கோடியாக இருந்த மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான ஒதுக்கீடு 2009-10 ஆம் ஆண்டு ரூ. 3,391 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், 125 மருத்துவ மனைகள் அவசரச் சிகிச்சை மையங்களாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

ஆயினும், பெருகிவரும் மது விற்பனையால், பல்வேறு வகை நோய்கள், மிகப் பெரிய அளவில்   சாலை விபத்துக்கள், தற்கொலைகள், மனநோய்கள் ஆகியவற்றை சமாளிக்கவே மருத்துவத் துறையின் அவசரச் சிகிச்சை நிபுணர்களின் பெரும்பாலான சக்தி விரயமாகி வருகிறது என்பது ஏன் அரசுக்கு புரிந்தும் புரியாமல் உள்ளது?

எல்லாவகை அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்காவும் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக அரசு கூறுகிறது.  ஆயினும்,  கட்டடத் தொழிலாளர்கள் பணியின் போது அடிக்கடி விபத்துக்குள்ளாவதற்கும், மீனவர்கள் நீர் நிலைகளில் மூழ்கி இறப்பதற்கும் குடிவெறி ஒரு முக்கிய காரணியாகி வருகிறதே! இந்நிலையை மாற்றுவது அரசின் கடமை யாகும்.கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கு மகப்பேறுகால உதவித்திட்டம்,மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித் திட்டம்,குழந்தைகளுக்கு முட்டை வழங்கும் திட்டம் போன்றவற்றிற்காக அதிக நிதி அறிவித்தாலும்,  இத்திட்டங்களின் தாக்கம் ஓரளவுக்குத்தான் இருக்கும்.  கர்ப்பிணிப் பெண்களின் கருக் கலைப்பிற்கும்,இரத்தசோகைக்கும், எடை குறைந்து குழந்தைகள் பிறப்பதற்கும்,பிறந்த குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் நோய்நொடிகளால் பீடிக்கப்படுவதற்கும் முக்கிய காரணம், கணவரின் சொற்ப வரு மானம் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் கரைவதனால் அல்ல என்று அரசு விளக்கம் அளிக்க முடியுமா?

தமிழகம் முழுவதும் 104,42,500 குடும்பங்களுக்கு மும்முரமாக, நான்கு கட்டங்களில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தமிழகஅரசு விநியோகித்து வருகிறது. ஒரு வேளை, வீட்டு ஆண்மகன்கள், குடும்ப மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் டாஸ்மாக் விடுதிகளில் தொலைத்து விட்டு வருவதால் எழும் நிஜவுலகத்துக்கத்தை, வண்ணத் தொலைக்காட்சியின் கனவுலகம் மூலம் மறக்கடிக்க, மழுங்கடிக்க குடும்பப் பெண்களுக்கு உதவும் திட்டம் இது என்று ஓருக்கால் அரசு நினைத்துவிட்டதோ என்னவோ?

உலக வங்கி, ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமை, ஜெர்மனி நாட்டு நிறுவனம் ஆகியவற்றின் நிதி உதவியுடன், தமிழக நகராட்சிகளில் விரைவாக பாதாளச் சாக்கடைத் திட்டங்களை நிறைவேற்ற உள்ளதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

ஆனால்,இவ்வகைப் பாதாளச் சாக்கடைகளில் முத்துக் குளிப்பது, ஊராட்சிகளில் செத்த கால்நடைகளை அப்புறப்படுத்து வது, பிணவறைகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளுக் காகவே ஒரு சமூகத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, “தூய்மைப்பணி புரிவோர்” என்று அழகு தமிழில் கூப்பிட்டுக் கொண்டே, அவர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாகவே நிலைநிறுத்தி வேலை வாங்குவதற்கு, அரசுத் துறை அலுவலர்கள் மூலமே, மது ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களைக் கட்டி சாதியை ஒழித்து விட நினைக்கிறது அரசு. சாதி, மதம், ஏன் - வயது வித்தியாசம்கூட இல்லாமல் எல்லா ஆண்களும் சங்கமம் ஆவது அதிகரித்து வருவதால், மதுவிடுதிகளையும் சமத்துவ புரங்களாக கருதுகிறதோ அரசு?

“மதுத் தீர்வை மூலம் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித் தருவது” என்றே டாஸ்மாக் நிறுவனம் கொள்கை விளக்கம் அளித்துள்ளது. மாநில அரசு வருவாயில் கிட்டத்தட்ட 30         சதவீத அளவிற்குக் கிடைக்கும் சாராய வருவாயானது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப், ஓய்வூதியம், ஆறாவது சம்பளக் கமிஷன் என்று எதுவுமே இல்லாத அமைப்பு சாராகூலித் தொழிலாளர்களும், மீனவர்களும், நெசவாளர்களும், இளைஞர்களும் கொடுத்ததே.

எனவே, “டாஸ்மாக்” என்கிற அரசு நிறுவனமானது, பன்னாட்டு, உள்நாட்டுச்சாராய அதிபர்களின் துணையோடு, தமிழகமெங்கும் எட்டாயிரத்திற்கும் அதிகமான ஆக்டோபஸ்கிளைகளைப் பரப்பி, எல்லாப் பிரிவு மக்களின் இரத்தத்தையும், பொருளாதாரத்தையும் உறிஞ்சி, ராட்சஸ மரமாக விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதன் நிழலில் இலவசங்கள், நலத்திட்டங்கள் என்கிற உரங்களின் உதவியுடன், சமத்துவமான சமூகப் பயிர்கள் வளரும் என்று தமிழக அரசு கூறுவது, பொதுஅறிவுக்கும், பகுத் தறிவுக்கும், உண்மையான நாட்டுப் பற்றுக்கும் விடப்பட்ட சவால் என்பதே உரைகல்லில் உரசிப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் உண்மையாக இருக்க முடியும்.

No comments:

Post a Comment