Wednesday, July 14, 2010





கடந்த மாதம், பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தினத்தை கோலாகலமாகக் கொண்டாடின தமிழக அரசும், அரசியல் கட்சிகளும். இம்மாதமும் வழக்கம்போல, காந்தி ஜெயந்தியைக் கொண்டாடுகிறோம். இதேபோல் தான், பெரியார் பிறந்த தினம், அம்பேத்கர் ஜெயந்தி என்று பலரும் இந்த தினங்களை ஒரு சம்பிரதாயம் போல் மாற்றிவிட்டோம்.
கடவுள்கள் பெயரில் போலிச்சாமியார்களும், கோவில்களைச் சேர்ந்த சிலரும் அறியாத மக்களைச் சுரண்டுகிறார்களோ அதேபோல், தங்களை நிலைநிறுத்திக் கொண்டு மக்களைச் சுரண்டுவதற்கு அந்தந்த இயக்கங்கள் பெயரில் போலித் தலைவர்கள், இப்பெரியவர்களின் பெயர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
அதேபோல, காந்தியத்திலும் அம்பேத்கரியத்திலும், பெரியாரின், அண்ணாவின் உண்மை மிகுந்த கொள்கைகளின் மேலும் தங்களுக்கே நம்பிக்கையில்லாமல், அவற்றை காற்றில் பறக்க விட்டுவிட்டார்கள் அரசியல்வாதிகள். ஆனால், இந்தப் பெரியோர்களின் அதீத பிம்பத்தை மட்டும் தங்கள் இலாபத்திற்காக தூக்கிப்பிடித்து வருகின்றனர். உதாரணமாக காந்தியும், அம்பேத்கரும், பெரியாரும், அண்ணாவும் ஒருவருக்கொருவர் கருத்தியல் ரீதியாக வேறுபாடுகள் இருந்தாலும், வெவ்வேறு விதமான அரசியலை முன்வைத்திருந்தாலும் ஒரு முக்கியமான புள்ளியில் சந்தித்தனர், உடன்பட்டனர்.
சாராயத்தை ஒரு வருமானமாகப் பார்க்காமல், ஒரு சமூகத்தீமையாகக் கருதியதே அப்புள்ளி. ஆனால், பின்னர் வந்த அரசியல் தலைவர்கள் பணத்திற்காகவும், பதவிக்காகவும் சாராய முதலாகளிடம் விலை போனதோடு, தங்களது கட்சிக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காக சாராய ஒப்பந்தங்களை துருப்புச்சீட்டாகவும் பயன்படுத்தினர்.
இவ்வாறு, கடந்த ஐம்பது ஆண்டுகளாக படிப்படியாக இந்திய இளைஞர்களை, சமுதாயத்தை எப்படி சாராய நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளிவிட்டார்கள் என்பதற்கு சாராய அதிபர் விஜய் மல்லையா போன்றோரின் இன்றைய வெற்றி ஒரு எடுத்துக்காட்டு ஆகும். 
உலகத்தின் மிகப்பெரிய சாராய மன்னராகவும், மக்களவை உறுப்பினராகவும் திகழும், “யுனைடெட் புரூவாரீஸ்” நிறுவனத்தின் தலைவர் விஜய் மல்லையா. அவரை கோவா கடற்கரையை ஒட்டியுள்ள, அவரது மிகப்பிரம்மாண்டமான “வசந்த மாளிகை”யில் வைத்து, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் CNN அமெரிக்க தொலைக்காட்சியின் நிருபர், பேட்டிக்காக சந்தித்தார். விஜய் மல்லையா தனது வெற்றியின் இரகசியத்தை பகிர்ந்து கொள்வதற்கான உரையாடலாக அந்த பேட்டி அமைந்தது.
கோவாவில் உள்ள, அவரது மாளிகையின் சொர்க்க வாசலைத்தாண்டி வரும் எவரும், அதன் மிகுந்த ஆடம்பரத்தைப் பார்த்து, கால்கள் நடுநடுங்கி துவண்டு விழ வேண்டும் என்ற அளவிற்கு, அவராகவே முன்னின்று பார்த்துப்பார்த்து, அந்த மாளிகையை பிரம்மாண்டமாக வடிவமைத்ததாக மல்லையா அப்பொழுது நிருபரிடம் கூறினார்.
மாளிகையின் கம்பீரமான அறைகள், உலகத் தரத்தில் அமைக்கப்பட்ட நீச்சல் குளங்கள் ஆகியவற்றைப் பார்த்து நிஜமாகவே தலை சுற்றிய நிருபரிடம், தான் இதுவரை சேகரித்துள்ள 250  வகை புராதனக் கார்கள், 200 பந்தயக் குதிரைகள், உலகத்தின் எல்லைப்பகுதிகளிலும் வாங்கியுள்ள எஸ்டேட்டுகள், திப்புசுல்தானின் வாள், பல நாடுகளில் இருந்து வாங்கியுள்ள கலைப்பொருட்கள், தங்கத்தால் ஆன ஓவியங்கள் என தன் பல்வேறு சொத்துகளைப் பற்றி பெருமையுடன் விளக்கினார்.
பின்னர் தனது வியாபார வெற்றிக்கான நெளிவு சுளிவுகளைத் தன் தந்தையிடம் இருந்து பாலபாடமாகக் கற்றது பற்றி கூறினார். இந்தியா விடுதலை அடைந்த 1947ம் வருடம், ஆங்கிலேயர்களின் “யுனைடெட் புரூவாஸ்” என்கிற சாராய நிறுவனத்தை, அவரது தந்தை விலைக்கு வாங்கி, திறம்பட நடத்தி வந்தார். பின்னர் 1977ம் ஆண்டு, அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாய், நாடு தழுவிய முழு மதுவிலக்குக் கொள்கை கொண்டு வருவதாகத் திட்டமிட்டார்.  ஆதலால், இந்தியாவில் உள்ள பல மது நிறுவனங்களின் பங்குகள் மிகுந்த வீழ்ச்சியடைந்தன.  அப்பொழுது அந்த மது நிறுவனங்களை, மல்லயாவின் தந்தை, அடிமாட்டு விலைக்கு வாங்கியுள்ளார்.
மதுவிலக்குக் கொள்கையை, மொரார்ஜி அரசு அமுல்படுத்த இருக்கும் நிலையில், நஷ்டமடைந்து வரும் மது நிறுவனங்களைப் போய் ஏன் வாங்குகிறீர்கள் என்று இளைஞரான விஜய் மல்லயா கேட்டதற்கு, “இந்தியாவில் உள்ள அரசுகள், மதுத்தீர்வைகள் மூலம் வருமானம் பார்த்து ருசிகண்டு விட்டன. எனவே மது விலக்கைக் கொண்டு வர அவற்றால் முடியாது, அதனால், இந்தச் சாராய நிறுவனங்களை குறைந்த விலைக்கு வாங்க இதுதான் சரியான நேரம்”என்று தீர்க்க தரிசனத்துடன் அவரது தந்தை விளக்கமளித்துள்ளார்.
தந்தையின் தொழிலில் இறங்கிய பின்னர், 27 வயது இளைஞரான விஜய் மல்லயா, “கிங்ஃபிஷர்” என்னும் மேலைநாட்டு மது பிரான்டை (Brand), வெறும் பத்து இலட்ச ரூபாய் கொடுத்து கையகப்படுத்தியதாகக் கூறினார். பல கல்லூரிகளுக்கும் சென்று, அங்குள்ள, பதினேழிலிருந்து பத்தொன்பது வயதுக்குட்பட்ட, இளைஞர்களிடம் “நீங்கள், பீர் குடிக்க விரும்புகிறீர்களா? எந்த வகையான பீர்கள் குடிப்பது பிடிக்கும்?” என்றெல்லாம் பேசி தனது, “கிங்ஃபிஷர்” பிரான்டை எல்லா இளைஞர்களும் விரும்பத்தக்க வகையில் வளர்த்ததாக, பேட்டியின் போது நினைவு கூர்ந்தார் விஜய் மல்லையா. 

மேலும், “கிங்ஃபிஷர்” பெயரை பிரபலப்படுத்தும் நோக்கில், பல இசை நிகழ்ச்சிகள், எல்லாவகை விளையாட்டுப் போட்டிகள், எல்லா நகரங்களிலும் பேஷன் நிகழ்ச்சிகள், அழகிப் போட்டிகள் என தொடர்ந்து “ஸ்பான்ஸர்” செய்ததைக் கூறி புளகாங்கிதமடைந்தார்.
அதன் விளைவாக கடந்த முப்பது வருடங்களில் இது, “கிங்ஃபிஷர்” என்றாலே, நல்ல வாழ்க்கை, ஜாலியான நேரம் என் இளைஞர்கள் கருதும் அளவிற்கு, இந்தியாவின் மிகப் பிரபலமான, முதன்மையான பிராண்டாக வளர்ந்து விட்டதாக, பெருமைபொங்க  கூறினார்.  
மேலும் கூறுகையில் “உலக அளவிலும், இந்தியாவிலும் தனது இந்திய நிறுவனங்கள் மூலம், பீர் மற்றும் கரும்புக் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகள் நன்றாக விற்பனையாகி வருகின்றன, ஆயினும், பொருளாதார ரீதியில் முன்னேறிவரும் இந்திய இளைஞர்கள், உலகத்தரத்தில் பார்லி அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்காட்ச் விஸ்கியை மிகவும் விரும்புவார்கள் என்று புரிந்தது, ஆதலால் சமீபத்தில் ஸ்காட்லாண்டு நாட்டில் உள்ள, தொன்மையான ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை வாங்கியுள்ளதன் மூலம், உலகின் மிகப்பெரிய மதுநிறுவன அதிபராகி விட்டதாகவும்” நிருபரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
“இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், எல்லோரும் சேமிக்கும் பழக்கத்தை கைவிட்டு, தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருக்கவே விரும்புவதாகவும், இதன் காரணமாக, தங்களது மது வியாபாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாகவும்” மல்லயா அப்போது கூறினார்.
சட்டத்தில் உள்ள ஓட்டையை சாதுர்யமாகப் பயன்படுத்தி, அரசியல்வாதிகள் துணையுடன் அவரால் தனது சாராய பிராண்ட் “கிங்ஃபிஷர்” பெயரிலேயே, ஆகாயவிமான சேவை நிறுவனம் துவங்கி, “கிங்ஃபிஷர்” சாராயத்தை பறந்து, பறந்து உலகளவில் பிரபலப்படுத்த முடிகிறது.
கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் எடுத்து, ஐபிஎல் கிரிக்கெட் கிளப் ஒன்றை மிகச்சுலபமாக நடத்தும் அவரைப் பொருத்தவரை, ஐபிஎல் கிரிக்கெட் அவரது “கிங்ஃபிஷர்” சாராய விற்பனையை அதிகரிக்க உதவும் முதலீடுதான்.  சமீபத்தில்தான் விஜய் மல்லயா, ஒரு தீவையும் விலை பேசி முடித்திருக்கிறார்.
அவரது கோவா வசந்த மாளிகையில் நடக்கும் மது விருந்து கோலாகலக் கொண்டாட்டங்களில் நடிகர் நடிகைகள், மும்பை அழகிகள், எம்.பிக்கள் மற்றும் அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்கிறார்கள்.
மகாத்மா காந்தி பயன்படுத்திய கண்ணாடி, கடிகாரம், பாதணி போன்ற சில பொருட்களை, தம் வசம் வைத்திருந்த ஜேம்ஸ் ஓடிஸ் என்பவர், அப்பொருட்களை சில மாதங்களுக்கு முன் நியூயார்க் நகரத்தில் வைத்து ஏலத்திற்கு விட்டார்.  காந்தியின் பொருட்களை விற்காமல், இந்திய அரசிடமே ஒப்படைக்க வேண்டுமானால், இந்திய அரசு இராணுவத் தடவாளங்களுக்கு மேலும், மேலும் செலவு செய்வதைக் குறைத்து, மக்களின் ஏழ்மையைப் போக்குவதற்கும், அவர்களின் நல்வாழ்வு, சுகாதாரம் ஆகியவற்றிற்கு அதிக நிதி ஒதுக்குவதாக உறுதி அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை அளித்தார், ஓடிஸ். ஆயினும் காந்தியின் பொருட்கள் ஏலத்திற்கு வந்தன.
காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தியும், இந்தியாவின் ஆங்கில தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும், நடுத்தர வர்க்கமும், அரசியல்வாதிகளும் சேர்ந்து நாட்டுப்பற்று பீறிட, எப்படியாவது, காந்தியடிகளின் பொருட்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்று தொடர்ச்சியாக தொலைக்காட்சிச் செய்திகள் மூலமாக, உச்சக்கட்ட கவலையோடு, கருத்துப் பரிமாற்றம் செய்தார்கள். அவர்களது கவலையைப் போக்கும் விதமாக, விஜய்மல்லயா, 1.6 இலட்சம் அமெரிக்க டாலர்கள் (ரூ. 80 இலட்சம்) கொடுத்து, காந்தியின் பொருட்களை ஏலத்தில் மீட்டெடுத்தார். எல்லோரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார்கள்.  அகிம்சையை நினைவூட்டும் காந்தியின் நினைவுச் சின்னங்களை மீட்ட மல்லயாவிற்கு நன்றி சொன்னார்கள்.
காந்தியைக் காப்பாற்ற....மன்னிக்கவும்..., காந்தியின் பொருட்களைக் காப்பாற்ற, சாராயப் பணமா? என்கிற சிறிய கூச்சம் கூட இன்றி, இந்திய அரசு தான், மறைமுகமாக விஜய் மல்லயா மூலம் ஏலத்தில் வாங்கியதாகக் கூறியது காங்கிரஸ். கடந்த மாதம், மற்ற சில பொருட்கள் அயல் நாடுகளில் ஏலத்திற்கு வந்தது. ஏனோ இம்முறை, இந்தக் காந்திப் பற்றாளர்களும், சாராய அதிபர்களும் இதனைப் பெரிதுபடுத்தவில்லை.
சாராயம் இருக்கும் வரை, இந்தியாவில் அகிம்சை எப்படி இருக்க முடியும் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. கோடிக்கணக்கான இளைஞர்களையும், குடும்பங்களையும் நிர்மூலமாக்கும் சாராய வியாபாரம் மூலமாக மட்டும், இன்று, 5 பில்லியன் டாலர் (ரூ. 25,000- கோடி) அளவிற்கும் மேலாக சொத்து மதிப்புள்ள மல்லயாவிற்கு, ரூ. 80  இலட்சம் என்பது  சில்லரைக்காசு. “அதனாலென்ன? சட்டத்திற்கு உட்பட்ட வியாபாரம் தானே அவர் செய்கிறார்” என்று விளக்கமளித்தனர். சரிதான். உப்பிற்கு வரி என்பது சட்டத்திற்கு உட்பட்டதா இருந்தாலும்,   நீதிக்கும், நியாயத்திற்கும் எதிர்மறையாக இருந்தால், அந்த சட்டத்தைக் கூட மீறலாம் என்கிற காந்தியச் சிந்தனையை ஏன் நாம் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும்? 
அரசாங்கமே மக்கள் நலன் பற்றிய சிந்தனை இல்லாமல் சாராய வியாபாரம் செய்து, 30 சதவீத அளவிற்கு அரசு கஜானாவை நிரப்புகின்ற இழிநிலை உள்ள காலகட்டத்தில் இருந்து கொண்டு, நீதியையும், நியாயத்தையும், ஒழுக்கத்தையும் பற்றி பேசுவதற்கு நமக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை தானே?  துரதிர்ஷ்டவசமாக, கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள், சட்டத்திற்கு உட்பட்ட தொழில்களாக இல்லாமல் போய்விட்டன.  இல்லையென்றால், மல்லயா போன்றவர்களின் புண்ணியத்தில், அரசே நடத்தும் மது போதை நிறுவனங்கள் மூலமாக, கஞ்சா, போதை ஊசி என்று இரத்தச் சகதி மிகுந்த கடைபரப்பி , மாநில அரசுகளும், தங்களது நிதிநிலை அறிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமான பெரும் புரட்சி கொண்டு வந்திருப்பார்கள். அண்ணா பிறந்த தினத்தையும், அம்பேத்கார் ஜெயந்தியையும், காந்தி ஜெயந்தியையும் வருடம் தோறும் விடாமல் கொண்டாடும் ஆட்சியதிகாரத்தில் உள்ள இவர்கள் யாருக்கும் வெட்கமில்லை?........

No comments:

Post a Comment