Wednesday, December 7, 2011

NOV'11

                         வெற்றிடமும்    நல்ல வாய்ப்பு தான்


அன்புத்தோழர்களே, 
                                வணக்கம். சமீபத்திய உள்ளாட்சித்  தேர்தல் முடிவுகள், அதிமுக மட்டுமே, இன்றைக்கு, தமிழக மக்களின் பேராதரவு பெற்ற கட்சி என்ற உண்மையை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.

எம்ஜிஆர் வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்த இரட்டை இலை, அவரது காலத்தில் கூட இவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லை. தேர்தல்  பிரச்சார நேரத்தைத் தவிர சாதாரண மக்களுடன் சிறிதும் தொடர்பே வைத்துக் கொள்ளாத ஜெய லலிதாவின் இன்றைய தலை மையின் கீழ்தான், அதிமுக அதிக பலம் வாய்ந்ததாகப்படுகிறது.

சட்ட மன்றத் தேர்தலிலும், நடந்து முடிந்துள்ள உள் ளாட்சித்தேர்தலிலும், அதிமுக பெற்றுள்ள 39 விழுக்காடு வாக்குகளே, இக்கூற்றை உறுதிப்படுத்துகிறது. தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் நிலை அதிமுகவிற்கு ஏற்படும்வரை, இனி அதிமுக மட்டுமே ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வரும் என்பதை நாம் தயக்கமின்றி ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
  
திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்றத் தேர்தலின் மூலம் ஆட்சிக்கு வந்த நாள் முதல், அவற்றிற்கு இறங்கு முகம்தான். திமுகவின் மிகப்பெரிய ஊழல்களும், இடைத்தேர்தல் அராஜகங்களும், வரலாறு காணாத நிர்வாகச் சீர்கேடுகளும், குடும்பம்தான் கட்சி என்ற பிற்போக்கு நிலைப்பாடும் அவற்றின் கணிசமான ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி, நடுநிலையாளர்களிடமும் மிகப்பெரிய வெறுப்பை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாது, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், பாமக உட்பட கூட்டணிக்கட்சிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் மக்கள் முன் அம்பலமாகின.

இலங்கையில் நடந்த இனப்படுகொலையை காங்கிரஸ், திமுக ஆகிய இவ்விருகட்சிகள் வேடிக்கை பார்த்ததுடன் மட்டும் இல்லாமல், மறைமுகமாக இலங்கை அரசுக்கு  ஆதரவாக செயல்பட்ட நிலையில், பெரும்பாலான சிறு கட்சிகளும், தமிழ் உணர்வு அமைப்புகளும் இவ்விரு கட்சிகளுக்கும் எதிராக தேர்தல் நேரத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. விஜயகாந்தின் தேமுதிக, கம்யுனிஸ்டுகள், உதிரிக் கட்சிகள் ஆகியவற்றுடன் எற்படுத்திக்கொண்ட கூட்டணி உடன்பாடும், திமுகவின் தேர்தல் தில்லுமுல்லுகளுக்கு எதிரான பல சமூக அமைப்புகளின் செயல்பாடுகளும் சேர்ந்து கொண்டு, அதிமுகவின் சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு குறிப்பிட்ட அளவில் உதவின என்பதை மறுப் பதற்கில்லை.

ஆனால், கணிசமான மக்களின் ஆதரவினை திமுக  இழந்து  விட்ட நிலையில், இனி எந்த ஒரு கட்சியையும் நம்பி அதிமுக இல்லை என்ற ஜெய லலிதாவின் நம்பிக்கையை, உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உறுதிப் படுத்தியுள்ளன. திமுக தலைவர் கருணாநிதி கிட்டத்தட்ட தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வெடுக்க வேண்டிய முதிய வயதை அடைந்து விட்ட நிலை.  ஊழல் வழக்குகளில் கதிகலங்கி இருப்பதனால் மட்டுமின்றி, அமைப்பு ரீதியாகவும், சித்தாந்த அடிப்படையிலும் சிதில மடைந்து கிடக்கிறது திமுக. அது, சுதாரித்துக் கொண்டு, தொடர்ந்து ஒரு அரசியல் சக்தியாக மீண்டெழுந்து வந்தால், அரசியலில் அது ஒரு பேரதிசயமாகக் கருதப்படும். காங்கிரஸ் மீது தமிழக மக்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டன.
   
தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், சித் தாந்தம், குறிக்கோள் என்று எதையும் வைத்துக் கொள்ள முடியாத, ஆனால் பெரிதாக ஊழல் எதுவும் செய்ய விருப்பமற்ற, சொல்லப்போனால் ஒரு ஆபத்து இல்லாத அரசியல்வாதி, அவ்வளவே. அவரது கட்சிக்கு இனி எதிர்காலம் இல்லை என்றும் எழுதிவிட முடியாது.

ஆனால் அண்ணா, பெரியார் போன்ற சிந்தனைவாதிகளோ, எம்.ஜி,ஆர் போன்ற மக்களின் பேராதரவைப் பெற்ற உண்மையான மாற்றுத் தலைவர்களோ இல்லாத நிலையில், இன்றைக்கு தமிழக அரசியல் தளத்தில் மிகப்பெரிய சூனியம் ஏற்பட்டுள்ளது.

அதிமுக உள்ளாட்சி தேர்தலில் பெற்ற மிகப்பெரிய வெற்றி இந்த வெற்றிடத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சி மிகைப்படுத்துகிறது. மக்களின் பேராதரவு பெற்றுள்ள அதிமுகவில், ஜனநாயகம் வாசற் படியில் கூட நுழைய முடியாது என்பதும், ஜெயலலிதாவிற்குப் பின்னர் மக்களை ஈர்க்கக்கூடிய தலைவர்கள் இல்லை என்பதும், அதனால், ஜெயலலிதாவிற்கு அடுத்து, அக்கட்சிக் கும் எதிர்காலம் இல்லை என்பதும்தான் இப்போ தைக்கு ஓரளவு ஆறுதல் அளிக்கிறது.

கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில், ஆடம்பரமில்லாத அரசு விழாக்கள், போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் நடமாடு வது, அதிக ஓய்வில்லாமல் அலுவலகப் பணி மேற்கொள்ளுவது, கூடங்குளம் பிரச் சனையிலும், தூக்குதண்டனை விவகாரத்திலும் அவரது நிலைப்பாடு போன்ற ஜெயலலிதாவின் சில அணுகுமுறைகள், அவர் முதிர்ச்சி பெற்றுள்ளதாக வெளிக்காட்டுகிறது. திமுக பிரமுகர்கள் பலர் மீதான நிலப்பறிப்பு குற்றச் சாட்டுகளை தீவிரமாக கையாண்ட விதமும், அதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைத்ததும் பாராட்டுக்குரியவை.
    
ஆனால், இவற்றைத்தவிர, அதிமுகவின் ஆட்சி இப்போதைக்கு சொல்லிக் கொள்ளும் படியான திறமையான நிர்வாகத்தை எல்லாத் துறைகளிலும் கொடுக்கவில்லை. அதன் முதல் பட்ஜெட் சட்டமன்றத் தொடர் எதிர்பார்த் ததைப் போலவே, அம்மாவின் புகழ் பாடும் ஜால்ரா சத்தத்துடனும், எதிர் கட்சிகளின் மீதான ஏச்சுபேச்சுக்களுடன்தான் முடிவடைந்தது. அதிமுக அரசின் பல அறிக்கைகள், அடுத்தக் கட்டத்திற்கு போகவில்லை. ஏகப்பட்ட இலவசத் திட்டங்களுக்காகவும், மற்ற உருப்படியான  கட்டமைப்பு வசதிகளை மேம்படுத் துவதற்காகவும் மிக அதிக நிதி வேண்டியுள்ளது. மின் உற்பத்தியை பெருக்கு வதும், மின்துறையில் ஏற்பட்டு வரும் பேரிழப்பை சீர்செய்வதும் மிகப்பெரிய சவால். கல்வி, வேளாண்மை, சுற்றுச்சூழல், நகராட்சி நிர்வாகம், மருத்துவம் உட்பட எல்லாத்  துறைகளிலும் குறுகிய கால, நீண்ட கால செயல்திட்டங்கள் தேவைப்படுகிறது.
    
உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் நிலையில், இந்திய அளவிலும், தமிழக அளவிலும், நிதித்தட்டுப்பாடும், பொருளாதார மந்த நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. புதிய வேலை வாய்ப்பு என்பதை விட அதிக வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
         
இவற்றையெல்லாம் முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்பதை இப்போதே சொல்லிவிட முடியாது. ஆயினும், இன்றைய அமைச்சர்களின் செயல்பாடுகளும், அவர்களுக்கு சுதந்திரம் இல்லாமையும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஆர்வமுள்ள அரசு உயர் அலுவலர்கள், திறமையுடன் செயல்பட்டால் தான் உண்டு.
 
பரமக்குடியில் மறியலில் ஈடுபட்ட தலித்துகள் மீதான துப்பாக்கிச்சூடும், அப்பிரச்சனையில் முதல்வர் நடந்து கொண்ட விதமும் நம்பிக்கை அளிக்க வில்லை. மற்ற சில விஷயங்களிலும் அரசின் அணுகுமுறை அவப்பெயரை உண்டாக்கும் விதமாக உள்ளது. நிதிப்பற்றாக்குறையை சமாளிக்கவும், அதிமுகவினர் அவர்களுக்கு இம்முறை கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி காசு பார்க்க வேண்டும் என்பதற்காகவும், டாஸ்மாக் சாராயம் தொடர்ந்து காட்டு வெள்ளமென கரை புரண்டு ஓடி, லட்சக்கணக்கான குடும்பங்கள் இருக்கும் சுவடே இல்லாமல் அழிந்தொழியும் அபாயம், விளக்க இயலாத திகைப்பை ஏற்படுத்துகிறது.

சாராய விஷயத்தில், இன்றைய முதல்வரிடம் எப்படியாவது ஆரோக் கியமான அணுகுமுறை மாற்றம் ஏற்படுமென்றால், சமூக ஆர்வலர்கள்,  நாட்டிலுள்ள கோயில், தர்கா, மசூதி, சர்ச் என்று நடைபயணமோ, அங்கப் பிரதட்சணமோ செய்தாலும் தவறில்லை.
 
தேர்தலில் தோற்று விட்டதனால், சிறு கட்சிகள் துவண்டுவிடத் தேவையில்லை. தார்மீகத் தளத்தில் மக்கள் பிரச்சனைகளைத் தெளிவாக எழுப்பி போராடி, மீண்டும் மக்களின் ஆதரவைப் பெரும் வாய்ப்பு உள்ளது. அதைவிட அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ள இச்சூழலில், அரசின் தவறான செயல்பாடுகளைத் தொடர்ந்து தைரியமாக விமர்சிப்பதையும் மக்கள் நலனுக்கு உகந்த விஷயங்களை அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்வதையும் தொய்வில்லாமல் செய்ய வேண்டிய வரலாற்று கடமை, கட்சி சார்பில்லா சமூக ஆர்வலர்களுக்கும் கட்சி சார்பில்லா அமைப்புகளுக்கும் உள்ளது.
  
உலகம் முழுவதுமே, இப்போது புரட்சிக் குரல்களும், உரிமைக் குரல்களும், சாதாரண மக்களிடமிருந்து மட்டுமில்லாது, நடுத்தர இளைஞர்களிடமிருந்து அதிகம் கேட்கின்றது. எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் மட்டு மல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராக, அமெரிக்காவின் பல நகரங்களிலும், இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளிலும் இளைஞர்களின் அமைதிப் போராட்டங்கள் மாற்றத்தைக் கொண்டு வரத் துடிக்கின்றன.

ஜப்பான், சீனா, கொரியா போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல. இந்தியாவிலும் ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை வலியுறுத்தியும் மக்கள் திரண்டு வரத்தொடங்கியுள்ளனர். தமிழக அரசியல் தளத்தில் ஆரோக்கியமான சக்திகள் முளைவிட்டு வெளிப்படுவதற்கான சிறந்த வாய்ப்பை, இப்பொழுது நம்மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் வெற்றிடம் அளிக்கிறது. இதுவும் ஒரு நம்பிக்கையளிக்கும் அம்சம்தானே !
                                                                                                                     
                                               அந்த நம்பிக்கையுடன்
                                                         
                                                    
                                                     
                                                                                                
                                                
                                                   அ.நாராயணன்
                                                                                                                                                                                                  

                                                              

Friday, October 7, 2011

OCT'11


விரட்டுவோம் சாதி எனும் பேயை
                                      -மனங்களிலிருந்து. 

     
அன்புத் தோழர்களே!
                           வணக்கம். ஒவ்வொரு மாதமும் வரவேற்பறை எழுத உட்காரும்போது, நல்ல செய்தி களை, நம்பிக்கையளிக்கக் கூடியவற்றை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால், எழுத உட்கார்ந் தால், உலகில் நடக்கும் பல்வேறு மோசமான நிகழ்வுகள் மட்டுமே கண்முன் ஊசலாடுகிறது.
                        
கொடுங்கனவில் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஒரு வன்முறை வெறியாட்டத்தின் விளைவாக ஏற்பட்ட ஆறாத புண்களுக்கு மருந்தாகவும், வற்றாமல் பெருக்கெடுத்து ஓடிய கண்ணீரைத் துடைப் பதாகவும், மிகத் தாமத மானாலும் நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும், வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு இப்பொழுது வந்துள்ளது.

ஒரு ஜனநாயக நாடு, அதற்கென்று ஒரு மிகச் சிறந்த அரசியல மைப்புச்சட்டம், அந்தச்சட்டம் எளிய மக்களுக்கு அளிப்பதாகச் சொல்லப்படும் உரிமைகள், பாதுகாப்புகள். இத்தனை இருந்தும், இந்த சட்டத்தின் மாண்பையும், அதன் மூலம் நலிவடைந்த, காலம் காலமாக உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் நலனையும் பேண வேண்டிய அரசு அதிகாரிகளும், காவல் துறையி னரும், ஒரு வெறிபிடித்த கும்பலாக, வேட்டை நாய்களின் கூட்டமாக அவதாரம் எடுத்து, ஒரு மலைசார்ந்த கிராமத்தின் மக்களையே துவம்சம் செய்ததும், கடித்துக் குதறியதும், மானபங்கம் செய்ததும் நினைத்தாலே மனது பதறுகிறது. 

அந்த எளிமையான, எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாத, வெள்ளாந்தி மக்களுக்கு கிடைத்த ஒரு சிறிய ஆறுதல் தான், சிபிஐ அளித்த குற்றப் பத்திரிக்கையை 18 ஆண்டுகளாக விசாரித்து தருமபுரி அமர்வு நீதி மன்றம்  அளித்த தீர்ப்பு. ஆயினும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று மேல் முறையீடுகள் முடிந்து, இறுதி நிவாரணமும், குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்க இன்னும் ஆண்டுகள் சில பிடிக்கும். தாமதமாகும் நீதி கிடைக்காத நீதி எனும் நிலை மாறவேண்டு மெனில், நீதித்துறையில் சீர்திருத்தம் கொண்டு கொண்டுவர வேண்டிய அவசரத்தை இவ்வழக்கில் ஏற்பட்ட தாமதம் மீண்டும் நினைவூட்டுகிறது.

சரி, ஏதோ 20ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் சமுதாயத்தில் நலிவடைந்த மக்கள் இவ்வாறு அசுர இன்னல்களுக்கு ஆளானார்கள். இந்த 18-20 வருடங்களில், பலரும் சமூக நீதிக்காக நெடும்பயணம் சென்றுள்ளார்கள். அதனால் இந்த 21-ம் நூற்றாண்டிலாவது நிலைமை சற்று மாற்றம் கண்டிருக்கலாம் எனும் நம்பிக்கையை செப்டம்பர் மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று, பரமகுடியில் காவல்துறையினர், மறியலில் ஈடுபட்ட ஒரு சிறிய தலித் அமைப்பைச்சேர்ந்த இளைஞர்கள் மீது அவசியமில்லாமல் நடத்திய துப்பாக்கிச்சூடு, தகர்த்தெறிந்துவிட்டது. 

குறைந்தபட்ச விதிகளைக் கூட கடைப்பிடிக்காமல், 200 பேர் வரை மட்டுமே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தலித்து இளைஞர்களை சாதுரியமாகக் கையாளாமல், கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு, அதனால் மார்பிலும், தலையிலும் கூட குண்டு பாய்ந்து சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் கடை வீதிக்கு வந்த முதியவர்களும் அடங்கும். 30 பேர் படுகாயம் அடைந்தார்கள். 

மனித உரிமை ஆர்வலர்களும் மற்ற அமைப்புகளும் நடத்தியுள்ள விசாரணையில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியபோது, கலவரம் போன்ற சூழலே இல்லை என்று தெரிகிறது. 

அது ஏனோ தெரியவில்லை, சாதிவெரிபிடித்த ஆதிக்க சாதியினர் மட்டுமல்லாமல், அரசு நிர்வாகத்தில் உள்ளவர்களும், குறிப்பாக காவல்துறையினர், அடிக்கடி தாழ்த்தப்பட்டவர்கள் மீதும் சிறுபான்மை மக்கள் மீதும் வன்முறையை ஏவி விடுவது வழக்கமாக உள்ளது. நம்நாட்டில் காரண காரியங்கள் கூட இல்லா மல் மனித உயிர்கள் கொத்து கொத்தாக போகின்றன. இந்தியாவில் பொருட்களின் விலைவாசி உயர்ந்து கொண்டே போனாலும், மனித உயிர்கள் மட்டும் மலிவு. அதிலும் தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் உயிர் மிக மலிவானது. 
    
அதனால்தான், தமிழக அரசு, இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களுக்கு 1 லட்சம் நிவாரணம் வழங்கியதோடு, ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணைக் கமிஷனும் அமைத்து விட்டு முடித்துக் கொண்டது. அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்கள் வசதிக்கு ஏற்ற விதமாக இரட்டை வேடம் போடுகின்றன. சமூகத்தில் இருந்து சாதி வேறுபாடுகளைக் களைவதற்கு, ஓட்டுப்பெட்டி அரசியலுக்காக போடப்படும் சாதிக் கணக்குகள் மிகப்பெரிய தடையாக உள்ளன.

என்னதான் இந்தியா வளர்ச்சிப்பாதையில் பீடு நடை போடுவதாக கூறப்பட்டாலும், சாதிப் பேயை நம் சமுதாயத்தில் இருந்தும் அரசியலில் இருந்தும் விரட்டாமல் நாம் ஒரு முதிர்ச்சியடைந்த அறிவார்ந்த சமுதாய மாக உலக நாடுகளின் முன் தலை நிமிர்ந்து நடக்க இயலாது. இதற்கு முதற் கட்டமாக சாதிப்பேயை மனிதர்களின் மனங்களிலிருந்து விரட்டுவதை நம் தலையாயக் கடமையாகக் கொள்வோம். 
                                                                                              நட்புடன்,
அ.நாராயணன்.

SEP'11

 சமூகம் முதிர்ச்சியடைய 
                         - ஒரு வாய்ப்பு              
அன்பு தோழர்களே!                                                                                     
                    வணக்கம், அண்ணா ஹசாரே, லோக்பால், ஊழல் - இவைதான் ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதிலும் மிக அதிகமானவர்களால் உச்சரிக்கப்பட்ட, எழுதப்பட்ட, வலைத்தளங்களில் பரிமாறப்பட்ட மூன்று வார்த்தைகள். அநேகமாக, இந்தியாவையும் தாண்டி, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள எல்லா இதழ்களிலும் இவை இடம் பிடித்தன என்பதால், அண்ணா ஹசாரேவின் தலைமையில் நடந்த இந்தப் போராட்டம், உலக அளவில் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் சட்டம், ஊழலை ஒழித்துவிடும் ஒரு மந்திரக்கோல் அல்ல என்பது அண்ணா ஹசாரே உட்பட எல்லோருக்கும் புரியும். இந்தக் குழுவினர் முன்வைத்த லோக்பால் மசோதாதான் சிறந்தது என்பதை வலியுறுத்த அவர்களுக்கே உரிமையில்லை என்பதும் உண்மை. முதலில் அண்ணா ஹசாரே தலைமையில் ஏற்படுத்தப் பட்ட குழுவில் இடம் பெற்ற எல்லோரும் மேட்டுக்குடியினர் , அதில் ஒரு பெண்மணி கூட இடம்பெறவில்லை, சிறிதும் முன் யோசனையில்லாமல் அமைக்கப்பட்ட குழு என்று நானே உடனடியாக விமர்சனம் செய்தேன். ஆனால் இப்போதைய போராட்டத்தின் தார்மீகத்தை ஆதரிக்கிறேன். ஊழலுக்கு எதிரான மனநிலை கொண்ட எல்லோரும் ஒரு வாய்ப்பு கிடைத்தவுடன், நம்பிக்கையுடன் அண்ணாவுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

அண்ணா ஹசாரே குழுவினரின் இந்தப் போராட்டம் மீது கீழ்கண்ட 5 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள்தான் இந்தப் போராட்டத்தை மிகைப் படுத்தி ஒரு பிரமையை ஏற்படுத்திவிட்டன. இது தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறு பான்மையினரைத் தவிர்த்து, அவர்களை எதிர்க்கும் இந்துத்துவ சக்திகள் முன்னெடுக்கும் போராட்டம், படித்த நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே கலந்து கொண்ட போராட்டம். ஊழலால் பயன் பெற்றவர்களும், ஊழல் வாதிகளும் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான மனநிலை கொண்டவர்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த போராட்டம். பாராளுமன்ற ஜனநாயகத்தையே சிறுமைப்படுத்தும் வகையில் நடந்த போராட்டம் என்பவை அவை.

ஆனால், இந்த வாதங்கள் எல்லாம், உண்மையை வேண்டுமென்றே புறக்கணித்து, அல்லது சரியாகப் புரிந்து கொள்ள இயலாமல், அல்லது ஒரு தற்காப்பு / தாழ்வு மனநிலையி னாலோ அல்லது ஈகோ மனநிலையினாலோ வைக்கப்படும் வாதங்கள்.

இந்தப் போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் அதிகமாகக் கலந்து கொண்டது உண்மை. இதனை இந்துத்துவவாதிகளும், மதவாதிகளும், ஊழலையும் ஒரு பெரிய பிரச்சனையாகப் பார்க்கிறார்கள் என்றுதான் கொள்ள வேண்டும். அது போல் படித்த நடுத்தர வர்க்கத் தினர் அதிக அளவில் வீட்டுக்கு வெளியில் வந்து குரல் கொடுப்பது, நமது நாட்டின் அரசியலுக்கு, ஜனநாயகத்திற்கு மிகச்சிறந்த நன்மை. ஏனென்றால், அரசியல் ஆர்வம் உள்ள நடுத்தர வர்க்கத்தினால் சமூகத் தளத்தில் தார்மீகத்தையும், ஒழுக்கத்தையும் கொண்டு வர முடியும். ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியாக (Conscience Keepers) உருவெடுக்க முடியும். அது நமது ஜனநாயகத்தை முதிர்ச்சி யடையச் செய்ய உதவும். 

 எந்த ஒரு மக்கள் திரட்சியிலும், ஊழல் பேர்வழிகள் ஆதாயம் காண முயல்வது இயற்கை. மேலும் அன்று இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடியவர்கள் இன்றும் அவ்வாறு திரள்வார்கள் என்பது மிகையானது. இன்று நிதிஷ்குமார் போன்று உண்மையானவர்களும், மாயாவதி போன்ற தலித்தலைவர்களும் ஆட்சியதிகாரத்தில் இருக்கிறார்கள். அங்கொன் றும் இங்கொன்றுமாக ஏதாவது பிரச்சனை எழலாமே தவிர, இந்துத்துவ சக்திகள் ஒன்று திரளும் வாய்ப்புகள் மிகக்குறைந்து விட்டன. சமூகம் முதிர்ச்சியடைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

அதே போன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம், மக்கள் விருப்பத்தைத்தான் முதன்மைப் படுத்துகிறது. மக்கள் விருப்பம் போலத்தான் நாடாளுமன்றம் செயல்பட முடியும். லோக்பால் மசோதா பற்றி ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால், மக்கள் மன்றம்தான் வெற்றி பெறும் என்பது கண்கூடு.
                
ஆக, ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் மக்களிடம் அரசியல் ஞானத்தை, உணர்2வை மேம்படுத்த உதவியுள்ளது. மக்கள் பிரதிநிதி களின் கடமையை நன்கு உணர்த்தியுள்ளது.

அதோடு ஒட்டுமொத்த அரசியல்வாதிகளிடம், அரசு ஊழியர்களிடம், பொதுமக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம், நேர்மை குறித்த விழுமியங்களை ஆழப்பதிப்பதற்கு ஒரு பாதையைக் காட்டியுள்ளது.

 இந்த மாற்றத்திற்கு வழிவகுத்த கதாநாயகன் அண்ணா ஹசாரே உட்பட பொது வாழ்வில் உள்ளவர்கள் இந்த வாய்ப்பினைத் தவறவிடாமல், கிடைத்துள்ள பாதையில் எல்லோரையும் இணைத்துக் கொண்டு, திறம்பட பயணம் செய்ய வேண்டும்.

அண்ணா ஹசாரே குழுவினருக்கு இதில் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஒரு சில அடி கள் தவறினால் கூட, அவை மிகைப்படுத்தப் பட்டு, இந்த இயக்கத்தின் நம்பகத்தன்மை பாதிப்படையும் ஆபத்து உள்ளது. அவ்வாறு நடக்காது என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது.

அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் மட்டு மல்ல, தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், ஊடகங்களும் கூட, ஊழல் செயல்பாடுகளுக்கு விதிவிலக்கல்லவே.

நேற்று நடந்தவை நேற்றோடு போகட்டும். பிராயச் சித்தத்திற்கான நேரமிது. முறைகேடாகப் பெறும் பெரிய வெற்றி கூட மன அழுத்தம் தரக்கூடியது. தோல்வியில் முடியும் நேர்மையான முயற்சி கூட மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. இதனை ஒவ்வொரு குழந்தையும் கற்றுக் கொண்டு விட்டால், இந்தியா உண்மையாகவே ஒளிரும் அல்லவா?
                                                                                                                                   நட்பு பாராட்டும்
அ.நாராயணன்
                                                                                                                       

Tuesday, October 4, 2011

AUG'11


உலகமயமாக்கப்பட்ட பயங்கரவாதம்!
                                              -தீர்வு தான் என்ன?

அன்புள்ள தோழர்களே,
                 
              ‘நான் முஸ்லிம்களை வெறுக்கவில்லை, ஆனால், முஸ்லிம்கள் ஐரோப்பிய இனக் கலாச்சாரத்துக்குள் ஊடுருவி, காலனியாதிக்கம் செய்து, பல்லினக் கலாச்சாரம் கொண்டதாக ஐரோப்பா மாறுவதை முறியடிப்பேன்’ - ஆண்டர்ஸ் பெஹ்ரிங் ப்ரேவிக் எனும் 33 வயது நார்வே இளைஞன், தெளிவாக, விலாவாரியாக, இப்படிப்பட்ட வாதங்கள் நிரம்பிய 1500 பக்க வெறுப்புப் பிரகடனம் ஒன்றை பலவருடங்களாகத் தயாரித்து, வலைத்தளத்தில் ஏற்றிவிட்ட பின்னரே தனது பயங்கரவாதச் செயலை நிறைவேற்றியுள்ளான்.
       
தனக்கு சக்தியும் வெறியும் ஏற்படுவதற்காக போதைமருந்தேற்றிக் கொண்டு, வெடி குண்டும், இயந்திரத்துப்பாக்கியுமாக தனது பழி வாங்கல் படலத்தை நிறைவேற்றியுள்ளான்.
          
இந்த நிகழ்வு நடந்தவுடன், 95 விழுக்காடு மக்களும், ஊடகங்களும், உடனடியாக இது இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வேலைதான் என்று வழக்கம்போல தவறான முடிவுக்கு வந்தார்கள். உலகில் மிகப்பாதுகாப்பான, குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடைபெறும், உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் சோசியலிசப் பொருளாதாரத்தையும் போற்றும், ஸ்கான்டினேவிய நாடுகளில் ஒன்று நார்வே. வருடாவருடம் நோபல் பரிசுகள்  வழங்கும், ஒரு பரந்த மனப்பான்மையுடைய, வளமான நாடு. இங்கு, பயங்கர வாதச் செயல் நடைபெறும் என்று கொடுங்கனவாகக்கூட யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. 
                     
தனது சித்தாந்தம் அல்லது நம்பிக்கையைப் பாதுகாப்பதாகச் சொல்லிக் கொண்டு, மாற்று நம்பிக்கை கொண்டோரின் மனதில் மிகப்பெரிய கிலியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் எண்ணத்தில், அவர்கள் மீதோ, மாற்று நம்பிக்கைச் சின்னங்களின் மீதோ பெரிய வன்முறையை ஏவி விடுவதே பயங்கரவாதம் எனப்படும்.

இப்பொழுது, பெஹ்ரிங் ப்ரேவிக்கை கிறித்துவத்தின் ஒசாமா பின்லாடன் என்று கூப்பிடத் தொடங்கியுள்ளார்கள். தனது பிரகடனத்திற்கு, இந்துத்து வாவிலிருந்து சில கூறுகளை கடன் வாங்கியிருக்கிறான் இந்த இளைஞன். இதனை வலைத்தளத்தில் படிக்கும் தீவிர கிருத்துவப்பற்று கொண்ட இளைஞர்கள், இவனுடைய சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வன்முறையை நாடும் ஆபத்து உள்ளது. சிறிய கீறல்களாக உள்ள இந்த வலதுசாரி பயங்கரவாதம், ஐரோப்பா முழுவதும் வெளிப்படும் அபாயம் உண்டு. இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், பயங்கர வாதமும் உலகமயமாக்கல் செய்யப்பட்டு விட்டது என்றுதான் கூற வேண்டும். இன்றைய தகவல் தொழில் நுட்பமும், ஊடகங்களும் எகிப்திய புரட்சிக்கும் உதவுகிறது, தீவிரவாத சித்தாந்தங்களை உலகெங்கும் தூவவும் துணை புரிகிறது. 

ஐரோப்பிய கிருத்துவ சித்தாந்தத் திற்குள்ளும் தீவிரவாதம் தலைதூக்கிவிட்ட நிலையில், இனி எந்த நாடும், எந்த மதமும், மத உட்பிரிவும், இந்த தீவிரவாதத்தின் வெளிப்பாடான பயங்கரவாதத்தில் இருந்து தப்ப முடியாது. ஐரோப்பாவிலிருந்து இஸ்லாமியர்களைத் துரத்த நினைக்கும் பிரேவிக், பெண்விடுதலையையும் வெறுக்கிறான். 

இஸ்லாமியத் தீவிரவாதிகளும் பெண்களை அடிமைகளாக நடத்தவே விரும்புகிறார்கள். இந்துத்துவ தீவிரவாதிகளும் பெண்கள் மீது அவ்வப்போது வன்முறையை ஏவி விடுவதைப் பார்க்கின்றோம். இஸ்லாமைப் பாதுகாக்க ஒசாமாவிற்கு இருந்த எல்லா நியாயங்களும், ஐரோப்பியக் கிருத்துவத்தை அல்லது அதை ஒட்டிய கலாச்சாரத்தைப் பாதுகாக்க பிரேவிக்கிற்கு இருக்கிறது. இவர்கள் முன்வைத்த நியாயங்களே, பாபரி மசூதியை இடித்துத் தள்ளுவதற்கு இந்துத்துவத் தீவிரவாதிகளுக்கு இருந்தது. 

இஸ்லாமியத் தீவிரவாதி, இந்துமதத் தீவிரவாதி, கிருத்துவத்  தீவிரவாதி, யூதத்தீவிரவாதி, பவுத்தத் தீவிரவாதி என்று அவரவர் போக்கில் சொல்லிக்கொண்டே போகலாம். பிரேவிக் மட்டுமல்ல, எல்லாத் தீவிரவாதிகளுமே, 1500 என்ன, 15000 பக்கங்கள் கொண்ட தங்களுக்கான சித்தாந்தப் பிரகடனங்களை எழுதிவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அகிம்சையைப் போற்றும் பவுத்தம் வேர்பிடித்துள்ள இலங்கை யில்,  ஆயிரக் கணக்கான தமிழ்மனித உயிர்கள், பிணங் களாக அறுவடை செய்யப்பட வில்லையா? மும்பையில், வடஇந்தியர்கள் மீது அவ்வப்போது வெறுப்பு உமிழப்பட்டு வன்முறை வெடிப்பதில்லையா? கஷ்மீரிலிருந்து, பண்டிட்கள் விரட்டியடிக்கப்பட்டு அகதிகளாக அவதிப்பட்டுக் கொண்டிருக்க வில்லையா?


ஆர்தர் வாஸ்கோ எனும் யூதப்பாதிரியார்(ரப்பி) மிக அழகாகச் சொல்லுகிறார். “மதங்கள் நேசத்தையும், நீதியையும் வலியுறுத்துகின்றன என்கிறோம், அவரவருக்கான மதங்களை ஆடையாக அணிந்து கொள்கிறோம், ஆயினும், வெறுப்பையும், மனித ரத்தத்தையும் கொண்டு, ஆடையின் சில இழைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 

இந்த உண்மையை எல்லா மதத்தினரும் ஒத்துக்கொண்டால் மட்டுமே, ஆடைகள் கிழியாமல், தீவிரவாத இழைகளை எப்படிக் கழுவலாம் என்று யோசிக்க முடியும்” என்கிறார் அவர். நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் மேயர், ஜனநாயகத்தையும் அன்பையும் கொண்டு, பயங்கரவாதத்தை தண்டிப்போம் என்கிறார்.  நார்வேயின் பிரதமரும் இந்த முற்போக்குச் சிந்தனையை வழிமொழிகிறார்.  

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு, காவல்துறையும், பாதுகாப்புப் படைகளும் மட்டும் போதாது. அரசியலும், மதத் தீவிரவாதமும் இரண்டறக்கலப்பது தடுக்கப்படவேண்டும். மதம் தனிமனித நம்பிக்கை சார்ந்தது. மதநம்பிக்கையும் சரி, நம்பிக்கையின்மையும் சரி, பொது வெளியில் கலப்பது தவிர்க்கப்படவேண்டும். ஐ.நா சபையிலிருந்து உள்ளூர் ஆசிரியர்கள் வரை, எல்லோரும் ஜனநாயகத்தையும், சகிப்புத் தன்மையையும், மனித விழுமியங்களையும் அடிவேரிலிருந்து பலப்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அதைவிட முக்கியம்.


கடந்தகால, நிகழ்காலப் பாடங்களைக் கற்று, வேற்றுமைகள் நிறைந்த இந்தியா உலகுக்கே ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும். நாட்டுப்பற்று, இனப்பற்று, மொழிப்பற்று ஆகியவை வெறியாக மாற்றப்படுவதற்கு யாருமே துணை போகக்கூடாது, குறிப்பாக அரசியல் கட்சிகளின் வாக்குவங்கி அரசியல் வெறுப்பைத் தான் விதைக்கும்.
 
வேற்றுமையையும், மாற்றுக் கருத்துக்களையும் கொண்டாடுவோம். அவற்றைப் பள்ளிகளிலிருந்து தொடங்குவோம். 
                                                          நட்புடன் 
                                                                   
                                                                                                                           
                                                        அ .நாராயணன் 

Saturday, July 16, 2011

ஜூலை 2011

நல்ல ஆங்கிலத்திற்கும் பொது அறிவிற்கும்
தவறாமல் இந்துநாளிதழ் படியுங்கள்!

அன்பு நண்பர்களே!
வணக்கம், ஆங்கிலப் புலமையை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமா? ஒரு தனியறையில் உட் கார்ந்து கொண்டு, “இந்து’’ ஆங்கில நாளிதழை ஆழ்ந்து படி, பின்னர் முடிந்தால் உரக்கப்படி- இதுதாண் என் பள்ளி ஆசிரியர் என் சிறுவயதில் எனக்குக் கொடுத்த அட்வைஸ். 
      
இதனையே, நானும் பல வருடங்களாக பலருக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். தி இந்து’’ இதழின் ஆங்கிலமும், செய்திகளின் நேர்த்தியும் அலாதியானது. உலகின் தலை சிறந்த 10 நாளிதழ்களில், “தி இந்து’’வும் ஒன்று என்றால் மிகையில்லை.
    
என்னதான், விதவிதமான விளம்பரங்கள் மூலம், கோடிகளை சம்பாதித்தாலும், இந்து நாளிதழும், அதன் சகோதர வார இதழான  ஃபிரண்ட்லைனும், இடதுசாரி கம்யூனிஸ்ட் அபிமானம் மிக்க இதழ்கள். அதனாலேயே, இந்து, எனது மனதிற்கு நெருங்கிய நாளிதழானது.
     
இந்தியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, உலகின் பேர்பெற்ற அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் நோபல் விஞ்ஞானிகள் ஆகியோரின் கட்டுரைகள் இந்து நாளிதழில் தவறாமல் இடம்பெறும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம், விடுதலை பெற்ற பின் இந்தியா சந்தித்துள்ள ஒவ்வொரு சவால்கள், எல்லாவற்றையும் தி இந்து’’ ஆவணப்படுத்தியுள்ளது. 
   
ராஜீவ் காந்தி தொடர்புடைய போஃபோர்ஸ் ஊழல் முதல் இன்றைய விக்கிலீக்ஸ்வரை பலவற்றையும் அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்திய விவசாயிகளின் கையறு நிலை பற்றிய சாய்நாத் கட்டுரைகள், ஆதிவாசிகளின் பிரச்சனைகள், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகும் தலித்துகள், இவை எல்லாவற்றுக்கும் இந்து பக்கங்களில் இடமுண்டு.
    
உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவோ, முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றனவோ, அவற்றை உலக வாசகர்களின், உலகத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும். இந்துவின் செய்திகள் மட்டுமல்ல, புகைப்படங்களும் செய்திகளுக்கு உரம் சேர்க்கும் பிரத்தியேக ரகத்தைச் சார்ந்தவை. அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள், பாகிஸ்தான், சீனா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, எகிப்து, கோசோவா மட்டுமல்லாது உலகின் இண்டு இடுக்குகளில் நடக்கும் அத்து மீறல்களையும், இரட்டை வேடங்களையும், இனப்போர்களையும், பூகம்பங் களையும், சுனாமிகளையும், கொடுங்கோலர்களின் அராஜகங்களையும் பொதுப்பார்வைக்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தெளிவான, நடுநிலையான தலையங்கம் எழுதத்தயங்கியதில்லை. 

இந்துவில் வரும் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், தலையங்கங்களுக்கும் உலகத் தலைவர்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. உலகின் எல்லா நாடுகளிலும் இந்து நாளிதழுக்கு வாகர்கள் உண்டு. இந்து நாளிதழின் கட்டுரைகளும் புகைப்படங்களும் இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் மறுபதிவு செய்யப்படுகின்றன.


ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, 3 நாட்கள் பர்மாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, உலகின் முற்போக்கு நாட்டு அரசுகளால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள, 20 வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அந்நாட்டின் ராணுவ அரசுத்தலைவர்களை (Millitary junta) சந்தித்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவரும், நோபல் அமைதிப்பிரிசு பெற்றவரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான 66 வயது பெண்மணி அவுன் சான் சு க்சீயை சந்திக்காமல் வந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இந்தியா, இந்த கொடுங்கோல் ராணுவத் தலைவர்கள், இந்திய நிறுவனங்களுக்குப் போடும் காண்டிராக்ட் எலும்புத் துண்டுகளுக்காக, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.


வெளியுறவுத்துறை அமைச்சரின் விமானம் மீண்டும் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்குள் இந்து நாளிதழ் இது தொடர்பாக இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் தீட்டியது.இதை விட சிறப்பாக, ஒரு தார்மீகக் கோபத் துடன் நான்காவது தூண் செயல்பட முடியாது. இதுதான்  இந்துநாளிதழின் பெருமிதப்படத்தக்க அணுகுமுறை.


இத்தனை பெருமையும், பாரம்பரியமும் கொண்ட உலகின் மூலை முடுக்குகளில் நடப்பவை பற்றியெல்லாம் பொதுப்பார்வைக்கு கொண்டு வரும் இந்து நாளிதழ், இலங்கையில் போர் முற்றி இனப்படுகொலை நடந்த போதோ, முள்ளி வாய்க்கால் பேரழிவு ஏற்பட்டபோதோ, அதற்கு முன் அத்தகைய சூழல் ஏற்பட்ட போதோ, அதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்த்தது. தனது கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டது. போருக்கு பின்னர் கூட, தமிழர்கள் அடைக்கப்பட்ட முகாம்களில் (தேனும் பாலும் ஓடுவதாக கூறவில்லை என்பது மட்டுமே ஆறுதல்) எல்லாம் இன்ப மயம் என்பது போன்று ராஜபக்சேவின் நேர் காணல்களை வெளியிட்டது.


இன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஐ.நா. குழு உட்பட பலநாட்டுத் தலைவர்களும், பல உலகின் முன்னணி இதழ்களும் இலங்கை அரசும் ராணுவமும் போர் குற்றங்கள் செய்ததாகவும், மனித அழிப்பில் ஈடுபட்ட தாகவும் கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டுள்ள நிலை உள்ளது. ஆனால், இந்து நாளிதழ் மட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கும், இந்திய அரசின் இலங்கை தொடர்பான தவறான கொள்கைகளுக்கும் மிக வெளிப்படையாக ஒரு பக்கபலமாகஇருப்பதற்கான காரண காரியங்கள் பற்றி நாம் யூகிக்க விரும்பவில்லை. ஆனால், இந்து இதழின் இந்த சறுக்கல், அதன் சரித்திரத்தின் மீது விழுந்த அழிக்க முடியாத நிரந்தரக்கறை. அதுதமிழினம் அழிக்கப்பட்ட போது ஆறாக ஓடிய குருதியின் கறை.


இந்து நாளிதழின் வீச்சை ஒப்பிடும்போது, பாடம் இதழ் ஒரு சுண்டைக் காய். ஆயினும், ஒரு பத்திரிக்கையாளன், “இந்துவின் நீண்ட கால வாசகன், அதோடு மானுடக் காதலன் எனும் நிலையில் இருந்து, “தி இந்துஇதழின் இரட்டை வேடத்தை, பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரான அணுகுமுறையை பாடம் இதழ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். பாடம் இதழ் இந்த கண்டனத்தை பதிவு செய்யத் தவறியிருந்தால், எதிர்காலம் நம் இதழ் மீது காரித்துப்பியிருக்கும்.

ஆயினும் நண்பர்களே! சிறந்த ஆங்கிலச் சுவைக்கும், பொது அறிவிற்கும் இந்துநாளிதழ் தவறாமல் படியுங்கள்


மிக நட்புடன்
அ.நாராயணன்

Friday, July 15, 2011

மார்ச் 2011

    விடியுமா?
                          சுரண்டல்
                                                   நிற்குமா?

நம்மில் லட்சக்கணக்கான பேர் தினம் தினமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும், தண்டவாளங்களிலும் தினம் தினம் விழுகிற குப்பைகளையும், மலம் மற்றும் பிற கழிவுகளையும் அகற்றி  சுத்தம் செய்கிற  துப்புரவுப் பணி தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒரு நிமிடம் நின்று எண்ணிப் பார்ப்பவர்களாய் நம்மில் எத்தனை பேர்  இருக்கிறோம்?
            
இந்தியாவின் மிகப்பெரிய அரசு  நிறுவனமாகிய ரயில்வே  துறையானது, சமீபத்திய பட்ஜெட்டைப் போலவே  ஒவ்வொரு முறையும் பயணிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருவது உண்மைதான் என்றாலும், இப்படி ஒரு நல்ல பெயரை வாங்க எண்ணுவதன் நிர்வாகப் பின்னணியில், உழைக்கின்ற அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுகின்ற “அங்காடித் தெரு”க் காட்சிகள் மறைந்திருப்பதும் உண்மையாகவே  உள்ளது.
      
காண்ட்ராக்டர்களால் ஏழைத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதை அந்த தொழிலாளிகள் நடப்பது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, தண்டவாளங்களில் துப்புரவுப்பணி செய்கிற ஏழைப் பெண் தொழிலாளிகளும் இருக்கிறார்கள் என்பதை அந்த ஏழைத் தொழிலாளிகளில் ஒரு சிலரை நேர்முகம் கண்டபோது அறிந்தோம்.
    
அந்தப் பெண்கள் எம்முடன் நேர்முகமாக பகிர்ந்துகொண்டு பதிவு செய்திருக்கும் உரையாடலை  நீங்களும் பார்வையிடுங்களேன்.
                                                                                                                                             (ஆசிரியர்)
கேள்வி: பளாட்பாரங்களில் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போயிருந்தாலும் அதெல்லாம் சுத்தம் செய்றதும்  நீங்கதானா?

பதில்: ஆமா, பேசஞ்சர்  வர்றாங்க போறாங்க. அதெல்லாம் சுத்தம் செய்யறதுக்கு நம்ம மாதிரி ஆள் போட்டு வேலை வாங்கறாங்க.

கேள்வி : மனித கழிவை மனிதரே  அள்ளக்கூடாதுன்னு சட்டம் இருக்குதே ? கையாலே  அள்ளறதுக்கு பதிலா கிளவுஸ் கொடுக்கலையா?

பதில் : அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கலே 
கேக்கறோம்  ஆனா கொடுக்கலே..

கேள்வி: உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க?
 
பதில்: 3000 ரூபாய், ஒரு நாளுக்கு 100. லீவு எடுத்தா கிடையாது.

கேள்வி :  எத்தனை நாள் வேலை?

பதில் :  எல்லா நாளும் வேலை தான். லீவே  கிடையாது. லேடீஷ்க்கு அந்த நாலு அஞ்சு ” நாள் வராம இருந்தா சம்பளம் கிடையாது.

கேள்வி : பேப்பர், பிளாஸ்டிக் பொறுக்கி போடறதில் காசு கிடைக்குமா?

பதில் : அதெல்லாம் இல்லை.

கேள்வி : மனித கழிவுகளை அள்ளுற வேலை கையாலே செய்யக்  கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா?

பதில் : தெரியாது.

கேள்வி : மெஷின் மூலம் எடுக்கலாமே?

பதில்: மெஷின் தரையிலே  விட முடியாதே . கையாலதான் அள்ளணும், மோட்டார் போட்டு தண்ணி அடிச்சி நாங்கலே  போட்டுருவோம். அதெல்லாம் காவாயிலே  எறங்கிடும். குப்பையெல்லாம் முறத்திலே  அள்ளிடுவோம் .

கேள்வி: ஏதாவது நோய் வந்தா செக்கப்  செய்யறாங்கள? சோப்  கொடுப்பாங்களா?

பதில்: இல்ல. அடிபட்டா கூட 10 ரூபா குடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பமாட்டாங்க. லீவு எடுத் துட்டு @பாக @வண்டியதுதான்.

கேள்வி : சோப் , சோப்  அலவன்ஸ் கொடுக்கணும்னு சட்டத்திலே  இருக்கே?
 
பதில்: அதெல்லாம் ஒண்ணுமில்லே. மாதம் மூணு நாள் சம்பளம் போக மீதிநாள் சம்பளம் தான். 20 நாளுன்னா 2000.

கேள்வி : பிள்ளைங்க படிக்கிறாங்களா?

பதில்: படிக்கிறாங்க. வேலைக்கு போறாங்க. என்னமோ  எப்படியோ  சம்பாரிக்கிறாங்க.

கேள்வி: அப்புறம் நீங்க ஏன் இந்த வேலையை  செய்யறீங்க?

பதில்: வருமானம் பத்தல. விக்கிற விலைவாசிக்கு ஒரு நாளைக்கி பால் சர்க்கரை எல்லாத்துக்கும் 200 ரூபாய் இருந்தாதான் புள்ள குட்டிக சாப்ட  முடியும்.

கேள்வி : வீட்டுக்காரருங்க என்ன செய்யராங்க ?

பதில்: சராயம் குடிச்சிட்டு ஒக்காந்திருக்காங்க. இல்லேன்னா வீட்டிலே  குப்பகொட்டிட்டு விட்டுட்டு போயிடறாங்க. குழந்தை பெத்துட்டும் விட்டுட்டுப் போறாங்க. கல்யாணம் பண்றதில்லே. தனியாவும் இருக்காங்க.

கேள்வி: அப்போ நீங்கதான் குடும்பத்துக்கு தலைவன். கணவன் இல்லே . அடுத்த தலைமுறையாவது டாக்டர், எஞ்சினீயர் ஆகணும், கார் வாங்கணும், வீடு வாங்கணும்னு ஆசை  இல்லையா?

பதில் (ஒரு பெண்): அதெல்லாம் ஆசை  படக் கூட முடியாது. அந்த அளவுக்கு கனவு இல்ல.  வேணும்னா எக்ஸ்போர்ட்... அந்த மாதிரி போகலாம். புள்ளைங்க பசி பட்டினி இல்லாம சாப்பிடனும். கட்டறதுக்கு துணிமணி இருந்தா போதும். கடவுள் புண்ணியத்துல வேற எதுவும் வேணாம்.

மற்றொரு பெண் : ஒரு பக்கத்துல அந்த ஆசை  இருக்கு. ஆனா வருமானம் பத்தல. படிப்பு இல்லியே? படிக்கிறாங்க. பெயிலா போயிடுத்தே ? ஏதோ கம்ப்யூட்டர், கம்பெனி மாதிரி வேலைக்கு போகலாம். காலேஜ் ஆசை  எல்லாம் இல்லை. ப்ளஸ் டூக்கு மேல  டிகிரி படிக்ககா” வேணுமே .

இன்னொரு பெண்: இந்த மாசத்தில இருந்து விதவைக்கு பென்ஷன் 500 ரூபா வருதாம். வாழா வெட்டிக்கு பத்து பைசா  கூட பிரயோசனம்  இல்லை, கேட்டா, வீட்டுக்காரன் ஆக்சிடென்ட் ஆகி செத்துட்டானு  சர்டிபிகட்  கேக்கறாங்க. வாழாவெட்டியா இருக்கிறவங்களுக்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்து செய்யணு. ஆனா செய்ய  மாட்டேங்க்ரங்க . நாங்க எப்படி ரெண்டு குழந்தைங்க வச்சிகிட்டு விக்கிற வெலவாசிக்கு குடும்பம் நடத்த முடியும்? இதை யெல்லாம் டி.வி. பெட்டியில  போட்டு காட்டணும்.

கேள்வி : சரி, உங்களுக்கு வேறு என்ன பிரச்சினை? 

ஒரு பெண் : புள்ளைங்க கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்காங்க. ஒரு புள்ள இன்னிக்கோ  நாளைக்கோ  கல்யாணம் பண்ற நெலையில இருக்கு. 

கேள்வி : பொண்ணுங்க? 

பெண் : இல்லை சார் . ஆண் பிள்ளைங்களா இருக்கிறால பிரச்சினை இல்ல. ஆளாக்கி விட்டா அவனவன் பொண்டாட்டி புள்ளைங்கன்னு போயிடுறான். அப்புறம் தாய்  எப்படி பொழைப்பா? கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா ஆச்சேன்னு , தாய்க்கு  ஒரு பிடி சோறுபோட்டு  பெத்த புள்ளை 10 ரூபா கையில குடுத்தா அதுக்கு அவன் பொண்டாட்டி சண்டை பிடிப்பா. நாங்க அனாதை மாதிரி நின்னு தவிக்கிறோம்.

கேள்வி : இது எங்கேயும்  பணக்கார வீட்டிலேயும் இருக்கிறதுதான். சில பேர் பெத்தவங்களை ஆசிரமத்திலே  விட்டுட்டு போயிடறாங்க. சரி, இந்த
வேலையிலே  வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?

ஒரு பெண்: வேற ஒண்ணும் இல்ல. வந்தோமா குப்பையை வாரி பெருக்குனோமா, பீ இருந்தா கழுவி விட்டுட்டு போனமான்னு அதுதான் எங்களுக்கு.

வேறு பெண்: ஒரு அடிபட்டா கூட எங்களுக்கு பாதுகாப்பு இல்லே . 10 ரூபா கொடுக்க மாட்டாங்க. அப்பப்போ  உடம்பு சரியில்லாம போகுது. வழுக்கி விழுந்தா இந்தா 10 ரூபான்னு எங்கள தாங்கறதுக்கு ஆளு கெடையாது. இஷ்டம் இருந்தா செய்யுங்க, இல்லாட்டி போங்க. நீங்க இல்லே ன்னா, கொண்டக்காரி இல்லன்னா, பின் ஊக்குக்காரி வருவான்னு சொல்லறாங்க. அந்த அளவுக்கு டேலண்டா வேலை வாங்குறாங்க. சூப்பர்வைசர் கையிலதான் பதவியே  இருக்கு. சம்பளம் கொடுக்கற அன்னிக்கு அவரை கையில புடிக்க முடியாது. சம்பளம் கொடுக்கற ஓணரு எங்கயோ  இருக்காரு.

கேள்வி : சம்பளம் எவ்வளவு? அதுக்கு அக்ரிமென்ட் இருக்கா?
ஒரு பெண்: சம்பளம்னு போட்டா 5000 கொடுக்கணும். ஆனா 3000 தான் கொடுப்பாங்க. கையெழுத்து 5000 வாங்குவாங்க.

வேறு பெண் :  அதெல்லாம் தெரியாது. கையெழுத்து போட்டு வாங்கறதோடு சரி.

என்ன வாசகர்களே! பயணங்களின் போது ரயில்கள் நிலையத்தில் நிற்கும் நேரங்களில் கழிவறையில் மலம் கழிப்பதை தவிர்க்கும்படி ரயில்வே துறை பயணிகளுக்கு விடுக்கும் @வண்டுகோளை மறக்காமல் கருத்தில் கொண்டு கௌரவிப்பதற்கு மேற்படி  ஏழைத் தொழிலாளிகளின் களங்கம் அறியா  இந்த உரையாடல்கள் சற்றுத்  தூண்டுதலாக இருக்கின்றன அல்லவா?
                                                                                                                
 நட்புடன் 




                                                                                                             
அ.நாராயணன்.