Thursday, July 15, 2010






உலகம் முழுவதும், பெற்றோரை இழந்து, அரவணைப்பு தர வேண்டிய குடும்பங்களை இழந்து, தெருக்களிலும், ஆதரவற்றோர் விடுதிகளிலும் புகலிடம் தேடும், குழந்தைகளின் எண்ணிக்கை இன்றைய அளவில் 14  கோடிகளைத் தாண்டிவிட்டதாக ஒரு புள்ளி விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.  இவர்களில் எண்பது சதவீதம் ஆதரவற்றகுழந்தைகள், இந்தியா உட்பட வளரும் நாடுகளில் இருப்பவர்களே. இன்றைய அளவில், உலகில் உள்ள பல்வேறு பிரச்சினைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டால்,ஆதரவற்ற குழந்தைகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை, இப்படி நாளுக்கு நாள் குழந்தைகள் பெற்றோரையும், வீடுகளையும் இழப்பதற்கு குடும்பங் கள், சமூகம், அரசியல், அரசின் தவறான கொள்கைகள் என்று அனைத்திற்குமே குற்றப்பங்கு உண்டு.  இயற்கை விபத்துக்கள், சாலைவிபத்துக்கள், பொத்துப் போன விவசாயம், எயிட்ஸ் உட்பட பல்வேறு வகை நோய்கள், கொலைகள், குற்றங்கள், கந்து வட்டிக்கடன் தொல்லை, கள்ளச்சாராய சாவுகள், அரசே நடத்தும் சாராயக்கடைகளால் ஏற்படும் சாவுகள், முறைதவறும் உறவுகள் என்று நாளுக்கு நாள் காரணங்கள் அதிகமாகி வருகின்றன.

ஆயினும், ஆதரவற்ற இக்குழந்தைகள் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் காப்பகங்களில் எப்படி நடத்தப்படுகின்றனர்? எப்படிப்பட்ட எதிர்கால வாழ்க்கைக்கு இக்குழந்தைகள் தயார் செயப்படுகிறார்கள் என்பதைப்பற்றி சமூகம் அக்கறைப்படுவதற்கான அறிகுறிகள் சிறிதும் இல்லை என்பதே மிகவும் வேதனைக் குரியது.

அனாதை ஆசிரமம் என்பது, பலரும் தமிழகத்தில் பொதுவாக உபயோகிக்கும் ஒரு வார்த்தை.  தமிழ் சினிமாவில் வரும் பணக்காரத் தந்தைகூட, ஊதாரியான மகனிடம் கோபம் கொண்டு, “என் சொத்துக்களை ஒரு அனாதை ஆசிரமத்திற்கு எழுதி வைப்பேனே தவிர, உனக்கு ஒரு சல்லிக்காசுகூட கொடுக்க மாட்டேன்.” என்று வசனம் பேசுவார். ஆதரவற்ற குழந்தையை, அனாதை என்று அழைப்பது வழக்கமாயினும், அவ்வார்த்தை சற்றும் சிந்தனையில்லாமல் நாம் அலட்சியமாகத் தூக்கிவீசும் ஒரு அநாகரீகச் சொல்லே ஆகும். மேலும், வாழ்க்கையின் தொடக் கத்தில் இருக்கும் ஒரு குழந்தை, குடும்பத்தை இழந்து சந்தர்ப்பவசத்தால் தஞ்சமடையும் இடத்தை நிச்சயம் “ஆசிரமம்” என்று குறிக்கலாகாது.

சமூகநலத்துறை மூலமாகவும், உண்மையான தொண்டுள்ளத்துடன் அறக்கட்டளைகள் மூலமாகவும் நிர்வகிக்கப்படும் பல காப்பகங்களில் பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் குழந்தைகள் மிகுந்த பரிவுடன் நடத்தப்படுகிறார்கள் என்பது உண்மைதான். 

ஆயினும், அரசு பதிவு பெற்ற, பதிவு பெறாத நூற்றுக்கணக்கான காப்பகங்கள்குழந்தைகளுக்கு அடைக்கலம்கொடுக்கிறோம் என்கிற போர்வையில் மிகப்பெரிய அநீதி இழைத்து வருகின்றன என்பதும் உண்மையின் கசப்பான மற்றோரு பக்கம். பெரும்பாலான காப்பகங்களில், அரசு வரையறுத்துள்ள குறைந்தபட்ச வசதிகள்கூட செயப்படவில்லை.  இதில், அரசே நடத்தும் விடுதிகள்கூட விதிவிலக்கல்ல என்பதும் வேதனையான விஷயம். இடவசதி, படுக்கை வசதி, காற்றோட்டம், கழிப்பிடம், சுகாதாரமான உணவகம், தண்ணீர், உடை, முக்கியமாக அன்பு, பரிவு, புரிதல் என்று எல்லாவற்றிலும் பற்றாக்குறை.

விடுதிகளையும், காப்பகங்களையும் சமூகநலத்துறை மற்றும் குழந்தை நலகுழுமம் ஆகியவை ஆய்வு செய்து, வரையறுக்கப்பட்டுள்ளவசதிகள் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். அதேபோல, ஆய்வாளர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது காப்பகங்கள், விதிமுறைகளின் படி செயல்படுகின்றனவா என்று தணிக்கை செய்ய வேண்டும். ஆயினும், சமூகநலத்துறையில் உள்ள ஊழல்,  விடுதிகளையும் காப்பகங்களையும் முறைப்படுத்த வேண்டிய சரியான செயல்திட்டம் இல்லாமை ஆகியன எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். ஆதலால், சமூக நலத்துறை, நலங்கெட்ட ஒரு துறையாக உள்ளது என்பதே நடைமுறை உண்மை.

மிகுந்த மனஅழுத்தத்துடனும், உடல்நலம் இல்லாமலும் உள்ள விடுதிச் சிறுவர், சிறுமியரிடம் (Institutionalised Children) பரிவாகவும், பாசத்துடனும் பழகுவதுடன், அவர்களது பிரச்சினைகளையும், பயங்களையும் போக்குவதற்கு ஒவ்வொரு விடுதிகளிலும் “ஆலோசகர்கள்” “வழிகாட்டிகள்” இருக்க வேண்டியது மிக அவசி யம். ஆயினும், தகுதியுள்ள குழந்தை மனநல ஆலோசகர்கள், அரசு நடத்தும் விடுதிகளிலேயே பற்றாக்குறை. புற்றீசல் போல கிளம்பியுள்ள பல தனியார் காப்பகங்களில், குழந்தைகளின் மன அழுத்தம் பற்றிய குறைந்தபட்ச சிந்தனையோ, அதன் அவசியம் பற்றிய புரிதலோகூட இல்லை என்பதே வெளிப்படை.

திருமணசத்திரத்திலோ, இரயில் நிலையத் தங்கும் அறையிலோ, ஒரே ஒரு இரவைக் கழிப்பது கூட நம்மில் பலருக்கு மிகுந்த மன உளைச்சலைக்கொடுக்கும்.  மாட்டுக் கொட்டகைகள் போல சுகாதாரமற்று இருக்கும் பல காப்பகங்களின் வரிசையான படுக்கைகளில்,அருகில் இல்லாத தாய் தந்தையரின் நினைவுகளுடனும், ஏக்கங்களுடனும்,அடுத்தடுத்து படுத்துறங்கும் குழந்தைகளின் நிலையை சமூகம் நினைத்துப் பார்க்க வேண்டும்.


பல சிறுவர் விடுதிகளில், கொடையாளிகள் மூலம் உணவு படைக்கப்படும் பொழுது, விடுதிக் குழந்தைகள் உணவு உட்கொள்ளும் முன்,கொடையாளிகளை வாழ்த்தியும், அவர்களது நலனுக்காக கடவுள்களிடம் வேண்டிய பின்னரே, உணவு உட்கொள்ள விடுதி நடத்துபவர்களால் பழக்கப்படுத்தப்படுகின்றனர். ஆதரவற்ற குழந்தைகளின் நலனுக்காக, கொடையளிப்போர் இறைவனிடம் வேண்டுவதற்குப் பதில், விடுதிக் குழந்தைகளைக் கொண்டு கொடையாளிகளை வாழ்த்த வைப்பது எவ்வளவு கேவலமான செயல். 

மணநாள், பிறந்தநாள் என்று முக்கிய தினங்களில் கொடை அளிப்போரில் சிலர், விடுதிகளுக்கு நேரில் வரமுடியாத பட்சத்தில், மதிய உணவின் போது குழந்தைகள் தங்களுக்காக பிரார்த்தனை செய்தார்களா என்று தொலைபேசி மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளும் வேதனையான நிகழ்ச்சி களும் வாடிக்கைதான்.

எல்லா மதங்களின் பெயராலும், அன்னைதெரஸா, மகாத்மாகாந்தி போன்ற மகான்களின் பெயர் கொண்டும், பெட்டிக்கடைகள் போல ஒவ்வொரு ஊரிலும் தொடங்கப்பட்டுள்ள பல ஆதரவற்றோர் இல்லங்கள், அதனைத் தொடங்கியவர்களுக்கு ஒருவகைத் தொழில்களாகவே மாறிவிட்டன.  இவ்வகை விடுதிகளின் நிர்வாகிகள்,கொடையாளர்களின் முன்னால் சிறுவர் சிறுமியரை நடத்துவதற்கும்,தனிமையில் அவர்களை நடத்துவதற்கும் மிகுந்த இடைவெளி உண்டு.

இவ்வகை நிறுவனங்கள், வகை வகையான வீடியோக்கள், கலர் கலரான நோட்டீஸ்கள் என்று வெளியிட்டு அயல்நாட்டு நிதியைத் திரட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள், மனநலம் குன்றிய குழந்தைகள் ஆகியோர் அனுமதி கொடுக்க இயலாத நிலையில், அவர்களின் புகைப்படங்களை, கொடையாளர்களிடம் பச்சாதாபம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடுவது ஒரு வகையில் மனித உரிமை மீறலே.  முச்சந்திகளில் வாடிய குழந்தை முகத்தைக் காட்டி பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கும், இவர்களுக்கும் என்ன வித்தி யாசம்?

பல விடுதிகளில் சிறுகுழந்தைகள் முதல் வயதுக்கு வந்து விட்ட இளம் பிராயத்தினர் வரை பலருக்கும், காப்பகம் நடத்துபவர்களாலும் மற்றோராலும் ஏற்படும் பாலியல் தொல்லைகள், பாலியல் குற்றங்கள் பற்றி, மத்திய மாநில சமூகநலத் துறைகளுக்குத் தெரியாமல் இல்லை.

உதாரணத்திற்கு, தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான விடுதிகள் இருந்தாலும், மதுரை, சென்னை, கன்னியாகுமரி, மகாபலிபுரம் என்று சுற்றுலாத் தலங்களில் மிக அதிகமான எண்ணிக்கையில் அவை தொடங்கப்பட்டுள்ளன. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுத்து, அவர்களது டாலர் நோட்டுகளைப் பெறுவதே இவ்விடுதி தொடங்கியவர்களில் பெரும்பாலானவர்களின் நோக்கம்.

மகாபலிபுரத்தை எடுத்துக் கொண்டால்,   அங்கு மட்டும் கிட்டத் தட்ட 40 விடுதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. வந்து போகும் வெளி நாட்டு சுற்றுலாப்பயணிகள் சிலரின் குரூரத்திற்கு, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தலங்களில்,விடுதி இளம்சிறார்கள் பாலியல் ரீதியாக பலியாக்கப்படுவதாக பல வருடங்களாகச் சொல்லப் படுகிறது.  தமிழகத்தில் உள்ள மகாபலிபுரங்கள்,இன்றைய அளவில் “மகா பாவபுரங்களாக” மாறி வந்தாலும், இப்பிரச்சினை சமூக நலத்துறையையும், காவல்துறையையும்,சமூக ஆர்வலர் களையும், சமூகநீதி பேசும் அரசியல் தலைவர்களையும் இன்னும் உறுத்தவில்லை என்பது நம் மனசாட்சி ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.

புதிய சட்டசபை வளாகம் கட்டவேண்டுமென்று முடிவெடுத்து விட்டால், அதனை உடனே செயல்படுத்தி, அவ்வளாகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருவதைப் பார்த்து ஆட்சியாளர்கள் பூரித்துப் போகிறார்கள். ஆனால், எயிட்ஸ் நோய் பரவுவதற்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்றான, மது விடுதிகளை ஒரு பக்கம் மும்முரமாக நடத்திக் கொண்டே, எச்.ஐ.வி. குழந்தைகளுக்கு நல வாரியம் அமைப்பதாக நிதி நிலை அறிக்கையில் சொல்லி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், அதற்கான அடிப்படை வேலைகளைக் கூட பூர்த்தி செயாத அரசிடம் என்ன நியாயத்தை எதிர்பார்க்க முடியும்?

வண்ணத்தொ(ல்)லைக்காட்சி முதல் பொங்கல் இனிப்புப் பொட்டலங்கள் வரை முதலமைச்சர் களின் முகம் வரைந்து இலவசமாக விநியோகம் செய்ய போர்க்கால நடவடிக்கை எடுக்கின்றன நம் அரசுகள்.  ஆனால், இதே அரசுகள் தங்கள் தவறான, பல நடவடிக்கைகளின் விளைவாக, ஆதரவற்றுப்போன குழந்தைகளின் மேம்பாட்டிற்கு, போதிய முதலீடு செய்வதில் அக்கறை காட்டாதிருக்கின்றன.

தமிழகத்தில் மாவட்டத்தோறும் உள்ள குழந்தைநல குழுமங்களுக்கு (Child Welfare Committee) அவசியமான குறைந்த பட்ச வசதிகள்கூட செய்துதரப்படவில்லை. நல்ல ஒரு அரசுக்கு, சமூகநலத்துறையே மிக முக்கியம் வாய்ந்த ஒரு துறையாக இருக்க வேண்டும். ஆயினும் ஆழ்ந்த அனுபவமோ அல்லது குறைந்தபட்ச அக்கறையோ இல்லாத சட்டமன்ற உறுப்பினர்களையே சமூக நலத்துறை அமைச்சர்களாக ஆக்குவது பல வருடங்களாக தொடரும் வாடிக்கையாகி விட்டது.

காப்பகங்களில் உள்ள சிறுவர், சிறுமியர்களில் பெரும்பாலானோர், தாயோ (அதிகமாக) அல்லது தந்தையோ உள்ளவர்களே.  பல்வேறு காரணங்கள் இருந்தாலும், பெரும்பாலும் பொருளாதாரப் பிரச்சனையின் காரணமாகவே,அவர்கள் காப்பகங்கள் மற்றும் விடுதிகளில் விடப்படுகிறார்கள்.  பெற்றோர் ஆதரவு இல்லாமல், காப்பகங்களிலோ, விடுதிகளிலோ வாழும் பலர், வெளிச் சமூகத்தின் மேல் பயத்துடனோ, கோபத்துடனோ, தாழ்வுமனப்பான்மையுடனோ, குற்ற உணர்ச்சியுடனோ, தன்னம்பிக்கை இழந்தோ, இவை கலந்த மனஅழுத்தத்துடனேயோ நாட்களைக் கழிக்கிறார்கள். ஆதலால், பதினெட்டு வயதுக்குப் பின் காப்பகங்களை விட்டு வெளியேறி, சமூகத்தின் அங்கத்தினராக முழு வாழ்க்கை வாழ்வது அவர்களுக்கு ஒரு பெரும் போராட்டமாகவே அமைந்து விடுகிறது.

ஆறுமாதமோ, அல்லது ஓரிரு வயதோ ஆன பச்சிளங் குழந்தைகள் எளிதாகத் தத்துக் கொடுக்கப் படுகின்றனர். ஆனால், 4 வயது முதல் 16 வயதுவரை உள்ள ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் மற்றும் விடலைகளை யாரும் தத்தெடுக்க முன் வருவதில்லை. சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் ஒரு ஆதரவற்ற தாய்க்கு, கைம் பெண்ணிற்கு பொருளாதார ரீதியிலும், நல்ல ஆலோசனைகள் வழங்கியும் ஆதரவாக இருந்தாலே போதும், குழந்தைகளுக்கான காப்பகங்கள் பெருவாரியாகக் குறைந்துவிடும். அத்துடன், ஆதரவு அளிக்கும் ஒவ்வொரு குடும்பமும் பல்கலைக்கழகமாகி விடும்.

எங்கேயோ வெவ்வேறு சூழ்நிலைகளில் பிறந்து வளர்ந்த ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து தம்பதிகளாக ஆகமுடியும் என்றால், அவர்கள் பின்னர், ஒரு ஆதரவற்ற சிறுவனையோ, சிறுமியையோ தங்களுடன் இணைத்துக் கொண்டு, நிறைவான அர்த்தமுள்ள பெற்றோராகவும் முடியும் என்பதை ஏன் நம்மால் மனப்பூர்வமாக உணரமுடியவில்லை? குடும்பத்தை இழந்த ஒரு குழந்தைக்கு ஒரு மாற்றுக் குடும்பம், பெற்றோரை இழந்த ஒரு குழந்தைக்கு மற்றோரு பெற்றோர் அமைய வேண்டும். அதுவே ஒரு மேம்பட்ட சமுதாயத்தின் அடையாளம்.  இதுவே அரசின் கொள்கையாகவும் இருக்க வேண்டும்.

முத்தாய்ப்பாக ஒரு உண்மை நிகழ்ச்சியை விவரித்தால்தான் இக்கட்டுரை நிறைவு பெறும்.  
கும்பகோணம் பள்ளியில் குழந்தைகளைத் தீ விபத்தில் பறிகொடுத்து பெற்றோர் கதறி அழுததைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கண்கலங்கினார்கள் சென்னைக்கு அருகில் உள்ள ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகள்.  பின்னர், ஒருவருக்கொருவர் கலந்து ஆலோசிக்காமல், தனித்தனியே எல்லோரும், கும்பகோணத்துப் பெற்றோருக்கு எழுதிய ஆறுதல் கடிதங்கள் வெவ்வேறு முறையில் எழுதப்பட்டிருந்தன. ஆயினும், அவற்றின் மையமாக ஒரே கருத்தே அமைந்திருந்தது. 

“குழந்தைகளை இழந்து தவிக்கும் நீங்களும், பெற்றோர் இல்லாமல் வாடும் நாங்களும் இணைந்து, ஏன் மீண்டும் “அழகிய குடும்பங்கள்” ஆகக் கூடாது” என்பதே அக்கருத்து.    


No comments:

Post a Comment