Saturday, August 14, 2010

அன்புள்ள துணை முதல்வர்


                                                        எந்நாடும் போற்றுகின்ற
                                                        தமிழ்நாடு நன்றே ஆனால்
                                                        இருட்டறையில் தமிழ் மக்கள்
                                                        இருப்பதுவும் தீதே


                                                                                          - பாரதிதாசன்







அன்புள்ள துணை முதல்வர் ஸ்டாலின்  அவர்களே,
வணக்கத்தையும், 63வது சுதந்திர தின வாழ்த்துக்களையும், தெரிவித்துக் கொள்கிறேன். உறுப்பு தானம் போன்ற புனித மான காரியங்களில் ஈடுபட ஆர்வம் காட்டும் இளைஞர்களை உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு உளம் கனிந்த பாராட்டுக்கள்.


இன்றைக்குத்தான் ஏதோ காலம் கெட்டு விட்டது என்ற ரீதியில் சிலர் பேசுகிறார்கள். தான், தனது  கல்விதனது மகிழ்ச்சி, தனது வாழ்க்கை தனது நுகர்வு என்று  தங்களைப் பற்றி மட்டுமே  இன்றைய இளைஞர்கள் சிந்திக்கிறார்கள், சமுதாயத்தைப் பற்றியோ, சக மனிதர் களைப் பற்றியோசமுதாயத்திலும் அரசியலிலும் நடக்கும் வரலாறு காணாத அட்டூழியங் களைப் பற்றியோ, சிறிதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள், இது அவர்களது எதிர்காலத்தையும், வாழ்க்கைத் தரத்தையும், அவர்களது சந்ததியினரையும் தானே மிகவும் பாதிக்கும்! கல்லூரி பருவத்தில் இருக்கும் ஒரு இளைஞன் தானே நல்ல செயல்பாடுகளுக்கு முன்வருவான்? அதே போல அவன் தானே, சமுதாயத்தில் அநியாயங்கள் நடக்கும் போது உடனடியாகத் தட்டி கேட்பான்? அவசியமான விஷயங்களில் இன்றைக்கு அவனிடம்  ரௌத்திரம் இல்லையே? - இப்படி இவர்கள் புலம்புவது வழக்கமாகி விட்டது.



அமிதாப்பச்சன், ரஜினிகாந்த்   போன்றவர்கள் அன்று நடிக்கும் போது சித்தரிப்பார்களே!  Angry Young Man  அதாவது அநியாயத்தைக் கண்டு வெகுண்டு எழும் இளைஞன், இன்றைக்கு இப்படி  ஒருவன் கூட இல்லையே, எல்லா இளைஞர்களும் நிஜத்தில், இந்த ஊழல் கடலில் கலந்து விடுகிறார்களே! என்று இந்த அவ நம்பிக்கை பேர்வழிகள்  நினைக் கிறார்கள்.

உலகின் புரட்சிக் கருத்துக்கள் எல்லாம் பல்கலைக்கழகங்களில் அக்கினிக்குஞ்சுகளாய்ப் பொறிந்து, சமுதாயப்புரட்சிக்கு அடிகோலிய வரலாறுகள்  உள்ளனவே என்பது இவர்களின் ஆதங்கம்.


எல்.கே.ஜியில்  நுழைந்து, படிப்படியாக வளர்ந்து, கல்லூரிக்குள் நுழையும் தருவாயில், இன்றைய இளைஞன் பாடங்களைக் கற்றுத் தேறியிருக்கிறானோ, இல்லையோ? தனது முதுகெலும்பை முற்றுமாக இழந்து விடுகிறான், நெஞ்சில் உரமும்நேர்கொண்ட பார்வையும் தமிழக இளைஞனிடம் இல்லை என்று இவர்கள் கேலி பேசுகிறார்கள்.

கல்விக்கடன் மூலமாகவோ, பற்றாக் குறைக்கு தங்களது பெற்றோரின் நிலபுலன்களையும் விற்றோ, கஷ்டப்பட்டு பொறியியல் சீட்டுகளை வாங்கிய பின், தாங்கள் சேர்ந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரம் ரத்து என்று அரசு அறிவித்ததும் கொதித்து எழுந்தார்கள் இளைஞர்கள். உடனடியாக கல்லூரிகளின் மேசை நாற்காலிகளை அடித்து உடைத்தார்கள், “தாங்கள்  சேர்ந்த கல்லூரிகளில்  எந்த குறைந்தபட்ச அடிப்படை வசதிகளும் இல்லை, லேப் வசதிகள்  இல்லை, சீனியர்கள்  தான் விரிவுரையாளர்களாக பாடம் எடுக்கிறார்கள், கல்வி தரமற்று  உள்ளது. கல்விக்கான சூழலே இல்லைஎன்று டி.வி. கேமரா முன் கோபமும் அழுகையுமாக பேட்டி கொடுத்தார்கள். ஆனால் இந்தக் கோபம் 24 மணி நேரம் கூட தாங்கவில்லை, நிகர் நிலைப் பல்கலைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படாது, மாணவர்களின் சர்டிபிகேட்கள் செல்லுபடியாகும் என்று மத்திய அமைச்சர் சமாதான செய்தி அனுப்பியவுடன், இளைஞர்களின் தார்மீகக் கோபம் புஸ்வாணம் ஆகிவிட்டதே? அதே தரமற்றக் கல்லூரிகளில் தானேஅடுத்த நாளிலிருந்து போய் வரத் தொடங்கினார்கள்? ஆக தங்கள் சர்டிபிகேட் செல்லுபடி  ஆகாமல் போவிடுமோ என்ற பயம் மட்டும் தானே இந்த இளைஞர்களுக்கும்அவர்கள் பெற்றோர்களுக்கும் ஏற்பட்டது? தரமற்ற கல்வி பற்றி கவலைப் படாமல், சகித்துக் கொண்டு 4 வருடங்கள் படித்து (?) வெளிவரத் தானே தங்கள் மன நிலையைத் தயார் செய்து கொள்கிறார்கள்?
அண்ணா பல்கலைப் பொறியியல்  கவுன்சிலிங்கின் போது பிடிபட்ட போலி மதிப்பெண் சான்றிதழ்கள் போன்று, இந்த இளைஞர்களிடம் இருந்து வெளிப்பட்டவையும் போலிக் கோபங்கள்  தானேகுற்றங்களைத் தட்டிக் கேட்காமல் குற்றங்களுடன் ஐக்கியம் ஆகிவிடுகிறார்களே - இப்படி  இன்றைய இளைஞர்கள் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் இந்த சந்தேகப்பிராணிகள்.

இப்படி எல்லோரையும் குறை கூறுவது தான் இந்த அவநம்பிக்கையாளர்களின் பொழுது போக்கு என்கிறார்கள் இன்னொரு அணியினர்.

பெற்றோரும், சமூகமும்அரசின் கையாலாகாத்தனமும்ஓசோன்  படலம் போல நாடு முழுவதும் வியாபித்துள்ள ஊழலும் சேர்ந்து உருவாக்கியுள்ள  ஆரோக்கியமற்ற  சூழ்நிலையின் கைதிகள் தான் இன்றைய இளைஞர்கள், அவர்கள் மீது பச்சாதாபப்பட வேண்டுமே தவிர, அவர்களை சுயநலக்காரர்களாகவும், கோழைகளாகவும் சித்தரிப்பது, மற்ற அணியினரின் குறைகூறும் மனநிலையையே காட்டுகிறது. இளைஞர்களுக்கு முது கெலும்பு இல்லை, வீரம் இல்லை என்கிறார்களே, இவர்கள் இளைஞர்களாய் இருக்கும்போது கோபப்பட்டு இருந்தால், தட்டி கேட்டிருந்தால், இந்த நிலை வந்திருக்குமா என்று இன்றைய இளைஞர்களின்  நிலைமையை புரிந்து கொண்டவர்கள் போல் வாதாடுகிறார்கள் இந்த அணியினர்.

குழந்தைகளின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வரவிடாமல்தங்கள் பேராசைகளைத் திணித்து, இளைஞர்களாய் வளரும்போது, அவர்களது ஆளுமையை முடக்கிப் போட்டது பெற்றோரின் குற்றம். பெற்றோரின் தவறான  ஆசைகளுக்கு தீனிபோடுவது   இந்த பள்ளிகளும், கல்லூரிகளும். அதனால், இளைஞர்கள் கேள்வி கேட்காதவர்களாக, கேள்வி கேட்கத் தெரியாதவர்களாக, கேள்வி எது என்றே புரியாதவர்களாக, கல்லூரிப் படிப்புகளை முடித்து வந்து, சமூகத்தளத்தில்  பொத்தென்று விழுகிறார்கள், கேள்வி ஞானமே  இல்லாமல் இளைஞர்கள் வலம் வரும் வரையில் இன்றைய ஆட்சியாளர்களுக்கு நெருக்கடி ஏதும் வராது.

ஓடும் மேகங்கள் போன்று புரட்சி வருவது போல் தோன்றினாலும், அப்படியே  கலைந்து போய் விடும். ஆளும் கட்சியும்எதிர்கட்சியும் எதிர் பாட்டு பாடியபடி ஆட்சி கட்டிலை பகிர்ந்து கொள்ளலாம், அதனால், மாணவர்களின், இளைஞர்களின் நிலைமையில் அடிப்படை மாற்றம் கொண்டு வர இன்றைய தரமற்ற ஆட்சியாளர்கள் பெரிதாக ஒன்றும் செய்து விட மாட்டார்கள். இதற்கு இசைவான வழியில்பள்ளிகளும் கல்லூரிகளும், ஃபேக்டரிகளாக மருவி, மாணவர்களை உற்பத்திப் பொருளாக்கி விட்டன என்று  நீளமாகப் பரிதாபப்படுகிறார்கள் இந்த மாற்று அணியினர்.

பிராய்லர்   கோழிப்பண்ணைகளில்  எப்படி கோழிகளுக்கு சுதந்திரமே இல்லாமல், 24 மணி நேரமும் தீனியை உண்டு, உண்டு, உண்டு, எடை கூடி குண்டாக  வேண்டுமோ, அது போல நமது தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மாணவர்கள் சுதந்திரமாகவும், சுயசிந்தனையோடும் இருக்க முடியாது. இருக்கவும் கூடாது. பிராய்லர் கோழி எப்படி நாளுக்கு நாள் வேகமாக எடை கூடுமோ, அந்த அளவிற்கு அதற்கு சந்தையில் விலை கிடைக்கும். அது போல, மாணவர்கள் எவ்வளவு வேகமாக மனப்பாடம்  செய்கிறார்களோ, எவ்வளவு தேர்வுகள் எழுதுகிறார்களோஎவ்வளவு பாட(ர)ங்களை கபளீகரம் செய்கிறார்களோ (அஜீரணம் ஆனாலும்) அந்த அளவிற்கு அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்கும்”.  போட்டி   மிகுந்த சந்தையில் நல்ல விலையும் கிடைக்கும். இப்படிப்பட்ட "கோழிப் பண்ணை  போன்ற கல்விச் சூழ்நிலையில்" சமூகம் பற்றியும், பொது வாழ்வு பற்றியும், உரிமைகள், கடமைகள்  பற்றியும் அவர்கள் சிந்திக்க வாய்ப்பே இல்லை என்று இன்றைய இளைஞர்களுக்காக உச்சுச் கொட்டுகிறார்கள் இந்த எதிர் அணிக்காரர்கள்.

இந்த பொழுது போக்கற்ற நாற்காலி விமர்சகர்களை விட்டுத்தள்ளுங்கள்துணை முதல்வரே! உப்புச் சப்பற்ற வியாக்கியானங்களைக் கேட்க, வேகமாக முன்னேற்றம் அடைந்துவிட்ட தமிழகத்தின் துணை முதல்வருக்கு நேரமேது? சொல்ல வந்ததை விட்டு விட்டு இந்த அவதூறுகளை நான் எழுதி இருக்கக்கூடாது.

நம் இளைஞர்கள் நல்ல துடிப்பானவர்கள், மேதகு அப்துல்கலாம் போன்றவர்களால் உந்தப்பட்டு, அக்கினிச் சிறகுகள்  முளைக்கப் பெற்று  ஆகாயத்தில் உயர உயரப் பறக்க உழைப்பவர்கள். சரியான தலைமை வழிகாட்டினால், தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும் வல்லமை பெற்றவர்கள். நீங்கள் கூட ஒரு இளைஞரணித் தலைவர்தானே! நல்ல தலைமைப் பண்பிற்கு ஏற்ப ஆயிரக்கணக்கான கல்லூரி இளைஞர்கள் உங்கள் தலைமையில் உறுப்பு தானம் செய்வோம் என்று உறுதிப்படிவத்தில் கையெழுத்திட்டு  அசத்துகிறார்கள். இரத்ததானம், கண்தானம் போன்ற சமூக செயல்பாடுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபடுவது தெரிந்ததே. இளைஞர்கள் பல்வேறு வழிகளில்  சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறதுஎன்று பெருமைப் பட்டுள்ளார் பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர்.

இப்படிக் கிளம்பும் இளைஞர்கள்தான், பின்னர் சமூகத்தின் பால் காதலும் அக்கறையும் கொண்டவர்களாகத் திகழ்வார்கள் எனும் நம்பிக்கை அதிகரித்துள்ளது இல்லையா?

கடந்த சில வருடங்களாகவே தமிழக அரசு உறுப்புதானம் விஷயத்தில்  அதிக அக்கறை எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உறுப்பு தானம் பற்றியும், விபத்துக்களில் மூளைச் சாவுகள் ஏற்பட்டால் எப்படி விரைவாக  தானம் செய்தவரின் உறுப்புகளை அறுவடை செய்து, பாதுகாப்பாக காத்திருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பிப் பொருத்துவது போன்ற வற்றில் தமிழக அரசு  மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறது. இந்தியாவிற்கே தமிழகம் இந்த விஷயத்தில் முன் மாதிரியாகத் திகழ்கிறது.

தமிழக அரசின் உற்சாகத்திற்கு கைமேல் பலன் கிடைத்தும் வருகிறது, துணை முதலமைச்சர் அவர்களே!

ஆமாம்!  இன்று இந்தியாவிலேயே, மிக அதிகமாக உறுப்பு தானம்  செய்யும் விதமாக மூளைச் சாவுகளில் அகப்பட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று தோன்றுகிறது. தமிழகத்தில் இருப்பவை சாலைகளா? நரபலி பீடங்களா? என்று பலமுறை கேட்டாகிவிட்டது.

துணை முதல்வர் அவர்களே! உங்களுக்கு சில புள்ளி விவரங்களை உள்துறை அதிகாரிகள் அளித்துள்ளார்களா என்று தெரியாது.

2005 ம் ஆண்டில் தமிழகத்தில் ஒரு நாளுக்கு 25 பேர் சாலை விபத்துக்களில் இறந்து  வந்தார்கள். இன்றோ, ஐந்தே வருடங்கள் கடந்த நிலையில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 40 பேருக்கும் மேல் தமிழகத்தில் சாலை விபத்துக்களில் சாகிறார்கள். கடந்த 4 வருடங்களில், சாலை விபத்து சாவுகள் (13,746) 70 அளவிற்கு உயர்ந்து இந்தியாவிலேயே முதலிடத்தை  தக்க வைத்துக் கொண்டு இருப்பது தமிழகத்தின் மற்றோரு சாதனையா? உங்கள் அரசின் 5 வருட ஆட்சி முடியும் தருவாயில், சாலை விபத்துச் சாவுகள் தமிழகத்தில் கிட்டத்தட்ட 80 விழுக்காட்டிற்கும் அதிகமாக உயர்ந்திருக்கும் என்று ஊகிக்க முடிகிறது. இவர்களில் மூளைச்சாவு என்று விதிக்கப்பட்டவர்களும் அதிகமாக  இருப்பார்கள் இல்லையா? ஆக, உறுப்பு தானங்களுக்கு தமிழகத்தில் இப்போதைக்கு பஞ்சமிருக்காது என்று தான் தோன்றுகிறது. உறுப்பு தானத்தில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதற்கு இணங்க, சாலை விபத்துக்களில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இறப்பவர்களும் இளைஞர்களே!

உங்கள் அரசோ, உலக வங்கிகளிடம் கடன் மேல் கடனாக வாங்கி (அரசிடம் தான் காசே கிடையாதே, பற்றாக்குறை பட்ஜெட் தானே) சாலைகளை மேம்படுத்திக் கொண்டே வருகிறீர்கள். அதே வேகத்தில் கடைகளையும், பார்களையும், அதிகரித்துக் கொண்டே வருகிறீர்கள். (கட்சிக்காரர்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும்) இந்த பார்களில்  குடித்துவிட்டு ஓட்டி   விபத்துக்கள் அதிகரிப்பதால், தமிழக மருத்துவ மனைகளின் உறுப்பு தானப் பிரிவுகள்” ரொம்ப  பிசியாகிக் கொண்டு இருக்கின்றன. சரிதானே!

தமிழகமே கோவையில் செம்மொழி மாநாட்டை கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டு இருந்த போது, தர்மபுரியில் ஒரு திருமண வீடு, மிகப் பெரிய இழவு வீடான சோகம் ஞாபகத்தில் இருந்து மறைய மறுக்கிறது, தலைவர் அவர்களே! டிரைவர் குமரவேல், பாலக்கோடு டாஸ்மாக் பாரில் குடித்து விட்டு, மினிலாரியை ஓட்டிய போது, திருமண கோஷ்டியில் 18 பேர் கொத்தாக இறந்ததோடு, 34 பேர் காயம் அடைந்தார்களே!

குடித்துவிட்டு ஓட்டும் ஒருவர் மனித வெடிகுண்டு போல என்று நீதிபதி ஒருவர் கூறினார். நீங்கள் கடைகளையும் பார்களையும் அனுமதித்துவிட்டு, மாத இலக்கு விற்பனையை எட்ட வேண்டும் என்பதால், வரைமுறையில்லாமல் எல்லோரும் குடித்துவிட்டு ஓட்ட அனுமதிக்கிறீர்களே! எப்படி இதைச் செய்ய முடிகிறது இளைஞரணித் தலைவரே!
இலக்கு வைத்து அரசு சாராய விற்பனை.
தகவல் கேட்கும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டது.
2004 ஆண்டு அன்றைய முதல்வர் திடீரென்று சாராய விற்பனையை அரசு மூலம் எடுத்துக் கொண்டு, அதிரடியாக, கடைகளை 3000த்திலிருந்து 7000ஆக உயர்த்தினார். அப்பொழுது உங்களது சகா, அன்புக்குரிய இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள், “ஜெயலலிதா அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக்கொள்கை 47ற்கு எதிராக நடந்து கொள்கிறார், அரசே சாராய விற்பனையை கையில் எடுத்து முடுக்கி விடுவது மக்கள் விரோதமானது” என்று கண்டனம்  தெரிவித்தது இன்றும் நன்கு நினைவில்  இருக்கிறது.  நீங்களோஊழியர் சம்பளம் ஆனாலும் செம்மொழி மாநாட்டுச் செலவானாலும்அவை எல்லாவற்றிற்கும் சாராயக் கடைகளை மட்டுமே அட்சயபாத்திரமாக கருதத்தொடங்கி விட்டீர்கள்.

2004-05ல் 3500 கோடியாக இருந்த வருமானம் தற்போது 14,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே? அதற்கேற்ப, உங்கள்  ஆட்சியில் கடந்த 5 வருடங்களில் 3 லட்சம் மக்களுக்கும் மேல் சாலை விபத்துக்களில் காயம் அடைந்துள்ளனரே! இவர்களில் எத்தனை பேருக்கு கைகால் சிதைந்தனவோ? இப்படி சிதைந்தவர்களுக்கு ஏற்ற உறுப்புகள் தானமாக கிடைக்காதே? முடிந்தால் செயற்கை கால்கள், முடியாவிட்டால் இருண்டு போன எதிர்காலம்.

ஒன்று தெரியுமா? உறுப்புகளிலேயே மிக முக்கியமான ஒன்றாகிய கல்லீரலை டாஸ்மாக் சாராயத்திற்கு பலி கொடுத்துவிட்டு, மூளைச்சாவு மூலம் யாராவது கல்லீரல் உறுப்பு தானம் செய்யமாட்டார்களா என்று தவம் இருப்பவர்கள் தமிழகத்தில்  நாளுக்கு நாள்  அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி கல்லீரல்களை குடிமூலம் தொலைத்துவிட்டுமாற்றுக் கல்லீரல்களுக்காக காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்களே!
ஆரோக்கியமான கல்லீரல்








மதுவினால் பாதிக்கப்பட்ட கல்லீரல்கள்












உறுப்பு தானத்திற்கு இளைஞர்களை உறுதிமொழி எடுத்துக் கொள்ளச் சொல்வது இருக்கட்டும். குடிக்காமல் இருப்பதற்கும், குடித்துவிட்டு ஓட்டாமல் இருப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள இளைஞர்களை வழி நடத்தத் தயாராகுங்கள், இளைஞரணித் தலைவரே!


குடித்துவிட்டு ஓட்டுபவர்களால் ஏற்படும் விபத்துக்களில் உறுப்புகளை இழப்பதற்கும், விபத்துக்களில் மூளைச் சாவு ஏற்பட்டு உறுப்புதானம் செய்ய நேர்வதற்கும், குடித்துக் குடித்து உறுப்புகளை கெடுத்து விட்டு உறுப்பு தானம் வேண்டியபடி நோயாளி இளைஞர்கள் மருத்துவமனை படுக்கைகளில் உடல்வற்றிக் கிடப்பதற்கும், அடுத்தடுத்த தமிழக அரசுகளின் சாராயக் கொள்கையே நேரடிக் காரணமாவது உச்சக் கட்ட அவலம் இல்லையா?

ஆங்கிலேயர் நமக்கு விடுதலை கொடுத்து  63 வருடங்களாகி விட்ட நிலையில், உள்நாட்டில் உற்பத்தி ஆகும் அயல்நாட்டு சரக்கு  என்றீர்கள். அவற்றை  முச்சந்திகள்  தோரும்  கடைச்சரக்காக்கி, இளைஞர்களை மந்தை மந்தையாக அவற்றிற்கு அடிமை யாக்குவதையும், அதனால் பல்வேறு நோய்கள் வந்து அவர்கள் சாவதையும்  மிக முக்கிய முழுநேர வேலையாக்கி விட்டது நமது அரசு.

இந்நிலையில், உறுப்புதானப்பிரச்சாரத்தை இளைஞர்களிடம் முடுக்கி விடுவதற்கு உங்களுக்கு   என்ன தார்மீக தகுதி இருக்கிறதுதுணை முதல்வர் எனும் அதிகாரம் கொடுக்கும் சக்தியைத் தவிர? சிந்தியுங்கள்  துணை முதல்வரே! இளைஞனையும் சிந்திக்க விடுங்கள்!

சாராய விஷ வாயுவினால்
       மூச்சடைத்துக் கிடக்கிறான் இளைஞன்
அவன் கண்கள் சொருகுகின்றன
       நரம்பு மண்டலம் புடைக்கிறது.
பாவம் அவன்! அரசே செய்யும் பாவம் இது!
       சாராய விஷவாயுத் தொட்டியை மூடுங்கள்!
அவன் சுதந்திரக் காற்றை சுவாசிக்க உதவுங்கள்
       தயவு செய்து!
                                          மிகுந்த வருத்தத்துடன்
                                               சமூகன்




1 comment:

  1. நல்ல படைப்பு வாழ்த்துக்கள்

    ReplyDelete