Tuesday, July 13, 2010





குடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் இன்றைய கால கட்டத்தில், குடிநோயில் சிக்குண்டு, தங்களது மற்றும் தங்கள் குடும்பங்களின் எதிர் காலத்தை தொலைத்துக் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது.
உண்மை நிலையைக் கூறுவதானால், மலேரியா, சிக்குன் குனியா, காசநோய், எச்.ஐ.வி. எயிட்ஸ், புற்றுநோய் போன்ற பலவித நோய்களை விட, மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களை விட குடிநோயின் தாக்கமே, தமிழகக் குடும்பங்களை நாளுக்கு நாள் அதிகமாக பாதித்து வருகிறது.
பொதுவாக, குடிப்பழக்கம் இருப்பவருக்கு, குடிக்காத மற்றவர்கள் வந்து, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்வதனாலோ, உதவுவதனாலோ, எதிர்மறையான விளைவுகள் ஏற்படுவதற்கே வாய்ப்புகள் அதிகம்.  குடிக்காத ஒருவர், குடிநோய் உள்ளவரின் மனநிலையிலிருந்து அணுகுவது இல்லை அல்லது அணுகமாட்டார் என்று மற்றவர் கருதுவதே இதற்குக் காரணம்.
குடிநோய் முறிவு மையங்களில் கூட, ஆலோசனைகளுடன் சில மருந்து, மாத்திரைகள் கொடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவரின் முழு ஒத்துழைப்பு இல்லையென்றால், குணமடைவது மிகக் கடினம்.  தற்காலிகமாக குடிப்பதை நிறுத்தினாலும், சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப் பின்னர், மீண்டும் தீவிரமாக குடியை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.
இதனைப் புரிந்து கொண்ட, தீவிரமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த இரு குடிநோயாளிகள், நண்பர்களானார்கள்.  தாங்கள் எப்படியும் ஒருவருக்கொருவர் இணைந்து உதவிக் கொண்டு, நோயிலிருந்து விடுபட வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டனர்.  அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் 1935ம் ஆண்டு சந்தித்துக்கொண்ட, 'பில் வில்சன்' மற்றும் 'பாப்ஸ்மித்' ஆகிய இவ்விருவரே குடிநோயில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் கொண்டோருக்காக ஒரு அமைப்பை தொடங்கி, 'ஆல்கஹாலிக் அனானிமஸ்' (AA) என்று பெயரிட்டனர்.
'அஅ' கூட்டங்களுக்கு வருவோர், மது அருந்து வதைத் தவிர்த்து குணமடைவதற்கு ஏதுவாக, 'பன்னிரண்டு அம்ச வழிமுறைகள்' (12 - Steps) மற்றும் 'பன்னிரண்டு அம்ச விதிமுறைகள்' (The 12 Traditions) ஆகியவற்றை ஏற்படுத்தினர்.
1935ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'AA'பின்னர் உலகின் எல்லா நாடுகளிலும், நகரங்களிலும் சிறு சிறு சுயஉதவிக்குழுக்கள் போன்று செயல்படத் துவங்கின. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குடி நோயாளிகள், இவ்வகை 'AA'  குழுக்களில் உறுப்பினர்களாகி பயன்பெற்று, தாங்களும் குடி நோயிலிருந்து விடுபட்டு, மற்றவர்களும் விடுபடுவதற்கு உதவி செய்து, தங்களது வாழ்க்கையையும், குடும்ப மகிழ்ச்சியையும் மீண்டும் புதுப்பித்துள்ளார்கள்.  இன்றைய அளவில் உலகெங்கும், 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட 'AA'  குழுக்களும், 20 இலட்சம் உறுப்பினர்களும் உள்ளனர்.
தமிழகத்தைப் பொருத்தவரை, கிட்டத்தட்ட 120 'AA' குழுக்கள் உள்ளன. பொதுவாக இவை, கிறித்துவ தேவாலயங்கள் அல்லது அவர்களது கல்வி நிலையங் களை ஒட்டி அமைந்துள்ளன.  சமூக சேவையை முன்னிறுத்தும் கிறித்துவ தேவாலய அமைப்புகள்'AA' ஏற்படுவதற்கும், தொடர்ந்து நடப்பதற்கும் உந்துதலாக உள்ளன.
ஆயினும்'AA' குழுக்கள், எந்த மதசார்பும், அரசியல், கல்வி, சமூக, பொருளாதார சார்பும் இல்லாதவை.  'AA' அமைப்புகள் யாரிடமும் நன்கொடை வசூலிப்பது, இலவச உதவிகள் பெறுவது ஆகியவற்றை முற்றிலும் தவிர்த்து, குழு உறுப்பினர்களே இணைந்து, செலவுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  அதே போல்'AA' கூட்டங்களுக்கு வரும் எவரும், அவர்களது பெயர், முகவரி உட்பட அவர்களது விபரங்களை அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.  'AA' கூட்டங்களுக்கு யாரும் வந்து கலந்து கொண்டு அமைதியாகத் திரும்பலாம்.
ஒவ்வொரு வாரமும், குறித்த நேரத்தில், குறித்த இடத்தில் சந்தித்துக் கொள்கிறார்கள்.  தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.  கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் எப்படி குடிக்காமல் தவிர்த்தனர் என்பதைப் பற்றியும், வரும் வாரம் தினமும் குடிக்காமல் இருப்பது பற்றியும் கலந்துரையாடி, ஒருவொருக்கொருவர் உறுதிமொழி எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு, 12 அம்ச வழிமுறைகள் மற்றும் 12 அம்ச விதிமுறைகள் உதவுகின்றன. புதியதாக குடி நோயில் இருந்து விடுபட யாரேனும் விருப்பம் தெரிவித்தால், அவர்களை அணுகி, விபரங்களைத் தெரிவித்து, தங்களது கூட்டங்களுக்கு வருவதற்கு தூண்டு கோலாக செயல்படுகின்றனர்.  இப்படியாக 'AA' குழு வட்டங்கள் பெரிவடைவதும், புதிய இடங்களில் குழுக்கள் உருவாவதும் ஏற்படுகின்றன.
தாங்கள் குடிநோயில் இருப்பதற்கு, வேறு யாரும் அல்லது குடும்ப, சமூக சூழல் காரணமில்லை, தாங்கள் தான் முழுவதும் காரணம் என்கிற புரிதல், இவ்வகை 'AA' கூட்டங்களின் மூலம் ஏற்படுகிறது.  மேலும், குடிநோய் என்பது, உடல் பாகங்களில் ஒவ்வாமை மற்றும் மனபாதிப்பு என இரண்டு வகையாகவும் வெளிப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்கிறார்கள்.  குடிக்காமல் செயல்பட முடியாது என்ற நிலை மாறி, குடியை ஒவ்வொரு நாளாக நிறுத்துவதனால்உடல், மனம் மற்றும் குடும்பத்திற்கு, உடனடியாக ஏற்படும் நன்மைகள் பற்றிய புரிதல் எற்படுகிறது.
மதுவின் முன் நாம் சக்தியற்றவர்கள், ஆதலால், குடியை நிறுத்துவதற்கு நம்மை காக்கும் கடவுள் அல்லது ஒரு சக்தியின் உதவி தேவைப்படுகிறது என்பது போன்ற ஆன்மிக நம்பிக்கை உடையவர்களாக ஆகிறார்கள்.  குடும்பங்களுக்கு பணப் பற்றாக்குறை, அலைச்சல், மன உளைச்சல் ஆகியவை ஏற்படுத்தாமல், குடிப்பழக்கம் உள்ளவர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு'AA' அமைப்புகள் ஏற்றவையாக உள்ளன என்றால் மிகையாகாது.
'AA' போன்றே, குடிநோயில் உள்ளவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தாருக்காக ஏற்பட்டுள்ள மற்றோரு சுய உதவி அமைப்பே (Al-Anon) 'ஆல் அனான்'  எனப்படுபவையாகும். 'ஆல் அனான்' கூட்டங்களில், குடிநோயாளியின் மனைவி, சகோதர, சகோதரிகள் ஆகியோர் கலந்துகொண்டு, ஒருவருக்கொருவர் புரிதலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
சாதி, மதம், சமூகம், கல்வி ஆகிய சார்பு இல்லாத இவ்வகைக் கூட்டங்களில், பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் கலந்து கொண்டு, குடிநோய் பற்றிய புரிதலை அதிகப்படுத்திக் கொண்டு, மன அழுத்தங்களையும் குறைத்துக் கொள்ள முடியும்.  குடிப்பழக்கம் உள்ள தங்களது கணவர் அல்லது குடும்ப உறுப்பினரை, இனி ஒரு ஆரோக்கியமான மனநிலையில், கோணத்தில், அணுகமுடியும்.
'AA'  போன்றே, போதைப் பொருட்களுக்கு அடிமையாய் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் உந்துதலாய் இருந்து மீண்டு வருவதற்கு ஏதுவாய், 'Narcotics Anonymous' (NA)  அமைப்புகளும் செயல்பட்டு வருகின்றன.
'AA', 'Al-Anon', 'NA' அமைப்பு உறுப்பினர்கள், யாரையும் எதிர்ப்பதோ, எதிர்வினை ஆற்றுவதோ இல்லை.  எந்தவித விவகாரத்திலும் தலையிடுவதோ, உதவி கேட்பதோ, சுயவிளம்பரம் செய்து கொள்வதோ இல்லை.  மற்ற உறுப்பினர்கள் குடி அல்லது போதையிலிருந்து விடுபடுவதற்கு உந்துதலாய் இருப்பதன் மூலம்,  தாங்களும் குடி நோயிலிருந்து மீளமுடியும் என்பதே அவர்களின் முதன்மையான 'குறிக்கோள் சார்ந்த நம்பிக்கை'யாகும்.
இந்த நிலையில்'AA' மற்றும் 'Al-Anon' போன்ற குழுக்கள் மூலமே, பலர் தொலைத்து விட்ட அமைதியையும், வாழ்க்கையையும் மீண்டும் புனரமைத்துக் கொள்ள முடியும். 'AA' அமைப்புகளும்உறுப்பினர்களும், தமிழகத்தில் மிக மிகக் குறைந்த அளவிலேயே செயல்பட்டு வருகின்றனர்.  இந்நிலைக்கு'AA' பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும், 99.99 சதவீத மக்களுக்கு எதுவும் தெரியாததே காரணம்.
'AA' அமைப்புகள், சுய விளம்பரமோ, உதவியையோ அவர்களாகவே நாடமாட்டார்கள் என்கிற கட்டுப்பாடு உள்ளதால், இனி தமிழகத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள், எல்லா மதங்களையும் சேர்ந்த ஆன்மிக அமைப்புகள், தனியார் மற்றும் அரசு பள்ளி - கல்லூரிகள், நிறுவனங்கள் ஆகியோர்'AA' பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்த முன்வர வேண்டும். இதற்கு ஏற்ற வகையில் அந்த பகுதிகளில் குடிநோய் பற்றியும், AA பற்றியும் விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஆர்வலர்கள் ஏற்பாடு செய்யலாம். எந்தவித அரசியல் மற்றும் இயக்கரீதியான குறுக்கீடு செய்யாமல் சாதி மத அரசியல் சார்பு இல்லாத விழிப்புணர்வு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தால்'AA' உறுப்பினர்களோ, குடி நோயில் இருந்து விடுபட்டு, வாழ்க்கையை சீர் அமைத்துக் கொண்டவர்களோ, தங்கள் அனுபவங்களை இக்கூட்டங்களுக்கு வந்து பகிர்ந்து கொள்ள தயாராகவே இருப்பார்கள். புதிய குழுக்களுக்கு வேண்டிய இட வசதிகளை மிக மிகக் குறைந்த வாடகைக்கு தருவதற்கும் முன்வர வேண்டும்.  தங்களுக்குத் தெரிந்த குடிநோய் உள்ள நண்பர்களையும், குடும்ப உறுப்பினர்களையும்'AA' குழுக்களின் கூட்டங்களுக்கு செல்லுமாறு உற்சாகப்படுத்த வேண்டும்.
இன்று, மிகக் குறைந்த அளவிலேயே 'AA' குழுக்கள் உள்ள தமிழகத்தில், கிராமங்கள் தோரும், ஆயிரக்கணக்கில் அக்குழுக்கள் அமைவதற்கு வேண்டிய முன் முயற்சிகளை எடுப்பதற்கு, எல்லோரும் முன்வர வேண்டும்.  இதனை நமது சமூகக் கடமையாக கருதினால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளியேற்றி வைத்த புண்ணியம் வந்து சேரும்.

No comments:

Post a Comment