என் பெயர் ‘கான்’, நான்
தீவிரவாதியல்ல!
அன்புத்தோழர்களே!
‘என் பெயர் கான்’. இது,
இரு ஆண்டுகளுக்கு
முன், தீவிரவாதி என்று
தவறாகக் கருதப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட இஸ்லாமிய இளைஞராக ஷாருக்கான் நடிந்து
வெளிவந்த ஒரு சூப்பர் ஹிட் இந்தித் திரைப்படம்.
அ.நாராயணன் |
கடந்த மாதம், உச்சநீதிமன்றம் குஜராத் அகமதாபாத் நகரில் 1994ம் ஆண்டு (18 ஆண்டுகளுக்கு
முன்) பூரி ஜெகன்னாத் கோவில் திருவிழாவின்போது, கலவரம்
உண்டாக்கத் திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டு கடும் சிறையில் தள்ளப்பட்ட, 11 இஸ்லாமியத் “தீவிரவாதி”களை விடுவித்து
உத்தரவிட்டது. தடா சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குஜராத் நீதிமன்றத்தால், தீவிரவாதிகள்
என்று தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த இந்த 11 இஸ்லாமியர்களின்
முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேற்கூறப்பட்ட திரைப்படத்தில், ஷாருக்கான் வசனமாகச் கூறுவார். “என் பெயர் கான், நான் ஒரு
தீவிரவாதி அல்ல”. இந்த வசனத்தை மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்றம், ‘கடுமையான தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, குற்றப்
பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், அவர்களை கைது செய்த போதும், வாக்கு மூலம் வாங்கிய போதும் சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படவில்லை, ஆகையால் அவர்களை
விடுவிக்கிறோம்’ என்று
தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களை நிரபராதிகள் என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை. மாறாக, ‘தனிமனிதர்கள் ஒரு
மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் மட்டும், அவர்கள் மீது சட்டத்தைத் தவறாகக் கையாள்வதை அனுமதிக்க முடியாது’ என்று
கூறியுள்ளது.
‘சரியான வழிமுறைகளைப் பின்பற்றாத நிலையில், எந்த ஒரு அப்பாவி மனிதனும் தனக்குள்ள மதநம்பிக்கையினால்
தவறாக முத்திரை குத்தப்பட்டுவிட்டோம், சட்டத்தைத் மோசமாகக் கையாண்டு, நமக்கு அநீதி இழைத்துவிட்டார்கள் என்று நினைத்து
விடக்கூடாது என்பது மிக அவசியம்’ என்றும் பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம்.
‘எவ்வளவு கடுமையான சட்டமாக இருந்தாலும், வழிமுறைகள் ஒழுங்காகக் கையாளப்படவில்லை என்றால், மூன்று பாதிப்புகள் ஏற்படும். ஒன்று, அப்பாவிகள்
தண்டனை அனுபவிப்பார்கள். இரண்டு, உண்மையான தீவிரவாதிகள் தப்பித்துவிடுவார்கள். மூன்றவதாக, சட்டம் ஒரு மதத்தின் மீது துஷ்பிரயோகம் செய்யப்பயன்படுத்தப்படுகிறது
என்று நாட்டின் எதிரிகள் பரப்புரை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது’ என்று தெளிவாகக்
கூறியுள்ளது உச்சநீதிமன்றம்.
மிகச் சிறந்த தீர்ப்பாக
இருந்தாலும், இப்பொழுது 18 ஆண்டுகள்
சிறையில் அடைக்கப்பட்டதற்கும், தடா சட்டத்தின்கீழ் மிக மோசமாக துன்புறுத்தப்பட்டதற்கும், அவர்களது
குடும்பங்கள் அனுபவித்து விட்ட கடுந்துயரங்களும் என்ன இழப்பீடு அளித்துவிட முடியும்?
நாடு முழுவதும் இப்படி, நிரபராதிகள்
என்று நிரூபிக்கப்பட்டு விடுதலையான சில இளைஞர்கள், நல்ல கல்வி இருந்தாலும், எந்த ஒரு
நிறுவனங்களிலும் சேர்த்து கொள்ளப்படாமல்,
“என் பெயர் கான்” என்ற
முத்திரையுடன் வேலை வாய்ப்பும், மரியாதையும்
இல்லாமல் வாடி வருகிறார்கள்.
அதுபோக, இன்றைக்கும் நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள், தீவிரவாதிகள் என்ற முத்திரையுடன் விசாரணையன்றி சிறைகளில் வாடுகிறார்கள். இந்தத்
தீர்ப்பிற்குப் பின்னராவது,
விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டு, இந்தியா
முழுவதும் இவ்வாறு சிறைகளில் வாடும் அப்பாவிகள் எல்லோரும் விடுவிக்கப்பட வேண்டியது மிக அவசியம்.
இந்தியாவில்
காவல்துறையினரில் பெரும்பாலாரின் இதயமும் ஈரலும் கெட்டுவிட்டது என்றுதான் கூறத் தோன்றுகிறது. அரசுப் பதவிகளும், பதக்கங்களும், வெகுமதிகளும்
கிடைக்கும் என்பதனால், சோடிக்கப்பட்ட ‘தீவிரவாதி’ வழக்குகள் எண்ணிக்கையில் அடங்காதவை.
என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் கணக்கு
யாருக்கும் தெரியாது. மாவோயிஸ்டுகள் என்று கணக்குக்காட்டி பழங்குடி இன ஆண்களையும், பெண்களையும்
கொன்று வெகுமதி வாங்கிய பாதுகாப்புப்படை வீரர்கள் பற்றி செய்திகள் கடந்த காலங்களில்
வந்துள்ளன.ஆயினும் நியாயம் கிடைக்கவில்லை. நீதி வழங்கப்படவில்லை என்பதுதான்
உண்மை.
பாதுகாப்புத் துறைகளில்
உள்ள இரக்கமற்றவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், ‘அண்மைச் செய்தி’யை பரபரப்பாக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் போட்டியில், சற்றும் நாகரீகமற்று தர்மமற்று அப்பாவிகளைத் துரத்தித் துரத்தி அவர்களது
புகைப்படங்களை வெளியிட்டு தீவிரவாதிகள் என்று கடந்த காலங்களில் விசாரணையின்றி அவர்களாகவே தீர்ப்பளித்து பரப்புரை செய்துள்ள ஊடகங்களுக்கு
தண்டனை அளிப்பது யார்?
இந்த தீவிரவாத முத்திரை போன்றே,
அமைதியான
உறுதியான மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதற்கு, அரசுகள் இன்றைக்குப் பயன்படுத்தும் மற்றொரு முத்திரை “தேச துரோகம்”. ஆதிவாசிகள் நலனுக்காக பாடுபடும் மருத்துவர் பினாயக் சென் ஆனாலும், ஊழலை எதிர்த்து அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்து தள்ளும்
கார்ட்டூனிஸ்ட் ஆனாலும், அணுஉலை அமைப்பதற்கு
எதிராக வன்முறை தவிர்த்து அகிம்சே வழியில் மக்களைத் திரட்டும் போராளிகளானாலும், எல்லோர் மீதும் இன்றைக்கு வெகு சுலபமாகப் போடப்படுவது “நாட்டிற்கு எதிராக சதி செய்தார்கள்” எனும்
வழக்குகள்தான்.
ஒரு ஜனநாயக நாட்டில்
அரசியமைப்புச் சட்டத்தை காலடியில் போட்டு மிதித்துவிட்டு,
ஆட்சியாளர்களுக்குப்
பிடிக்காதவர்கள் மீது அவதூறு பேசுவதையும், தேச துரோகிகள் என்றோ, தீவிரவாதிகள் என்றோ முத்திரை குத்தப்படுவதையும், அதற்காக சட்டத்தை தங்களுக்கு ஏற்ற வகையில் வளைத்துக்
கொள்வதையும் இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. ஆட்சியாளர்களின் இந்த தவறான மக்கள் விரோத அணுகு முறை கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
சமீபத்தில், கூடங்குளம் அருகே கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அதுவும் அதிகமாக
பெண்களும், குழந்தைகளும்
கொண்ட கூட்டத்தை, முட்டாள் தனமாக, கண்ணீர் புகை
கொண்டும், லத்தியைச் சூழற்றியும், அடித்துக் கலைத்த செயல் சிந்திக்கும் திறமை கொண்ட யாரும் செய்திருக்க முடியாத ஒன்று.
கடற்கரைக்குள் ஓடிய
மக்கள் பலர், கடல்நீரில்
மூழ்கி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் ஆபத்து பொதிந்திருந்த மோசமான நடவடிக்கை அது.
இந்நிகழ்வைத்
தொலைக்காட்சியில் பார்த்தபோது, 1999ம் ஆண்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீது மூர்க்கத்தனமாக தடியடி
நடத்தியும், கற்களையும், செங்கல்களையும் தூக்கி வீசியும், குழந்தை பெண்கள்
உட்பட 17 பேர் தாமிரபரணி ஆற்று நீரில் முழ்கி
விடக்காரணமானதுமான அன்றைய சிறப்புக்காவல் துறையினரின் வெறிச் செயல்தான் உடனடியாக மனக்கண்முன் பளிச்சிட்டது.
தாமிரபரணி ஆற்றின்
கரையில் நடந்த மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷனர் இரு ஆண்டுகள் கழித்து 2002ம் ஆண்டு தனது விசாரணை முடிவைத் தெரிவித்தது.
‘தோட்டத் தொழிலாளர்கள் மூழ்கிச் செத்ததற்கு அவர்களின் முரட்டுத் தனம் மட்டுமே காரணம். காவல்துறையினர் பாவம். அப்பாவிகள்’ என்பதுதான்
அப்பொழுது விசாரணைக் கமிஷனின் ஒற்றை முடிவாக இருந்தது.
இப்பொழுது, தீவிரவாதிகள்
என்று குற்றம் சாட்டப்பட்ட இஸ்லாமிய இளைஞர்களை விடுவித்த உச்சநீதிமன்றமானது ‘முடிவைவிட அதனை அடைவதற்கான வழிமுறைகள்
பெரிதானவை’ என்ற காந்தியின்
கூற்றை மேற்கோள்
காட்டியுள்ளது.
“நமது அரசியலமைப்புச்சட்டம் சரியானது, வளைந்து கொடுக்கக்கூடியது, உறுதியானது, அமைதி காலத்திலும், போரின்போதும் நாட்டை ஒற்றுமையாக வைத்துக் கொள்ளக்கூடியது. நாடு தவறான திசையில் சென்றால், அதற்கு, நமது
அரசியலமைப்புச் சட்டம் மோசமானது என்று அர்த்தமல்ல, நாம் என்ன சொல்ல வேண்டுமென்றால், மனிதன் மிகக் கொடியவனாக இருந்தான்” இது அன்றே அரசியலைமைப்புச் சட்டத்தை தாக்கல் செய்துவிட்டு, அம்பேத்கார் கூறிய செய்தியாக இருந்தது.
நாட்டின் பலப்
பகுதிகளிலும் அமைதியின்மை,
போராட்டங்கள், மோசமான அரசியல்வாதிகளும் நாட்டைக் கொள்ளையடிப்பவர்களும்
இணைந்து செய்யும் கூட்டுச்சதிகள், மக்கள் நலன் என்று கூறியே அதிகாரத்தில் உள்ளவர்களின் துஷ்பிரயோகம், அங்கங்கு பாதிக்கப்படும் தனிமனித சுதந்திரம், தாமதப்பட்டுப்போகும் நீதி, கள்ளப் பணத்தின் அடிப்படையில் தேர்தல் விழாக்கள் என்று இந்திய ஜனநாயகம்
பலப்பிரச்சினைகளில் சிக்கியுள்ளது.
என்றைக்கும் விட, இன்றைக்குத்தான்
மகாத்மா காந்தியும், அண்ணல் அம்பேத்காரும் இந்தியாவிற்கு மீண்டும் அவசரமாகத் தேவைப்படுகிறார்கள்.
அன்புடன்,
அ.நாராயணன்
No comments:
Post a Comment