Sunday, February 12, 2012

DEC'11

                                      என்னதான் நடக்கிறது, தமிழகத்தில்?

அன்புத் தோழர்களே!
வணக்கம். என்னதான் நடக்கிறது, தமிழகத்தில்? அங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா?... இதுதான் உச்சநீதிமன்றம் சமீபத்தில் கேட்ட கேள்வி. ஒப்பந்த அடிப்படையில், கடந்த திமுக அரசு வேலைக்கு அமர்த்திய 12,000 மக்கள் நலப்பணியாளர்களை அதிரடியாக நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பிய வழக்கில் மேல் முறையீட்டின் போதுதான் உச்சநீதி மன்றம் இவ்வாறு கேட்டுள்ளது.

மக்களின் பேராதரவோடு ஆட்சியில் அமர்ந்த அடுத்த நொடியே, சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை ரத்து செய்து, பின்னர் உயர்நீதி மன்றத் திலும், உச்சநீதி மன்றத்திலும் குட்டுப்பட்டு, அறைகுறையாக நடைமுறைப்படுத்த முன் வந்தது அதிமுக அரசு. ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையில், சில விஷயங்களைத் தவிர்த்து, அதிமுகவின் ஆட்சியில் நிர்வாகம் போகும் போக்கு குழப்பமாகத்தான் இருக்கிறது.

பெரும்பாலான முடிவுகளில் தெளிவற்ற பார்வை, குழப்பமான, அதிரடியான செயல்பாடுகள், யாரிடமும் நம்பிக்கையின்மை, வெளிப்படைத் தன்மை யின்மை,  மக்களிடம் தொடர்பே இல்லாமை, ஜனநாயகம் அற்ற சூழல் ஆகியவை முதல்வரிடம் இருந்து வெளிப்படுவது போன்ற ஒரு தோற்றம்.
  
எந்த ஒரு அமைச்சரும் தன்னிச்சையாக தெளிவாகச் செயல்படுவதாகத் தெரிய வில்லை. இப்பொழுதெல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளின் கல்வித் தகுதி, சமூகப் பங்களிப்பு, நாட்டு மக்களின் உண்மையான தேவைகள் குறித்தப் புரிதல் ஆகிய எதுவுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. ஆதலால், பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்களாலும், அமைச்சர்களாலும் எந்த ஒரு பெரிய நன்மையும் விளையப் போவதில்லை என்பது மட்டும் திண்ணம்.
    
ஏன், முதல்வருக்கே கூட, அவரது அமைச்சரவை சகாக்கள் மீது நல்ல ஒரு அபிப்பிராயம் இருக்காது என்று ஊகிக்க முடிகிறது. ஜாடிக்கேத்த மூடி என்பது போல், அம்மாப்புகழ் பாடுவது மட்டுமே இன்றைய அமைச்சர்களின் முதல் வேலையாகவும், அம்மா காதுக்கு எட்டாமல், “ஏதாவது” செய்து கொள்ள முடியுமா என்பது அவர்களில் பெரும்பாலானவர்களின் இரண்டாவதும் கடைசியுமான வேலையாக இருக்கலாம். இதே நிலைதான் தேர்ந்தெடுக்கப் பட்ட பெரும்பாலான மேயர்களுக்கும் நகராட்சித் தலைவர்களுக்கும். சென்னை மாநகராட்சியின் புதிய மேயர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.

சமச்சீர் கல்வியில் அணுகுமுறை, அண்ணா நூலக மாற்றம் பற்றிய அறிவிப்பு, பரமகுடியில் மறியலில் ஈடுபட்ட தலித்துகள் மீதான துப்பாக்கிச்சூடு, அதன் பின் எடுத்த / எடுக்காத குறைந்த பட்ச நடவடிக்கைகள், வாச்சாத்தி வழக்கின் முதற்கட்ட தீர்ப்பு வந்த பின் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட தெரிவிக்காத மவுனம், தற்போது நான்கு இருளர் பெண்கள் மீது காவல்துறையினர் நடத்திய பாலியல் பயங்கரம் எல்லா வற்றிலும் ஒரு நஷ்டஈடு மட்டும் அறிவித்துவிட்டு அமைதியாவது, பட்ஜெட் அறிவிப்பில் ஆதிதிராவிட மக்கள் நலனுக்கான உட்கூறு பற்றி ஏதும் தெரிவிக் காதது, நலவாரியங்கள் உட்பட முந்தைய ஆட்சியின் பல திட்டங்கள் முடக்கப் படுதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டம் கொண்டுவருவது பற்றி அறிவித்து விட்டு இப்பொழுது மவுனம், சில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், பதிவாளர்கள், பல அரசுக் கல்லூரிகளின் முதல்வர்கள், விரிவுரையாளர்கள் போன்றோர் இன்னும் நியமிக்கப்படாத நிலை, எதிர்க் கட்சியினர் மீதான நில அபகரிப்பு வழக்குகள் தவிர, பொதுவாக ஊழலைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படாமை, முந்தைய அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம் ரத்து,  சொகுசு பார்கள் உட்பட அதிக எண்ணிக்கையில் சாராயக் கடைகள் திறப்பு, இப்படி  அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு குறைந்தபட்சமான எக்ஸ்ரே எடுப் பதற்குகூட திண்டாட்டமாகிவிட்டது என்றால் அவர்களுக்கான மருத்துவச் சிகிச்சை எப்படியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை.
    
பெரும்பாலான அமைச்சர்களின் முகங்கள் கூட யாருக்கும் பரிச்சயமாக வில்லை. அவர்கள் எத்தனை நாட்கள் பதவியில் இருப்பார்கள் என்பது கூட சந்தேகம். இதே நிலைதான், ஐ ஏ எஸ், ஐபிஎஸ் அலுவலர்களுக்கும். மாவட்ட ஆட்சியர்களாக இருக்கட்டும், துறைச் செயலர்களாக இருக்கட்டும், ஒரு நிச்சயமற்ற தன்மையே நிலவுகிறது.
                    
வேலை வாய்ப்புகளை உருவாக்க எந்த திட்டமும் தீட்டப்படுவதாகத் தெரிய வில்லை. பொருளாதார மந்த நிலையும் ஏற்பட்டுள்ளதால், இளைஞர்களி டையே வேலை இழப்பு ஏற்பட்டு, சமூக அமைதி குறையும் அபாயம் ஏற்பட்டுள் ளது.
                             
இரண்டாவது பசுமைப்புரட்சி பற்றிய தேர்தல் அறிவிப்பிற்குப் பின் அதன் தொடர்பாக எந்த நடவடிக்கைகளும் தெரியவில்லை. சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்தபாடில்லை. இப்பிரச்சினை குறித்து முந்தைய அரசும் சரி, இந்த அரசும் சரி எந்தவித நடவடிக்கையையும் எடுக்க முயலவில்லை. தமிழகம் முழுவதும் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ஒரு தோற்றம் நிலவுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி ஆகியவையே தினசரி செய்தி களாகி விட்டன.
                           
முந்தைய அரசின் மிகக்கேவலமான நிர்வாகத்தால், இன்றைக்கு தமிழகம் முழுவதும், சாலைகள், நடைபாதைகள், பேருந்து நிழற்குடைகள், பேருந்து நிலையங்கள் உட்பட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலை. இந் நிலையை மாற்றும் வகையில், புதிய அரசும், அதிகாரிகளும் எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. பல திட்டங்கள், அறிவிப்பு நிலையிலேயே உள்ளன. 

சமையல் எரிவாயு மட்டுமல்ல, ரேஷன் மூலம் மண்ணெண்ணை கிடைப்பதில் கூட சாதாரண மக்களுக்கு போராட்டமாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள் ளாட்சிப் பிரதிநிதிகள், அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் சும்மா இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தமிழகம் முழுவதும் குப்பைக் கூடங்களாகக் காட்சியளிக்கின்றன. சென்னையை, ஹெலிக் காப்டரில் முதல்வர் மேலிருந்து பார்த்ததோடு சரி, அதன் பின், நீடித்த பயன் தரும் விதத் திலான திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக எந்தவித அறிவிப்போ நடவடிக் கைகளோ இல்லை.

 இந்த ஆட்சியிலும் மணல் கொள்ளை என்பது தமிழகத்தில் எழுதாத சட்டமாகி விட்டது என்பதுதான் எல்லா மாவட்டங்களில் இருந்து கசிகின்ற விஷயம். தவறு செய்துள்ள முந்தைய ஆட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்து, விரைவாக விசாரணை நடைபெற்று தண்டனை பெற்றுத்தர வேண்டியது முக்கியம் தான். ஆனால், கைது நடவடிக்கை, திமுக ஆட்சியின் திட்டங்களை முடக்குதல் எனும் இரட்டை அம்ச நடவடிக்கை மட்டுமே இன்றைய ஆட்சியர்களுக்கு அழகல்ல.

அதிரடியாக பால்விலை, பேருந்து கட்டணம், மின் கட்டணம் ஆகியவற்றை ஒரேடியாக உயர்த்தி யுள்ள அரசைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. இலவசங்களுக்கெல்லாம் தலையாட்டும் மக்கள் இருக்கும் வரை, இலவசங் களுக்கு வேறு வகையில் கப்பம் கட்ட வேண்டியிருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இந்த விலையேற்றம் என்பது பல வருடங்களாக அடுத்தடுத்த அரசுகளின் நிர்வாகக் குளறுபடிகளின் ஒட்டுமொத்த விலை இப்பொழுது மக்கள் மீது இடியாக விழுந்துள்ளது.
                            
உலகில் இலவசங்கள் என்றும், மானியங்கள் என்றும் எதுவும் இல்லை என்பதைப் பற்றி மிகப் பெரிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் ஒழிய நிலைமை சீர்பட வாய்ப்பில்லை. வலது பாக்கெட்டில் இருந்து எடுத்து, இடது பாக்கெட்டில் போட்டுக்கொள்வது எப்படி இலவசமாக இருக்க முடியும்?
                 
இலவசம் என்பது எவ்வளவு பெரிய மோசடியோ, அந்த அளவு பொய், திமுக விற்கு மாற்று அதிமுக என்பதும். அது மட்டுமல்ல, இன்றைக்கு இருக்கும் மற்ற கட்சித்தலைமைகளும் மக்களை மேம்படுத்தப்போவதில்லை. ஏனென்றால், இன்றைக்குப் பொதுவாழ்வில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தலை வர்கள் அல்ல, தரகர்கள்!
                 
ஆக, மாற்றுச் சிந்தனையாளர்களை வரவேற்கவும், காதுகொடுத்துக் கேட்க வும், தங்களது மூன்றாவது தலைமுறையின் மீது அக்கறை கொள்ளவும் மக்கள் தயாராக வேண்டும். சமூகத்தின் மீது அக்கறை கொண்டோரும் மக்களை மாற்றத்திற்கு தயார் செய்ய வேண்டும். அதுவரை, தமிழகத்தில் என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்கு எதுவும் நடக்கும் என்பதுதான் பதிலாகும். 

மாற்றுச் சிந்தனைக்கான
நம்பிக்கையுடன்
                                                                                                                                     
                                                             

  
அ.நாராயணன்

                                                                           

2 comments:

  1. எதுவும் நடப்பதற்குள் நாம் விழித்தாக வேண்டும்.
    இல்லை நாளை நாம் வாழ நிலை இல்லை

    ReplyDelete