Thursday, May 9, 2013

மே 2013



ஜனநாயகத்தை சீர்படுத்துவது சாத்தியமா?

அன்புத் தோழர்களே!
அ.நாராயணன்
தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் கட்சிகள், அடுத்த ஆண்டு வர இருக்கிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்பொழுதே தயாராகி வருவதாகத் தெரிகிறது.

அவரவர் நிலைப்பாடுகள் இதனைத் தெளிவுபடுத்துகின்றன. மக்கள் வரிப்பணத்தில் கோடி கோடியாய் விழுங்கும் இதே நாடாளுமன்றம், மக்கள் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு பதில் அந்தந்த கட்சிகளின் தேர்தல் வியூகங்களுக்காக மட்டுமே பலி கொடுக்கப்படுகிறது.

ஏற்கனவே, நாடாளுமன்றத்திற்கு, வியாபார முதலாளிகள் மட்டுமல்லாது, கிரிமினல் பின்னணி உள்ளவர்கள், பெண்களின் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள், கொலை முயற்சி வழக்கு உள்ளவர்கள், இப்படிப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுக் கப்பட்டு சென்றுள்ளார்கள் எனும் அவப்பெயர் உள்ளது.

அதுமட்டுமல்லாது, விவாதங்களுக்கு வாய்ப்பில்லாது, கூச்சல் குழப்பம் மிகுந்த சந்தைக்கடையாக மட்டுமே நாடாளுமன்றம் படிப்படியாக மாறி வருவதை ஆண்டுக்காண்டு கண்டு வருகிறோம். எந்த ஒரு மசோதாவும் திருப்தி அளிக்கும் வகையில் விவாதிக்கப்பட்டு சட்டமாவதில்லை.

ஏற்கனவே, ஜனநாயகத்தின் பல்வேறு தூண்கள் ஆட்டம் கண்டு வரும் நிலையில், பாராளுமன்ற ஜனநாயகம், மக்கள் கண்முன்னே ஒரு மோசமான நாடகமாக மாறி வருவது, படித்தவர்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித கசப்புணர்வையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி வருவதை உணர முடிகிறது.

ஆட்சி அதிகாரத்தை வைத்திருப்பர்களும், அந்த அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கும் எதிர்கட்சித் தலைவர்களும் இணைந்து, “கொண்டு வந்தானொரு தோண்டி, அதைக் கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தாண்டிஎனும் கதையாக, மக்கள் அரங்கத்தை அழித்துக் கொண்டு வருகிறார்கள்.

இன்றைக்கு, புதிய புதிய ஊழல் புகார்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை. பாலியல் வன்முறைகள், கொலைகள், விபத்துக்கள் எவையும் மக்களை உலுக்குவதில்லை. இவற்றையே தினமும் ஊடகங்களில் படித்துப், பார்த்து மரத்துப் போய் கிடக்கிறது சமூகம். மாறாக, ஒரு வித விரக்தியை, தன்னை மட்டும் தற்காத்துக் கொள்ளும் சுயநல போக்கை மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனவோ என்றுகூட தோன்றுகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் நாடு முழுவதும் வறட்சி நிலவுகிறது. அதிக வேலையிழப்பு, பொருளாதார மந்த நிலை, சுற்றுச் சூழல் சீர்கேடு, பணவீக்கம் எல்லாமும் சேர்ந்து நடுத்தர வர்க்கத்திடம் கூட ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அரசியல் கட்சிகளின் முதன்மைத் தலைவர்கள் கூட இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு செயல்படும் எண்ணம் அறவே இல்லாதவர்களாக உள்ளனர்.

மகாராஷ்டிராவில் வரலாறு காணாத வறட்சி, விவசாயிகள் தற்கொலை, தீராத தண்ணீர் பஞ்சம் என்ற அவலச் சூழலுக்கு சற்றும் பொருந்தாத வண்ணம், அம்மாநில அமைச்சர் ஒருவர், மிக மிக ஆடம்பரமாக தனது குடும்பத் திருமணத்தை நடத்தி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார். ஆனால், இப்படிப்பட்ட நிகழ்வை எந்த மாநிலத்திற்கும் பொருத்திப் பார்க்க இயலும். 

நமது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் அப்படிப்பட்டவை. அடுத்த ஆண்டு நடத்தப்படும் தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தொங்கு நாடாளுமன்றம் ஏற்படும் வாய்ப்புகள்தான் அதிகம் என்பதால் குதிரை பேர எம்.பிக்களின் சராசரி சந்தை மதிப்பு அதிகரிக்கிறது. அதனால், ஒவ்வொரு கட்சிகளிலும் எம்.பி பதவிக்குப் போட்டியிட ஆசைப்படும் பெரும் பணக்காரர்கள், சாராயக்கடை ஏலம் எடுத்தவர்கள், கூலிப்படைத்தலைவர்கள் போன்றோரின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும். 

அரசியல் புரோக்கர்கள், இடைத்தரகர்களின் மதிப்பும் அதிகரிக்கக்கூடும். இந்த அரசியல் வியாபாரச் சந்தையில், மாநிலக் கட்சிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், அவை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, “நாற்பதும் நமதேஎன்ற கோஷத்துடன் அதிமுக தயாராகி வருவதுஅதன் எல்லாச் செயல்பாடுகளிலும் தெரிகிறது.

இக்கட்சி நாற்பது தொகுதிகளையும் கைப்பற்ற இருதடைகள் மட்டுமே உள்ளன. ஒன்று மின்சாரம், இரண்டாவது டாஸ்மாக் சாராயம், இந்த இரண்டும், பொது மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கிவிட்டது. பெரும் வறட்சியும், வேலைவாய்ப்பு இன்மையும் இணைந்து, தமிழகத்தில் பொது அமைதி கெட்டு வருகிறது. மாநிலத்தில், அதிக வன்முறையும் அதிக குற்றங்களும் நடப்பதாகத் தோன்றுகிறது.

தேர்தலுக்கு முன்பு, நல்ல மழை பெய்து, மின்சார உற்பத்தியும் அதிகரித்து, அதிருப்தியை சரிகட்டிவிடலாம் எனும் நம்பிக்கையில் இருக்கிறது ஆளும் கட்சி. தொடர்ந்து முழுப்பக்க அரசு விளம்பரங்கள் மூலமும் மற்ற மறைமுக செயல்பாடுகள் மூலமும் தங்களைப் பற்றி நல்ல விதமான செய்திகளை மட்டுமே தமிழக ஊடகங்களை போட வைக்கும் விதமாக ஆட்சியில் இருப்பவர்கள் சமாளித்து வருவதாகத் தோன்றுகிறது.

அதுமட்டுமல்லாது, இலங்கைப் பிரச்சனை உட்பட பல விஷயங்களில் தங்களின் கடந்த கால நிலையை, நாடாளுமன்றத் தேர்தலை மனத்தில் கொண்டு, தற்காலிகமாக மாற்றிக் கொண்டுள்ளனர். இவற்றை எல்லாம் வைத்து தேர்தல் பந்தயத்தில் முந்திவிடலாம் என்பது ஆளுங்கட்சியின் கணிப்பு என்று தோன்றுகிறது.

ஜெயிக்கும் குதிரைமீது ஏறி சவாரி செய்யும் எண்ணம் மட்டுமே கொண்டுள்ள தமிழகத்தின் உதிரிக்கட்சிகள், ஆளும் கட்சித்தலைமைக்கு சிறிதும் மனக்கசப்பு வந்துவிடாத வண்ணம், ஆட்சியாளர்களை மறந்தும் விமர்சிப்பதை தவிர்த்து வருகின்றனர். 

ஊடகங்களும் தமிழக அரக்கு எப்பாட்டு பாடி வருகின்றன. தட்டிக் கேட்க யாரும் இல்லாத நிலையில், தமிழக அரசின் நிர்வாகக் குளறுபடிகளும், ஊழல்களும் மக்கள் களத்தில் விவாதிக்கப்படாமலே மறைக்கப்படுகின்றன. இவையெல்லாம், கூடிய விரைவில், தமிழக மக்களின் மீதுதான் விடியப்போகின்றன.

வரும் நாடாளுமன்றத் தேர்தல், கடந்த காலங்களைவிட மிகவும் காஸ்ட்லியானதேர்தலாக இருக்கும் என்று கருதப்படுவதால், அரசியல் கட்சிகளின், அதன் வேட்பாளர்களின் முதலீடுகளும், செலவுகளும் மிக அதிகமாக இருக்கும் எனும் கருத்து நிலவுகிறது. அதனை எப்பாடுபட்டாவது ஈடுகட்டும் விதமாக, எல்லா கட்சிகளும், நிதி ஆதாரங்களைத் திரட்டுவதிலும், தொகுதி வாரியாக அதற்கான இலக்கு நிர்ணயிப்பதிலுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் என்று செய்தி வருகிறது. 

இது ஒருபுறமிருக்க, அடுத்த தேர்தலுக்குள் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்க, மீண்டும் வன்னியர் சங்கமாகவிஸ்வரூபம் எடுத்து வன்முறை அரசியல் செய்து வருகிறது. பா.ம.க. மற்ற சாதிக்கட்சிகளும் தங்கள் தொடைகளைத் தட்டி, ஓசையெழுப்பி பலத்தை நிரூபிக்க முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வரலாறு காணாத பண பலம், சாதிய உணர்வு ஆகியவைதான் பெருமளவில் விதைக்கப்பட்டு, வெற்றியை அறுவடை செய்ய முற்படுவார்கள். அரசியல் தரகர்கள் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க, தமிழகம் உட்பட அந்தந்த மாநிலங்களில், அரசியல் வன்முறை, அரசியல் கொலைகள், சாதிய மோதல்கள், போராட்டங்கள் போன்றவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

சமீபத்திய காலங்களைப் போன்று, அல்லது அதைவிட உறுதியாக, தேர்தல் ஆணையம் செயல்படுமா என்பது தெரியவில்லை. இந்த நிலையில், சிவில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

தேர்தல் கண்ணியமாக நடைபெறுவதையும் தேர்தல் ஜனநாயகத்தில் அதிகமாக இளைஞர்கள் ஈடுபடுவதையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

2011ம் ஆண்டு, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு பல மாதங்கள் முன்பே, கண்ணியமான தேர்தலுக்கு களப்பணியாற்றுவோம்என்று கூறியபடி பல்வேறு சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் இணைந்து தேர்தல் ஊழலுக்கு எதிராகவும், பணபலம், ஆட்பலம் ஆகியவற்றை எதிர்த்தும் குரல் கொடுத்தனர். 

சில பல கல்லூரிகளுக்கு சென்று இளைஞர்களிடம் பரப்புரை செய்தனர். அந்த தேர்தலில் பண பலத்தை எதிர்க்கும் சக்திகளுக்கு ஒரு சிறிய தூண்டுதலாக அச்செயல்பாடுகள் அமைந்தன.

இம்முறையும், அடுத்த ஆண்டு தேர்தலில், பண பலம், சாதி பலம் போன்றவற்றின் ஆதிக்கத்தைக் குறைக்கும் விதமாக, சமூக அக்கறையும், அரசியல் புரிதலும் கொண்டவர்கள் இணைந்து செயலாற்ற வேண்டிய கடமை உள்ளது. ஆட்சியாளர்களை விருப்பு வெறுப்பின்றிவிமர்சிக்கவும், தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராகவும், துணிந்து செயல்பட வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், இரு கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஜனநாயகத்தை சீர்படுத்தும் ஆர்வமும், அரசியல் ஆர்வமும் சமூக அக்கறையும் கொண்டவர்கள் மக்கள் மத்தியில் கணிசமாக உள்ளனரா?

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டவர்கள் போதிய எண்ணிக் கையில் உள்ளனரா? அப்படியென்றால், ஒரு குழுவாக இணைந்து, அர்ப்பணிப்புடன் தங்களது நேரத்தையும், பொருளாதாரத்தையும் கொடுத்து களப்பணியாற்ற தயாராக இருப்பார்களா?

வாசகர்களுக்கு இதெல்லாம் ஏதாவது பேராசையுடன் கூடிய உளறலாகத் தோன்றுகின்றனவா?

நட்புடன்


No comments:

Post a Comment