Friday, April 6, 2012

APRIL'12


மரண தண்டனையை நிரந்தரமாகத் தூக்கிலிடுவோம்!

மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் மீண்டும் உலகம் முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளன. சில மாதங்களுக்கு முன், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனும் போராட்டங்கள் தமிழகத்தில் நடந்தன. அவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரும் வழக்கு ஒன்று, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 
முன்னாள் பஞ்சாப் முதல்வரின் கொலைக் குற்றத்தில் கைது செய்யப்பட்டு 17 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தீவிரவாதி  பல்வந்த் சிங் ராஜோனாவிற்கு இப்பொழுது சண்டிகர் நீதி மன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. பல்வந்த் சிங் தனது குற்றத்தை ஒத்துக் கொண்டு தனது மரண தண்டனையை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று இசைவு தெரிவித்துள்ளார். எனக்கு சரி என்று பட்டதைத்தான் நான் செய்தேன், எனக்காக யாரும் கருணை மனு கொடுப்பதை நான் வெறுக்கிறேன் என்று கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இவரது துக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி எல்லா அரசியல் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. வெளிநாடுகளில் வாழும் சீக்கியர்களும்அவர்கள் குடியிருக்கும் நாடுகளில் போராடி வருகிறார்கள். எல்லா ஊடகங்களிலும் இது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

மரண தண்டனை என்பது சட்டத்தால் அனு மதிக்கப்பட்டுள்ள வரை, அதனைப் பயன்படுத்து வதில் தவறில்லை என்கிறது உச்சநீதி மன்றம். அரசியல் கட்சிகள்இதனை அரசியல் காரணங்களுக்காக இவ்வாறு எதிர்த்து போராட்டத்தைத்  தூண்டுவது ஒரு நாடகம் என்றும், தவறான செயல் என்றும், உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இதே மார்ச் மாதம் 13ம் தேதி, ஹரியானாவில் உள்ள நீதிமன்றம் 22 வயது நிக்கா சிங் என்பவருக்கு மரண தண்டனை அளித்துள்ளது. இவர், 75 வயது மூதாட்டியை பாலியல் வன்முறை செய்து, பின்னர் கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்தவர். இவர் ஒரு இரக்கமற்ற காட்டுமிராண்டி, இவர் உயிருடன் இருப்பது சமூகத்திற்கு ஆபத்தானதுஎன்று கூறியிருக்கிறது ஹரியானா நீதிமன்றம். கடந்த ஆண்டு நவம்பரில், இதே போன்றதொரு வழக்கில் மரணதண்டனை வழங்கப்பட்டது. 22 வயது கேரள இளம் பெண்ணை, பாலக்காடு அருகில் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு, தானும் குதித்து, படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அப்பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்த 30 வயது தமிழன் கோவிந்தசாமிக்கும் இதே காரணங்களைக் கூறித்தான் கேரள விரைவு நீதிமன்றம் மரண தண்டனை அளித்தது. இதை எதிர்த்து தமிழகத்தில் யாரும் போராட்டம் செய்யவில்லை.

மரண தண்டனையை ஆதரிப்பவர்கள், ‘மற்ற நாடுகளைப் போலில்லாமல், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே, இந்திய நீதிமன்றங்கள் மரண தண்டனை அளிக்கின்றன, மக்கள் தொகையும், குற்றச்செயல்களும் மிக அதிகம் உள்ள நம் நாட்டில், மரண தண்டனையை முற்றிலும் தவிர்த்து விட்டால், மிக பயங்கரமான குற்றவாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும், மக்கள் வரிப்பணத்தில் பாதுகாப்பு அளிக்க வேண்டும், சில பல ஆண்டுகளுக்குப் பின்னும் அவர்களை விடுவிப்பது மிக ஆபத்தானது, அதனால், இன்னும் அதிகமாக  சிறைச் சாலைகள் கட்ட வேண்டும், இது முற்றிலும் தேவையற்றது, அரசியல் காரணங்களுக்காக ஒரு சில மரண தண்டனைகளை எதிர்ப்பதும், மற்ற சமயங்களில் மௌனமாகி விடுவதும் சந்தர்ப்பவாதம்தான்என்கிறார்கள். இவர்களின் வாதங்களில் ஓரளவு உண்மை இருப்பதாகப்படலாம்.

ஆனால், கடந்த ஆண்டு மட்டுமே, இந்திய குற்றவியல் நீதிமன்றங்கள், 105 வழக்குகளில் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளன, இது எப்படி அரிதிலும் அரிதான அணுகுமுறையாக இருக்க முடியும்?, மேலும் அரிதிலும் அரிதானஎன்பதனை எப்படி முடிவெடுக்க முடியும்?, அதற்கான எல்லைகள், வரைமுறைகள் என்ன? - இவை தான் மனித உரிமைப் போராளிகள் எழுப்பும் நியாயமான கேள்விகள்.

எல்லா மரணதண்டனைகளையும் பொத்தாம் பொதுவாக எதிர்ப்பது முட்டாள் தனம்நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த உதவியதாகக்  குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள அப்சல் குரு, மும்பை தீவிரவாதத் தாக்குதல்களின் போது பிடிபட்ட கேசாப் ஆகியோரின் தண்டனையைக் கூட எதிர்ப்பது தேச துரோகம். இவர்களது மரண தண்டனையை நாம் நிறைவேற்றாவிட்டால், இந்தியா பயங்கரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத்  திராணியற்ற ஒரு மென்மையான நாடு என்று மற்ற நாடுகள் நினைக்கும், பயங்கரவாதிகளுக்கு இது உற்சாகம் அளிக்கும் கொள்கையே தவிர வேறொன்றும் இல்லை’ - இது மற்ற தரப்பினரின் எதிர்வாதம்.

இதை மறுத்து வாதிடும் மனித உரிமை ஆர்வலர்களோ, ‘மரண தண்டனையை முற்றிலு மாக சட்டத்திலிருந்து எடுத்துவிட்டோம் என்றால், அது உலக அரங்கில் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு அங்கீகாரமும், அதிக மதிப்பும் ஏற்படுத்தும் கொள்கையாக இருக்கும், மற்ற நாடுகளுக்கு நாம் ஒரு வழிகாட்டியாக இருக்கலாம், தனிமனிதர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு கொலைகள் செய்கிறார்கள் என்பதற்காகஜனநாயகத்திலும் மனிதாபிமானத்திலும் நம்பிக்கை உள்ள ஒரு முதிர்ச்சியடைந்த நாட்டின் அரசு, தனி மனிதர்களின் உயிரைப் பறிப்பது நாகரீகமான பண்பாக இருக்காது, மேலும் மரண தண்டனை என்பது, ஆங்கிலேயர் காலத்திலும் மன்னராட்சி காலத்திலும் இருந்த நடைமுறை, அதனை, மாற்றமில்லாமல் அப்படியே நமது அரசியல் அமைப்பில் உள்வாங்கிக் கொண்டது நமது அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் தவறு, இது ஒரு குறைபாடு, அதனை நாடாளுமன்றம் மூலமாக திருத்திக் கொள்ள வேண்டும்என்கிறார்கள்.

நீதிமன்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் மரண தண்டனை தீர்ப்புகள் வழங்கி, ஏகப்பட்ட தண்டனைகள் நிலுவையில் இருக்கின்றன. மரண தண்டனை அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குற்றவாளிகள் சிறைச்சாலைகளில் உள்ள தனி அறைகளில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் பற்றிய முழுமையான புள்ளிவிவரங்கள் உறுதியாக யாருக்கும் தெரியவில்லை. ஆயினும், கடந்த 17 ஆண்டுகளில் ஒரே ஒரு தூக்கு தண்டனை மட்டுமே நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு ஆறுதல்.  ஏப்ரல் 1995 ம் ஆண்டு, ஆட்டோ சங்கர் எனும் ஒரு பயங்கரமான குற்றவாளி தூக்கில் இடப்பட்டார். பின்னர், 2004ம் ஆண்டு, மேற்கு வங்கத்தில் மற்றொரு குற்றவாளியின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில்அவர் தூக்கிலிடப்பட்டார்.
 
பின்னர் இதுவரை எந்த ஒரு குற்றவாளியும் தூக்கிலிடப்படவில்லை. சமீப காலங்களில் அரசியல் காரணங்களுக்காக சில தூக்கு தண்டனைகளில் அரசு முடிவெடுக்க முடியாத நிலை இருப்பதால், மரண தண்டனை வழங்கப்பட்ட மற்ற குற்றவாளிகளும் துக்குக் கயிற்றில் இருந்து தப்பித்து விட்டனர் என்பதுதான் உண்மை நிலை.

உலகின் 96 நாடுகள் மரண தண்டனையை முற்றிலுமாக தங்கள் நாட்டுச் சட்டங்களில் இருந்து ஒழித்துவிட்டன. ஐக்கிய நாடுகள் சபையில்மரண தண்டனைக்கு ஆதரவான நிலைப் பாட்டையேஇந்தியா எப்பொழுதும்  எடுத்து வருகிறது. மரண தண்டனையை சட்டத்தில் இருந்து எடுப்பது தொடர்பாககட்சிகளிடையே நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து வருவது கடினம் என்றே தோன்றுகிறது.

உலக அரங்கில், சீனாதான், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரண தண்டனைகளை கடந்த ஆண்டு கூட நிறைவேற்றியிருக்கும் என்று அம்நெஸ்ட்டி இன்டர்நேஷனல் எனும் மனித உரிமைக்காக வாதாடும் அமைப்பு  கூறுகிறது, ஆயினும் முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை. இரான், சவூதி அரேபியா, வடகொரியா, யெமென் உட்பட 20 நாடுகள், கடந்த ஆண்டு  மட்டும், கிட்டத்தட்ட 676 மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கின்றன. மிக மோசமான கொடுங்கோல் நாடுகளுக்கு இடையில், இந்தியாவிற்கு அடுத்த பெரிய ஜனநாயக நாடான அமெரிக்கா, 41 மரண தண்டனைகளை நிறைவேற்றியிருக்கிறது என்பது மிக உறுத்தலான செய்தி.

இந்தியாவில் மரண தண்டனைகள் கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், கடந்த இதழ் வரவேற்பறையில் குறிப்பிட்டது போல, என்கவுண்டர்கள் மூலம் காவல்துறையே சட்டவிரோதமாக மரண தண்டனை அளிப்பதும், அதற்கு பொதுமக்களின் அங்கீகாரம் இருப்பதும் கவலையளிக்கும் விஷயம். எது எப்படியிருந்தாலும், மரண தண்டனை வழங்கப்பட்ட எந்த நாடுகளிலும், கொடூரமான குற்றங்கள் குறைந்ததற்கான சான்றுகள் எதுவும் இல்லை. மரண தண்டனையைத் தவிர்த்து, ஆனால் விரைவாக வழக்குகளை நடத்தி முடித்து தண்டனைகள் வழங்கப்பட்டால் குற்றங்கள் குறைய வாய்ப்புண்டு. விரைவாக வழங்கப்படும் தண்டனைகளே, குற்றம் செய்ய நினைப்போருக்கு பயத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற உண்மைக்கு இணங்க, 19 ம் நூற்றாண்டில் ஜனநாயகம் இல்லாத நாட்டில் கடைப்பிடிக்கப்பட்ட மரண தண்டனை எனும் முறைமையை, 21ம் நூற்றாண்டில், இன்றைய நாகரிகச்  சூழலுக்கு சற்றும் பொருந்தாத வகையில் சட்டத்தில் வைத்திருப்பது தேவையற்றது. நேர்மையான விரைவான நீதி விசாரணை, தாமதமில்லாமல் தவறுக்கு ஏற்ற தண்டனை, மரண தண்டனை முற்றிலும் ஒழிப்புஎன்பதுதான் நமது இன்றைய நிலைப்பாடாக இருக்கவேண்டும். மிகக் கொடும் குற்றவாளிகளுக்கு மக்கள் வரிப்பணத்தில், வாழ்நாள் முழுவதும் சிறைச் சாலைகளில் அமர்த்தி பாதுகாப்புக் கொடுக்க வேண்டுமா என்றால், இது ஜனநாயகத்தை, நாகரிகத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் கொடுக்கும் விலை என்பதுதான் பதிலாக இருக்க முடியும்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, அல்லதுபல அர்த்தமற்ற இடைத் தேர்தல்களுக்கோ, நாம் மிகுந்த நிதியையும், மனிதவளத்தையும், நேரத்தையும் செலவிடுவதில்லையா? இவையெல்லாம் செலவல்ல, ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான முதலீடுகள். எத்தனையோ பெருங்குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து நழுவி, பொதுச்சமூகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்,  20 ஆண்டுகள் வரை தண்டனை பெறும் எந்த ஒரு குற்றவாளியும், விடுதலை ஆன பின்னர், மீண்டும் குற்றம் செய்வார் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை.

எந்த ஒரு குற்றவாளிக்கும் 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக் கூடாது, தண்டனை காலத்தின் போதே, முறையான பயிற்சிகள் அளித்து, அவர்கள் மீண்டும் சமுதாயத்திற்கு பிராயச்சித்தம் அளித்து, நன்றியுடனும், கவுரவத்துடனும், பயனுடனும் வாழ வழிவகை செய்தல் வேண்டும் என்பதுதான் எனது கனவு. இந்தக் கனவு நிறைவேறும் நாள் எந்நாளோ?
ஏப்ரல் நட்புடன் 



  

அ.நாராயணன்.
  
            



      
      ************************************************************
      ************************************************************

 

எளிமை, இனிமை, நன்மை - புத்துணர்ச்சி தொடர்- 1.  

இம்மாத யோசனை: 
வைட்டமின்-டி உண்ணுங்கள் , ஆரோக்கியத்தை மீட்டெடுங்கள்

 இன்றைய காலகட்டத்தில், முறையாக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில்  ஈடுபடுவதற்கு  கூட நேரம் ஒதுக்க  முடியாமல்  பெரும்பாலானவர்கள் தவிக்கிறார்கள். இட நெருக்கடிநடைப்பயிற்சிக்கு ஏதுவான சாலைகள் அல்லது பூங்காக்கள் போன்றவை இல்லாத சுழல். இவைதான் நம் நகரங்களில் நடைமுறை உண்மை. இப்படிப்பட்ட நிலையில், நம் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும், பேணிக்காக்கும் செலவில்லாத எளிய முறை ஒன்று உண்டென்றால் அது சூரிய நமஸ்காரம் அல்லது சூரிய ஒளியில் தேகப்பயிற்சி மட்டுமே என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். சூரிய நமஸ்காரம் எனும் நமது பாரம்பரிய, எளிய முறையினால் நாங்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருக்கிறோம் என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள், இந்தப் பயிற்சியில் வெகுநாட்களாக ஈடுபட்டு வருபவர்கள்.

'சூரிய நமஸ்காரம் என்பது மிக எளியது, செலவில்லாதது, இந்த  தேகப்பயிர்ச்சியை மதவழிபாடாகக் கருத வேண்டியது இல்லை, காலை வேளைகளில், மொட்டை மாடிக்குச் சென்று, கிழக்கு திசை நோக்கி நின்று கொள்ளவும்கீழே கொடுக்கப்பட்டுள்ள 12 எளிமையான முறைகளை மட்டும்,  15 முதல் 30 நிமிடங்களுக்கு வாரம் 5 நாட்களாவது  செய்து  வந்தால் போதும், கை  மேல்  பலன் கிட்டும், நிமிர்ந்த  நடையும்  நேர்கொண்ட பார்வையும்  நமதாகி விடும்'  என்கிறார்கள் நிபுணர்கள். டாக்டரைப் பார்க்க, க்ளினிக்குகள் முன் டோக்கன் வாங்கிவிட்டு கால்கடுக்க தவம் கிடக்கிறோம் நம்மில் பலர். நமது ஆரோக்கியத்திற்காக நாம் தினமும் காலை வேளைகளில் பகலவன் கொடையாகக் கொடுக்கும் 'வைட்டமின்-டி'யை வாங்கி உண்ண மறுப்பதேன்?
 

 

MARCH'12


உண்மையான நாகரீகத்தை சமூகத்தில் வளர்ப்போம்!

தோழர்களே,

வணக்கம். நம் ஒவ்வொருவருக்குமே, நம் உயிர் என்பது மிகப்புனிதமானது. தெரிந்தே, அதனை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம். இந்நிலைப்பாட்டின் அங்கீகாரமாகவே, நமது ஜனநாயக அரசியலமைப்புச்சட்டம், உயிர் பாதுகாப்பு உரிமையை, நம் ஒவ்வொருக்கும்,
சரத்து 21 மூலம் உறுதியளிக்கிறது. மக்கள் வரிப்பணத்தை கோடிகோடியாக கொள்ளையடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, நீதிமன்றக் குற்றவாளிக் கூண்டில் நிற்க வைக்கப்படுகிறார் ஒரு பெரிய அரசியல் தலைவர் அல்லது அமைச்சர். ஆயினும், கருப்புப்பூனைப் படை, நாய்ப்படை, குண்டு துளைக்காத வாகனம் என்று மிகுந்த பொருட் செலவானாலும், பல அடுக்குப் பாதுகாப்பு, அதே மக்கள் வரிப்பணத்தில்தான் அவருக்கு வழங்கப்படுகிறது. இதனை எல்லோரும் சிறிதும் குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்கிறோம்.

சட்டப்பாதுகாப்பும், ஜனநாயக நடைமுறையும் இப்படியிருக்க, சமீபத்தில் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி, தமிழகக் காவல் துறையினர், 5 நபர்களை, சென்னையில் அவர்கள் தங்கியிருந்த அறையில் வைத்து, நள்ளிரவில், ‘என்கவுன்டர்என்ற பெயரில் சுட்டுக்கொன்று விட்டனர். இந்த நிகழ்வு, மிகுந்த மன அழுத்தத்தை அளித்ததோடு, நமது ஜனநாயகத்தின் எதிர்காலம் மீது அச்சம் எழுவதற்கு மற்றொரு காரணமாகி விட்டது.

இந்த 5 வட நாட்டு நபர்களைச் சுட்டுக் கொல்லாமல், நன்கு திட்டமிட்டு உயிருடன் பிடித்து உண்மையை நீதிமன்றத்தில் விளக்கி, தண்டனை வாங்கித்தருவது நமது காவல்துறைக்கு கடினமான தல்ல. ஆயினும், இப்படி சுட்டுக்கொன்று, ‘வெற்றியைபொதுமக்களுக்குக் காணிக்கையாக்குவதோடு, கொள்ளையில் ஈடுபட நினைக்கும் மற்றவர்களுக்கும் ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரிகளும், இதற்கு பச்சைக்கொடி காட்டிய ஆட்சியாளர்களும் யோசித் திருப்பார்களோ? இப்படி நினைப்பதே, முதுகுத் தண்டைச் சில்லிடச்செய்கிறது.

அதைவிட, இந்த என்கவுன்டரை ஆதரித்து பொதுமக்கள் பலர் பேசியுள்ளனர். காவல்துறையின் கறார் நடவடிக்கையைப் பாராட்டி கையெழுத்து இயக்கம் கூட நடத்தப்பட்டது. இதைப் பார்க்கும் போது, நம் சமூகம் எதை நோக்கிப் போகின்றது எனும் கேள்வி எழுகிறது.

அது மட்டுமல்ல, பஞ்சம் பிழைக்க வடமாநிலங்களில் இருந்து வந்துள்ளவர்கள் எல்லோரையும் சமூகவிரோதிகளாகச் சித்தரிக்கும் மனநிலையும் எழுந்துள்ளது. வட நாட்டுக் கொள்ளையன் என்று தவறாகக் கருதி, ஆந்திராவில் இருந்து வந்த கூலித் தொழிலாளி ஒருவர் மீது, பொதுமக்கள் கூட்டம் ஒன்று மரணத்தாக்குதல் நடத்தியுள்ளது. எங்கு தீவிர வாதச் செயல்கள் நடந்தாலும், இஸ்லாமிய இளை ஞர்கள் சிலரைக் கைது செய்து, ‘துப்புத் துலக்குவதுபோன்று, இனி தமிழகத்தில் குற்றங்கள் நடந்தால், சில வடமாநில நபர்களைக் கைது செய்து கணக்குக் காட்டும் படலம் நடக்கும் ஆபத்து உள்ளது. இது மட்டுமல்லாது, “வடநாட்டு கும்பல்கள் அட்டூழியம்’’ என்று சில பத்திரிகைகள் எழுதி, எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்க்கின்றன.

இவ்வகை என்கவுன்டர்களை, கொள்ளையர்கள் மீதான உறுதியான நடவடிக்கை என்ற கோணத்தில் பார்ப்பது மிகமிகப் பிழையானது. இது அரசியல் அமைப்புச் சட்டத்தைப் புறம் தள்ளி, தனிமனிதர் களின் உயிரைப் பறிக்கும், முற்றிலும் கண்டனத்துக்கு உரிய செயல்.

சமீபத்தில்தான், உச்ச நீதிமன்றம், போலி என்கவுன்டர் கொலைகளுக்காகவும், அவற்றின் விசாரணையில் முட்டுக்கட்டை போட்டதற்காகவும், குஜராத் அரசு மீது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட என்கவுன்டர்கள், எல்லா மாநில அரசுகளாலும், மத்திய அரசாலும் கூட, அவ்வப் போது, காவல்துறை மூலமும், இராணுவத்தினர் மூலமும் அரங்கேற்றப்படுகிறது. என்கவுன்டர்கள் மட்டுமில்லாமல், லாக் அப் (தற்)கொலைகளும் அவ்வப்போது நடப்பது வாடிக்கையாகிவிட்டது.

அதே வேளையில், போலீஸ் என்கவுன்டர் கொலைகளுக்கு மக்கள் ஆதரவும், அங்கீகாரமும் அளிப்பதாகக் கூடத் தோன்றுகிறது. இப்படித் தொடங்கும் நியாயப்படுத்தல்கள்தான், பின்னர் ஹிட்லர் போன்ற ஜனநாயக அரக்கர்கள் உயிர்த்தெழ வழிவகுக்கும்.

காவல்துறையும், அரசும், தங்கள் அதிகாரத்தை, தனி மனிதர்களின் உயிரைப்பறிக்கப் பயன்படுத்தும் போது ஆதரவு அளிக்கும் சமூகம், நாளை தங்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் நடக்கும் போது, அதை எதிர்க்கும் தார்மீகத்தை இழந்துவிடுகிறது.  

அறிவியலும், தொழில் நுட்பமும், கல்வியும் வளரும் வேகத்தில், ஜனநாயக நாட்டில் வாழும் மக்களிடையே, சகிப்புத்தன்மையும், மனித நேயமும் காணாமல் போய்விடுகிறதா? திரைப்படங்களில், கதாநாயகர்கள், வில்லன்களை உடனடித் தீர்ப்பாகப் போட்டுத்தள்ளும் போது, அரங்கில் ரசிகர்கள் விசிலடித்துக் கைத் தட்டுகிறார்கள். தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, குழந்தைகள் என்று மூன்று தலைமுறைகளும்  தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து, கொலவெறியை ரசிக்கிறார்கள். சாதாரண சராசரி மக்களாகிய நாம், அகிம்சா வாதிகளோ, வன்முறையாளர்களோ, வன்முறை ஆதரவாளர்களோ அல்ல என்று எண்ணமிருந்தால், அத்தக் கருத்தை மாற்றிக் கொள்ளும் நிலை வந்து விட்டதோ என்று கூடத் தோன்றுகிறது.
சாலைகளில் இறங்கினாலே, நம் சமூகத்தின் கோர முகம் அம்பலப்படுகின்றது.

கத்தியும், துப்பாக்கியும்தான் வன்முறை ஆயுதம் என்றில்லை. வாகனங்களில் செல்லும் போது, சாலைகளில் அவசியமில்லாமல் விடாது ஹாரன் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் கூட வன்முறை யாளர்தான். தன்னையொற்றிய சக மனிதர்களுக்கு எவ்விதமான மன அழுத்தமும், நலக்குறைவும் ஏற்படுகிறது எனும் குறைந்தபட்ச சிந்தனை சிறிதும் இல்லை.

ஹாரன் ஒலியை விடாது எழுப்பி, ஒலிமாசு எற்படுத்துவது ஏதோ அடிப்படை உரிமை என்பது போல, ஒரு ஆதிக்க மனப்பான்மையுடன் பலரும் நடந்து கொள்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர், இவ்வாறு, சாலைகளில் ஒலி வன்முறையை சர்வ சாதாரணமாக ஏவி விடுகிறோம்.

அமைதியை விரும்பும் எந்த ஒரு அறிவார்ந்த சமூகத்திலும் நடவாத ஒன்று, நம் தெருக்களில் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குப்பையை சாலைகளில் விட்டெறிவதானாலும், பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதானாலும், விடாது ஹாரன் ஒலிமாசு எழுப்புவதானாலும், இவையெல்லாம் ஒரு கலாச்சார சீர்கேடு, சமூக அக்கறையின்மை என்பதைத் தாண்டி, சமூக உறுப்பினர்களின் ஆழ்மனதில் ஏற்படும் வன்முறைப் போக்கின் வெளிப்பாடு என்று கருத இடமுண்டோ? சாலைகளில் வெளிப்படும் இப்படிப்பட்ட கலாச்சாரத்தில்தான், நாளைய வன்முறை சமூகத்திற்கான விதைகள் விதைக்கப்படுகின்றன.

எப்படியோ, சமூகத்தில் நிலவும் இப்படிப்பட்ட ஆரோக்கியமற்ற போக்கிலிருந்தும், வன்முறை மன நிலையிலிருந்தும் எப்பொழுது நாம் விடுபட்டுத் தெளிவு பெறுகிறோமோ, அப்பொழுது தான் நாம் உண்மையிலேயே நாகரீகம் அடைந்ததாகக் கருத இடமுண்டு. சகிப்புத்தன்மையும், சக உயிர்கள் மீதான உண்மையான அக்கறையும் கொண்ட சமூகம் எனும் இலக்கு நோக்கி நாம் பயணிப்போமாக!
நட்புடன்

அ.நாராயணன்