Saturday, July 16, 2011

ஜூலை 2011

நல்ல ஆங்கிலத்திற்கும் பொது அறிவிற்கும்
தவறாமல் இந்துநாளிதழ் படியுங்கள்!

அன்பு நண்பர்களே!
வணக்கம், ஆங்கிலப் புலமையை சிறப்பாக்கிக் கொள்ள வேண்டுமா? ஒரு தனியறையில் உட் கார்ந்து கொண்டு, “இந்து’’ ஆங்கில நாளிதழை ஆழ்ந்து படி, பின்னர் முடிந்தால் உரக்கப்படி- இதுதாண் என் பள்ளி ஆசிரியர் என் சிறுவயதில் எனக்குக் கொடுத்த அட்வைஸ். 
      
இதனையே, நானும் பல வருடங்களாக பலருக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். தி இந்து’’ இதழின் ஆங்கிலமும், செய்திகளின் நேர்த்தியும் அலாதியானது. உலகின் தலை சிறந்த 10 நாளிதழ்களில், “தி இந்து’’வும் ஒன்று என்றால் மிகையில்லை.
    
என்னதான், விதவிதமான விளம்பரங்கள் மூலம், கோடிகளை சம்பாதித்தாலும், இந்து நாளிதழும், அதன் சகோதர வார இதழான  ஃபிரண்ட்லைனும், இடதுசாரி கம்யூனிஸ்ட் அபிமானம் மிக்க இதழ்கள். அதனாலேயே, இந்து, எனது மனதிற்கு நெருங்கிய நாளிதழானது.
     
இந்தியாவின் மிகச்சிறந்த பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி, உலகின் பேர்பெற்ற அறிவு ஜீவிகள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் நோபல் விஞ்ஞானிகள் ஆகியோரின் கட்டுரைகள் இந்து நாளிதழில் தவறாமல் இடம்பெறும். இந்தியாவின் விடுதலைப் போராட்டம், விடுதலை பெற்ற பின் இந்தியா சந்தித்துள்ள ஒவ்வொரு சவால்கள், எல்லாவற்றையும் தி இந்து’’ ஆவணப்படுத்தியுள்ளது. 
   
ராஜீவ் காந்தி தொடர்புடைய போஃபோர்ஸ் ஊழல் முதல் இன்றைய விக்கிலீக்ஸ்வரை பலவற்றையும் அம்பலப்படுத்துவதில் முக்கிய பங்காற்றி இருக்கிறது. இந்திய விவசாயிகளின் கையறு நிலை பற்றிய சாய்நாத் கட்டுரைகள், ஆதிவாசிகளின் பிரச்சனைகள், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகள், தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகும் தலித்துகள், இவை எல்லாவற்றுக்கும் இந்து பக்கங்களில் இடமுண்டு.
    
உலகில் எங்கெல்லாம் மனித உரிமைகள் மீறப்படுகின்றனவோ, முக்கிய அரசியல் நிகழ்வுகள் நடக்கின்றனவோ, அவற்றை உலக வாசகர்களின், உலகத்தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்க்கும். இந்துவின் செய்திகள் மட்டுமல்ல, புகைப்படங்களும் செய்திகளுக்கு உரம் சேர்க்கும் பிரத்தியேக ரகத்தைச் சார்ந்தவை. அமெரிக்கா, இஸ்ரேல், அரபு நாடுகள், பாகிஸ்தான், சீனா, ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், ஆப்பிரிக்கா, எகிப்து, கோசோவா மட்டுமல்லாது உலகின் இண்டு இடுக்குகளில் நடக்கும் அத்து மீறல்களையும், இரட்டை வேடங்களையும், இனப்போர்களையும், பூகம்பங் களையும், சுனாமிகளையும், கொடுங்கோலர்களின் அராஜகங்களையும் பொதுப்பார்வைக்கு கொண்டு செல்லும். ஒவ்வொரு முக்கிய பிரச்சனைகளுக்கும் உடனுக்குடன் தெளிவான, நடுநிலையான தலையங்கம் எழுதத்தயங்கியதில்லை. 

இந்துவில் வரும் கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், தலையங்கங்களுக்கும் உலகத் தலைவர்களுக்கு மிகுந்த மதிப்பு உண்டு. உலகின் எல்லா நாடுகளிலும் இந்து நாளிதழுக்கு வாகர்கள் உண்டு. இந்து நாளிதழின் கட்டுரைகளும் புகைப்படங்களும் இந்திய மொழிகள் மட்டுமல்லாது உலகின் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்படும் ஊடகங்களிலும், வலைத்தளங்களிலும் மறுபதிவு செய்யப்படுகின்றன.


ஜூன் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, 3 நாட்கள் பர்மாவிற்கு சுற்றுப்பயணம் செய்த போது, உலகின் முற்போக்கு நாட்டு அரசுகளால் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியுள்ள, 20 வருடங்களாக கொடுங்கோல் ஆட்சி நடத்தி வரும் அந்நாட்டின் ராணுவ அரசுத்தலைவர்களை (Millitary junta) சந்தித்துவிட்டு, எதிர்க்கட்சித்தலைவரும், நோபல் அமைதிப்பிரிசு பெற்றவரும் மக்கள் ஆதரவு பெற்றவருமான 66 வயது பெண்மணி அவுன் சான் சு க்சீயை சந்திக்காமல் வந்தார்.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக தன்னை அறிவித்துக் கொள்ளும் இந்தியா, இந்த கொடுங்கோல் ராணுவத் தலைவர்கள், இந்திய நிறுவனங்களுக்குப் போடும் காண்டிராக்ட் எலும்புத் துண்டுகளுக்காக, ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக அப்பட்டமாக இரட்டை வேடம் போடுவது மிகவும் கண்டிக்கத் தக்கது.


வெளியுறவுத்துறை அமைச்சரின் விமானம் மீண்டும் இந்திய மண்ணில் தரை இறங்குவதற்குள் இந்து நாளிதழ் இது தொடர்பாக இந்திய அரசை வன்மையாகக் கண்டித்து தலையங்கம் தீட்டியது.இதை விட சிறப்பாக, ஒரு தார்மீகக் கோபத் துடன் நான்காவது தூண் செயல்பட முடியாது. இதுதான்  இந்துநாளிதழின் பெருமிதப்படத்தக்க அணுகுமுறை.


இத்தனை பெருமையும், பாரம்பரியமும் கொண்ட உலகின் மூலை முடுக்குகளில் நடப்பவை பற்றியெல்லாம் பொதுப்பார்வைக்கு கொண்டு வரும் இந்து நாளிதழ், இலங்கையில் போர் முற்றி இனப்படுகொலை நடந்த போதோ, முள்ளி வாய்க்கால் பேரழிவு ஏற்பட்டபோதோ, அதற்கு முன் அத்தகைய சூழல் ஏற்பட்ட போதோ, அதனை உலகின் கவனத்திற்கு கொண்டு செல்வதைத் தவிர்த்தது. தனது கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக்கொண்டது. போருக்கு பின்னர் கூட, தமிழர்கள் அடைக்கப்பட்ட முகாம்களில் (தேனும் பாலும் ஓடுவதாக கூறவில்லை என்பது மட்டுமே ஆறுதல்) எல்லாம் இன்ப மயம் என்பது போன்று ராஜபக்சேவின் நேர் காணல்களை வெளியிட்டது.


இன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா ஐ.நா. குழு உட்பட பலநாட்டுத் தலைவர்களும், பல உலகின் முன்னணி இதழ்களும் இலங்கை அரசும் ராணுவமும் போர் குற்றங்கள் செய்ததாகவும், மனித அழிப்பில் ஈடுபட்ட தாகவும் கிட்டத்தட்ட ஒத்துக் கொண்டுள்ள நிலை உள்ளது. ஆனால், இந்து நாளிதழ் மட்டும் இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கும், இந்திய அரசின் இலங்கை தொடர்பான தவறான கொள்கைகளுக்கும் மிக வெளிப்படையாக ஒரு பக்கபலமாகஇருப்பதற்கான காரண காரியங்கள் பற்றி நாம் யூகிக்க விரும்பவில்லை. ஆனால், இந்து இதழின் இந்த சறுக்கல், அதன் சரித்திரத்தின் மீது விழுந்த அழிக்க முடியாத நிரந்தரக்கறை. அதுதமிழினம் அழிக்கப்பட்ட போது ஆறாக ஓடிய குருதியின் கறை.


இந்து நாளிதழின் வீச்சை ஒப்பிடும்போது, பாடம் இதழ் ஒரு சுண்டைக் காய். ஆயினும், ஒரு பத்திரிக்கையாளன், “இந்துவின் நீண்ட கால வாசகன், அதோடு மானுடக் காதலன் எனும் நிலையில் இருந்து, “தி இந்துஇதழின் இரட்டை வேடத்தை, பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரான அணுகுமுறையை பாடம் இதழ் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். பாடம் இதழ் இந்த கண்டனத்தை பதிவு செய்யத் தவறியிருந்தால், எதிர்காலம் நம் இதழ் மீது காரித்துப்பியிருக்கும்.

ஆயினும் நண்பர்களே! சிறந்த ஆங்கிலச் சுவைக்கும், பொது அறிவிற்கும் இந்துநாளிதழ் தவறாமல் படியுங்கள்


மிக நட்புடன்
அ.நாராயணன்

Friday, July 15, 2011

மார்ச் 2011

    விடியுமா?
                          சுரண்டல்
                                                   நிற்குமா?

நம்மில் லட்சக்கணக்கான பேர் தினம் தினமும் ரயிலில் பயணம் செய்கிறோம். ரயில் நிலைய பிளாட்பாரங்களிலும், தண்டவாளங்களிலும் தினம் தினம் விழுகிற குப்பைகளையும், மலம் மற்றும் பிற கழிவுகளையும் அகற்றி  சுத்தம் செய்கிற  துப்புரவுப் பணி தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஒரு நிமிடம் நின்று எண்ணிப் பார்ப்பவர்களாய் நம்மில் எத்தனை பேர்  இருக்கிறோம்?
            
இந்தியாவின் மிகப்பெரிய அரசு  நிறுவனமாகிய ரயில்வே  துறையானது, சமீபத்திய பட்ஜெட்டைப் போலவே  ஒவ்வொரு முறையும் பயணிகளின் நலனுக்காக பல்வேறு வசதிகளையும் சலுகைகளையும் வழங்கி வருவது உண்மைதான் என்றாலும், இப்படி ஒரு நல்ல பெயரை வாங்க எண்ணுவதன் நிர்வாகப் பின்னணியில், உழைக்கின்ற அடிமட்டத் தொழிலாளிகளின் உழைப்பைச் சுரண்டுகின்ற “அங்காடித் தெரு”க் காட்சிகள் மறைந்திருப்பதும் உண்மையாகவே  உள்ளது.
      
காண்ட்ராக்டர்களால் ஏழைத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதை அந்த தொழிலாளிகள் நடப்பது என்னவென்றே அறியாமல் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக, தண்டவாளங்களில் துப்புரவுப்பணி செய்கிற ஏழைப் பெண் தொழிலாளிகளும் இருக்கிறார்கள் என்பதை அந்த ஏழைத் தொழிலாளிகளில் ஒரு சிலரை நேர்முகம் கண்டபோது அறிந்தோம்.
    
அந்தப் பெண்கள் எம்முடன் நேர்முகமாக பகிர்ந்துகொண்டு பதிவு செய்திருக்கும் உரையாடலை  நீங்களும் பார்வையிடுங்களேன்.
                                                                                                                                             (ஆசிரியர்)
கேள்வி: பளாட்பாரங்களில் ஒண்ணுக்கு ரெண்டுக்கு போயிருந்தாலும் அதெல்லாம் சுத்தம் செய்றதும்  நீங்கதானா?

பதில்: ஆமா, பேசஞ்சர்  வர்றாங்க போறாங்க. அதெல்லாம் சுத்தம் செய்யறதுக்கு நம்ம மாதிரி ஆள் போட்டு வேலை வாங்கறாங்க.

கேள்வி : மனித கழிவை மனிதரே  அள்ளக்கூடாதுன்னு சட்டம் இருக்குதே ? கையாலே  அள்ளறதுக்கு பதிலா கிளவுஸ் கொடுக்கலையா?

பதில் : அதெல்லாம் ஒண்ணும் கொடுக்கலே 
கேக்கறோம்  ஆனா கொடுக்கலே..

கேள்வி: உங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கறாங்க?
 
பதில்: 3000 ரூபாய், ஒரு நாளுக்கு 100. லீவு எடுத்தா கிடையாது.

கேள்வி :  எத்தனை நாள் வேலை?

பதில் :  எல்லா நாளும் வேலை தான். லீவே  கிடையாது. லேடீஷ்க்கு அந்த நாலு அஞ்சு ” நாள் வராம இருந்தா சம்பளம் கிடையாது.

கேள்வி : பேப்பர், பிளாஸ்டிக் பொறுக்கி போடறதில் காசு கிடைக்குமா?

பதில் : அதெல்லாம் இல்லை.

கேள்வி : மனித கழிவுகளை அள்ளுற வேலை கையாலே செய்யக்  கூடாதுன்னு சட்டம் இருக்கு தெரியுமா?

பதில் : தெரியாது.

கேள்வி : மெஷின் மூலம் எடுக்கலாமே?

பதில்: மெஷின் தரையிலே  விட முடியாதே . கையாலதான் அள்ளணும், மோட்டார் போட்டு தண்ணி அடிச்சி நாங்கலே  போட்டுருவோம். அதெல்லாம் காவாயிலே  எறங்கிடும். குப்பையெல்லாம் முறத்திலே  அள்ளிடுவோம் .

கேள்வி: ஏதாவது நோய் வந்தா செக்கப்  செய்யறாங்கள? சோப்  கொடுப்பாங்களா?

பதில்: இல்ல. அடிபட்டா கூட 10 ரூபா குடுத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பமாட்டாங்க. லீவு எடுத் துட்டு @பாக @வண்டியதுதான்.

கேள்வி : சோப் , சோப்  அலவன்ஸ் கொடுக்கணும்னு சட்டத்திலே  இருக்கே?
 
பதில்: அதெல்லாம் ஒண்ணுமில்லே. மாதம் மூணு நாள் சம்பளம் போக மீதிநாள் சம்பளம் தான். 20 நாளுன்னா 2000.

கேள்வி : பிள்ளைங்க படிக்கிறாங்களா?

பதில்: படிக்கிறாங்க. வேலைக்கு போறாங்க. என்னமோ  எப்படியோ  சம்பாரிக்கிறாங்க.

கேள்வி: அப்புறம் நீங்க ஏன் இந்த வேலையை  செய்யறீங்க?

பதில்: வருமானம் பத்தல. விக்கிற விலைவாசிக்கு ஒரு நாளைக்கி பால் சர்க்கரை எல்லாத்துக்கும் 200 ரூபாய் இருந்தாதான் புள்ள குட்டிக சாப்ட  முடியும்.

கேள்வி : வீட்டுக்காரருங்க என்ன செய்யராங்க ?

பதில்: சராயம் குடிச்சிட்டு ஒக்காந்திருக்காங்க. இல்லேன்னா வீட்டிலே  குப்பகொட்டிட்டு விட்டுட்டு போயிடறாங்க. குழந்தை பெத்துட்டும் விட்டுட்டுப் போறாங்க. கல்யாணம் பண்றதில்லே. தனியாவும் இருக்காங்க.

கேள்வி: அப்போ நீங்கதான் குடும்பத்துக்கு தலைவன். கணவன் இல்லே . அடுத்த தலைமுறையாவது டாக்டர், எஞ்சினீயர் ஆகணும், கார் வாங்கணும், வீடு வாங்கணும்னு ஆசை  இல்லையா?

பதில் (ஒரு பெண்): அதெல்லாம் ஆசை  படக் கூட முடியாது. அந்த அளவுக்கு கனவு இல்ல.  வேணும்னா எக்ஸ்போர்ட்... அந்த மாதிரி போகலாம். புள்ளைங்க பசி பட்டினி இல்லாம சாப்பிடனும். கட்டறதுக்கு துணிமணி இருந்தா போதும். கடவுள் புண்ணியத்துல வேற எதுவும் வேணாம்.

மற்றொரு பெண் : ஒரு பக்கத்துல அந்த ஆசை  இருக்கு. ஆனா வருமானம் பத்தல. படிப்பு இல்லியே? படிக்கிறாங்க. பெயிலா போயிடுத்தே ? ஏதோ கம்ப்யூட்டர், கம்பெனி மாதிரி வேலைக்கு போகலாம். காலேஜ் ஆசை  எல்லாம் இல்லை. ப்ளஸ் டூக்கு மேல  டிகிரி படிக்ககா” வேணுமே .

இன்னொரு பெண்: இந்த மாசத்தில இருந்து விதவைக்கு பென்ஷன் 500 ரூபா வருதாம். வாழா வெட்டிக்கு பத்து பைசா  கூட பிரயோசனம்  இல்லை, கேட்டா, வீட்டுக்காரன் ஆக்சிடென்ட் ஆகி செத்துட்டானு  சர்டிபிகட்  கேக்கறாங்க. வாழாவெட்டியா இருக்கிறவங்களுக்கும் ஏதாவது நடவடிக்கை எடுத்து செய்யணு. ஆனா செய்ய  மாட்டேங்க்ரங்க . நாங்க எப்படி ரெண்டு குழந்தைங்க வச்சிகிட்டு விக்கிற வெலவாசிக்கு குடும்பம் நடத்த முடியும்? இதை யெல்லாம் டி.வி. பெட்டியில  போட்டு காட்டணும்.

கேள்வி : சரி, உங்களுக்கு வேறு என்ன பிரச்சினை? 

ஒரு பெண் : புள்ளைங்க கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்காங்க. ஒரு புள்ள இன்னிக்கோ  நாளைக்கோ  கல்யாணம் பண்ற நெலையில இருக்கு. 

கேள்வி : பொண்ணுங்க? 

பெண் : இல்லை சார் . ஆண் பிள்ளைங்களா இருக்கிறால பிரச்சினை இல்ல. ஆளாக்கி விட்டா அவனவன் பொண்டாட்டி புள்ளைங்கன்னு போயிடுறான். அப்புறம் தாய்  எப்படி பொழைப்பா? கஷ்டப்பட்டு வளர்த்த அம்மா ஆச்சேன்னு , தாய்க்கு  ஒரு பிடி சோறுபோட்டு  பெத்த புள்ளை 10 ரூபா கையில குடுத்தா அதுக்கு அவன் பொண்டாட்டி சண்டை பிடிப்பா. நாங்க அனாதை மாதிரி நின்னு தவிக்கிறோம்.

கேள்வி : இது எங்கேயும்  பணக்கார வீட்டிலேயும் இருக்கிறதுதான். சில பேர் பெத்தவங்களை ஆசிரமத்திலே  விட்டுட்டு போயிடறாங்க. சரி, இந்த
வேலையிலே  வேற ஏதாவது பிரச்சினை இருக்கா?

ஒரு பெண்: வேற ஒண்ணும் இல்ல. வந்தோமா குப்பையை வாரி பெருக்குனோமா, பீ இருந்தா கழுவி விட்டுட்டு போனமான்னு அதுதான் எங்களுக்கு.

வேறு பெண்: ஒரு அடிபட்டா கூட எங்களுக்கு பாதுகாப்பு இல்லே . 10 ரூபா கொடுக்க மாட்டாங்க. அப்பப்போ  உடம்பு சரியில்லாம போகுது. வழுக்கி விழுந்தா இந்தா 10 ரூபான்னு எங்கள தாங்கறதுக்கு ஆளு கெடையாது. இஷ்டம் இருந்தா செய்யுங்க, இல்லாட்டி போங்க. நீங்க இல்லே ன்னா, கொண்டக்காரி இல்லன்னா, பின் ஊக்குக்காரி வருவான்னு சொல்லறாங்க. அந்த அளவுக்கு டேலண்டா வேலை வாங்குறாங்க. சூப்பர்வைசர் கையிலதான் பதவியே  இருக்கு. சம்பளம் கொடுக்கற அன்னிக்கு அவரை கையில புடிக்க முடியாது. சம்பளம் கொடுக்கற ஓணரு எங்கயோ  இருக்காரு.

கேள்வி : சம்பளம் எவ்வளவு? அதுக்கு அக்ரிமென்ட் இருக்கா?
ஒரு பெண்: சம்பளம்னு போட்டா 5000 கொடுக்கணும். ஆனா 3000 தான் கொடுப்பாங்க. கையெழுத்து 5000 வாங்குவாங்க.

வேறு பெண் :  அதெல்லாம் தெரியாது. கையெழுத்து போட்டு வாங்கறதோடு சரி.

என்ன வாசகர்களே! பயணங்களின் போது ரயில்கள் நிலையத்தில் நிற்கும் நேரங்களில் கழிவறையில் மலம் கழிப்பதை தவிர்க்கும்படி ரயில்வே துறை பயணிகளுக்கு விடுக்கும் @வண்டுகோளை மறக்காமல் கருத்தில் கொண்டு கௌரவிப்பதற்கு மேற்படி  ஏழைத் தொழிலாளிகளின் களங்கம் அறியா  இந்த உரையாடல்கள் சற்றுத்  தூண்டுதலாக இருக்கின்றன அல்லவா?
                                                                                                                
 நட்புடன் 




                                                                                                             
அ.நாராயணன்.

Tuesday, July 12, 2011

பிப்ரவரி 2011 பாவம் அந்த குப்பமாளுக்கு கிடைக்காது....

            இலவச அரிசி, கலர் டிவி, மிக்சி,
                              கிரைண்டர், பேன், அரைபவுன், வீடு, ஆடு 
                      பாவம் அந்த குப்பமாளுக்கு கிடைக்காது....              

அன்பு நண்பர்களே!                              
              வெளிப்படையாக உண்மையைச் சொல்ல வேண்டுமானால், இம்மாத இதழில் கவனம் செலுத்தவே முடியவில்லை. கண்ணியமான தேர்தலுக்கான கூட்டமைப்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டது மட்டுமல்ல காரணம். எவற்றை வாசகர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வது, எந்த கட்டுரையை முதன்மைப்படுத்துவது என்று பெருங் குழப்பம்.

சூப்பர் ஹைடெக் ஜப்பான், நில நடுக்கம், அதைத் தொடர்ந்து சுனாமி ஆகிய இயற்கையின் பெரும் சீற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாது போனது பற்றியா? அதனால் அங்குள்ள அணு உலைகளுக்கு ஏற்பட்டுள்ள மோசமான பாதிப்புகளைப் பற்றியா? உணவு, தண்ணீர், இருப்பிடம் போன்ற அத்தியா வசிய தேவைகளுக்காக பசியிலும் துக்கத்திலும் திண்டாடிய போது கூட, அம்மக்கள் ஒருவொருக் கொருவர் முட்டி மோதிக்கொள்ளாமல் பொறுமையாக ஒழுங்காக வரிசையில் நின்று நிவாரணப் பொருட் களை பெற்றுக் கொண்ட பண்பைப் பற்றி எழுதுவதா?
லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போர், அதைத் தொடர்ந்து பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கு ராணுவத் தாக்குதலைத் தொடங்கி விட்டு விழி பிதுங்கி நிற்பது பற்றியா? தலைப்புச் செய்திகளாக இந்திய உள்நாட்டு அரசியல் பற்றி தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் பத்திகள் பற்றி எழுதுவதா? 2ஜி ஸ்பெக்ட்ரம் முதலான ஊழல் விவாதங்களையாகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் உட்பட பல ஊழல் வழக்குகள் நீர்த்துப் போய்க் கொண்டிருப்பதைப் பற்றியா? பிப்ரவரி மாத கடைசியில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அளித்த 2011-12ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் பகுப்பாய்வை எடுத்துக் கொள்ளலாமா? அந்த நிதிநிலை அறிக்கை பற்றி விவாதம் நடத்தாமல், எல்லாக் கட்சிகளும் பாராளுமன்றத்தில் தொடர்ந்து நடத்தி வரும் அக்கப்போர் பற்றியா? அந்த ரகளையின் சந்தடி சாக்கில், பாராளுமன்றம் மூலம் தங்களுக்கு சாதகமானவற்றை, சக்திவாய்ந்த வர்கள் சாதித்துக் கொள்வது பற்றியா?

தொடர்ந்து சுற்றுச்சூழலை நாசமாக்கும் விதத்திலேயே எல்லோரும் எல்லாவற்றையும் செயல்படுத்தி வருவது பற்றியா? தமிழகத்தில் தேர்தலில், இலவசங்கள் என்ற பாம்பை, மக்களிடம் கயிறாகத் திரித்துக் காண்பித்து, கட்சிகள் ஓட்டுக் களவாடல் நடத்துவது பற்றியா? அப்படி ஓட்டுக் களைக் களவாடி, பொது சொத்துக்களை பெருமளவில் கூட்டுச் சேர்ந்து கொள்ளை யடிக்கவும், அதற்கான அதி காரத்தைக் கைப்பற்றவும் எடுத்து வரும் கடும் முயற்சிகளைப் பற்றியா? ஏற்கனவே கொள்ளையடித்தவர்கள் தாங்கள் மாட்டிக்கொள்ள கூடாது என்பதாலும், கொள்ளையடித்தனவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும், எப்படியாவது ஆட்சி கைவிட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகவும் தரந்தாழ்ந்து வெறி பிடித்த மாதிரி தேர்தல் வேலை செய்வதைப்பற்றியா? கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர, மற்ற கட்சி வேட் பாளர்களில் மிகப் பலர், கட்சியில் உள்ளவர்களாக இல்லாமல், காசுவைத்திருப்பவர்கள் ரேஸ் குதிரை மேல்  பணம் கட்டுவது போன்று, கட்சிகள் சார்பாக நிற்பதற்கு விண்ணப்பித்து, பண பலம், சாதி பலம் ஆகிய இரு தகுதிகள் அடிப்படையில் மட்டும் வேட்பாளர்களாக, கட்சித் தலைமைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அவலத்தைப் பேசவா?
மழையில் முளைக்கும் காளான்களைப் போன்று தேர்தல் நேரத்தில் திடீரென்று முளைவிட்டுள்ள சாதிச்சங்கங்கள், சாதிக்கட்சிகள் எனும் நச்சுக் காளான்கள் பற்றி எழுதலாமா? தமிழகம் முழுவதும் மக்களை, குறிப்பாக கல்லூரி இளைஞர்களை சந்தித்து உரையாடிய அனுபவத் தொகுப்புகள் பற்றியா? பெரும்பாலான கல்லூரி இளைஞர்களிடம் அரசியலைப் பற்றியும், பொதுவான ஜனநாயக செயல்பாடுகள் பற்றியும் உள்ள கோபம் நிறைந்த, ஆனால் புரிதலற்ற தன்மை பற்றி எழுதலாமா? அரசியலமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வரலாறு காணாதவகையில் திட்டமிட்டு கண்ணியமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முயற்சி செய்தாலும், அவற்றையெல்லாம்  நூதன வகைகளில் முறியடித்து தேர்தல் ஜனநாயகத்தை கேவலப்படுத்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டுகளம் இறங்கியவர்களைப் பற்றியா? இந்தக் குழப்பங்களையெல்லாம் தாண்டி, உலகக் கோப்பை கிரிக்கெட், தேர்தல் என்று உச்சகட்ட ஜுர வேகத்தில் இருக்கும் மக்களிடம் வேறு எதையாவது எழுதினால், கரை சேருமா என்ற புதுக்குழப்பம் வேறு! பத்திரிக்கை நடத்துவதும், வியாபார ரீதியில் இல்லாமல் அதில் எவற்றையெல்லாம் பற்றி வாசகர் களிடம் கொண்டு சொல்வது என்பதும் திகைப்பை ஏற்படுத்தும் அனுபவம் என்பது மட்டும் தெளிவாகக் புரிகிறது
ஆயினும், இந்த குழப்பங்களையெல்லாம் தாண்டி, 32வயது குப்பம்மாளின் கதை என் கவனத்தை ஈர்க்கிறது. அவளைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தபோயர்எனும் பட்டியல் இனத்தில் (scheduled tribe) பிறந்தவள் குப்பம்மாள். ஆட்டுக்கல், அம்மிக் கல் செய்வதும், கல்லுடைப்பதும் இந்த இனமக்களின் தொழில். பல மாவட்டங்களில் கல்குவாரி களில் கொத்தடிமைகளாக உள்ளவர்கள் இம்மக்களில் பலர்.
கிருஷ்ணகிரியில் இருந்து, பஞ்சம் பிழைப்பதற்காக கணவனுடன் கோயம்பத்தூர் பகுதிக்கு வந்து, அங்குள்ள தனியார் இடத்தில் மற்ற விளிம்பு நிலை மக்களைப் போல, குடிசை போட்டு வாழ்பவள் குப்பம்மாள். மூன்று பெண் குழந்தைகளையும், இரு ஆண் குழந்தைகளையும் பெற்ற குப்பம்மாள், ஆறாவதாக ஒரு ஆண் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்த நிறைமாத கர்ப்பிணி. கணவனும் மனைவியும் கூலி வேலை பார்ப்பவர்கள், அவளது குப்பத்தில் உள்ள மற்ற பெண்களைப் போன்றே, குப்பம்மாளும் தினமும் அதிகாலை 5 மணிக்கே எழுந்து ஒரு கிலோமீட்டர் தூரம் கடந்து, பொழுது விடிவதற்கு முன்பாக ரயில் பாதையருகே காலைக் கடன்களை முடிக்க மறைவிடத்தைத் தேடு வது வழக்கம். 

தீடீரென்று ரயிலொன்று கடந்து சென்றால் வெட்கப்பட்டு அவசரமாக மானத்தைக் காக்கும் முயற்சியில் எழுந்து நிற்பதும், ரயில் கடந்த பின் உட்கார்ந்து முந்தைய நாள் சாப்பிட்ட கழிவை வெளியேற்ற முயற்சிப்பதும், அந்த அவசரத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு, மலக்கழிவு வெளியேற மறுப்பதோ அல்லது ஒயடியாக பேதி ஏற்படுவதோ தினசரி அனுபவம்.

இது குப்பம்மாளுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கோடானு கோடி பெண்கள், தாய்மார்கள், வளர் இளம்பெண்கள் இவ்வாறு சபிக்கப்பட்டவர்கள். கிராமமாக இருந்தாலும் சரி, நகர்புற குடிசைப் பகுதிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ஏழை யாகப் பிறந்த, தலித்தாகப் பிறந்த குற்றத்திற்காக இப்படி. சூரியன் எழும் முன்னே எழுந்து வயிற்றில் உள்ள 9 மாத குழந்தையைச் சுமந்த படி நடந்து, தண்டவா ளப் பாதையில் மலம் கழிக்க முயன்ற போபாது, பிரசவ வலி ஏற்பட்டு துடித்துத் தன்னந்தனியாக ஆண்பிள் ளையை பெற்றாள் குப்பம்மாள், உயிர் போகும் பிரசவ வலியைத் தாங்காமல் ஆயாசம் ஏற்பட்டு மயக்க முற்று தண்டவாளத்தின் மீது சாய்ந்தாள் குப்பம்மாள்.

தேனிலவுத் தம்பதிகளையும், தொழிலதிபர்களையும், வியாபாரிகளையும், அரசு அலுவலர்களையும், வேட்புமனு தாக்கல் செய்ய விரும்பியவர்களையும், கட்சித் தொண்டர்களையும், .சி. கோச்சுகளில் போர்த்திக் கொண்டு  தூங்கிய பாக்கியசாலிகளையும், அன்ரிசர்வ்டு பெட்டிகளில் திணித்துக் கொண்டு தூக்கமில்லாமல் விழித்துக்கொண்டு, சிறுநீர் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் குப்பம்மாள் போன்ற கூலிகளையும் இழுத்துக் கொண்டு விரை வாக விரைந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், தண்டவாளத்தில் மயங்கிக்கிடந்த குப்பம்மாளை சிதைத்து சின்னா பின்னமாக்கி மறைந்தது. ஒன்றரை மணிநேரம் தாய்ப்பாலில்லாமல், மூச்சும் திணறியபடி கதறிக்கொண்டிருந்தது அவள் பெற்ற 9 மாத ஆண் குழந்தை. அந்தப் பக்கம் ஏழு மணிக்கு வந்தவர்கள் குழந்தையைக் கண்டெடுத்து, 108 ஆம்புலன்சுக்கு சொல்லி, குழந்தை இப்பொழுது அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

கட்டுரை எழுதும்வரை உயிரோடு உள்ளதா தெரியவில்லை. கிருஷ்ணகிரி யிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த அவள், கவுரவமாக மலம் கூட போக முடியாத நிலைக்கு யார் காரணம்? குப்பத்திற்கு அருகில் பொதுக்கழிப்பிடம் இல்லையா? அல்லது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்க முடிந்த அவள், கக்கூஸ் போக கட்டணக்காசு கொடுக்க முடியாமல், இருட்டுகலையும் முன் காடு கழனி செல்ல வேண்டி வந்ததா? மன்மோகன்சிங்கும், சிதம்பரமும், அத்வானியும், தமிழகத் தலைவர்களும் சேர்ந்து உருவாக்கியுள்ள ஒளிரும் இந்தியாவில் உள்ள ஒளிரும் தமிழகம், குப்பம்மாள்களைப் பலியாகக் கேட்கின்றதா?

ஆறாவது முறை முதல்வராகும் வாய்ப்புக்கு முயன்று வரும் முதியவர் விநியோகித்த இலவசத் தொலைக்காட்சிப் பெட்டியையும், விநியோகிக்க விரும்பும் மிக்சியையும், கிரைண்டரையும், கர்ப்பிணிப்பெண்களுக்கான 6000 ரூபாய் உதவித் தொகையையும், அனுபவிக்கக் கொடுத்து வைக்காமல், ஒரு கக்கூஸ் பிரச்சனை அவளது உயிரைப் பறித்தது நியாயமா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள இலவச கட்டாயக் கல்வி அவளது 6 குழந்தைகளுக்கும் கிடைக்குமா? புரட்சித்தலைவி போட்டி போட்டுக் கொடுக்க நினைக்கும் இலவச மண்ணெண்ணையும், இருபது கிலோ இலவச அரிசியும் இக்குழந்தைகளின் பசியாற்றுமா? தலைவர்கள் அறிவித்துள்ள இலவச லேப்டாப் மடி கணினியை வாங்கும் தகுதியான 11ம் வகுப்பு போகும் வரை, இந்த 6 குழந்தைகளில் எத்தனை பேர் உயிருடன் இருப்பார்கள்? அல்லது தங்கத்தலைவி கட்ட நினைக்கும் ஆதரவற்றோர் இல்லங்களில் ஏதாவது ஒன்றில் இந்த ஆறு குழந்தைகளும் சேருவார்களா

 நட்புடன்
அ.நாராயணன்.